தங்கம் விலையானது கடந்த வாரத் தொடக்கத்தில் சரிவில் ஆரம்பித்து, ஏற்றத்தில் முடிவடைந்துள்ளது. குறிப்பாக கடந்த வார இறுதியில் 10 கிராமுக்கு 524 ரூபாயாக அதிகரித்து, 47,925 ரூபாய் என்ற லெவலில் முடிவடைந்துள்ளது. கடைசி அமர்வில் மட்டும் 1.11% ஏற்றத்தில் முடிவடைந்துள்ளது.
மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்துள்ள தங்கம் விலையானது, வரும் வாரத்தில் அதிகரிக்குமா? அல்லது குறையுமா? சந்தை நாளை தொடங்கவுள்ள நிலையில் வாங்கலாமா? வேண்டாமா? நிபுணர்களின் கணிப்பு என்ன? வாருங்கள் பார்க்கலாம்.
சர்வதேச அளவில் நிலவி வரும் ஓமிக்ரான் அச்சத்திற்கு மத்தியில், தங்கம் விலையானது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
ரூபாய் மதிப்பு சரிவு
ரூபாயின் மதிப்பானது தொடர்ந்து சரிவினைக் கண்டு வரும் நிலையில், பணவீக்கத்தின் அச்சம் நிலவி வருகின்றது. இதன் காரணமாக பாதுகாப்பு புகலிடமான தங்கத்தின் விலையானது அதிகரித்து வருகின்றது. இதனை இன்னும் ஊக்குவிக்கும் விதமாக தொழிற்துறையானது மீண்டு வந்து கொண்டுள்ள நிலையில், தங்கம் மற்றும் வெள்ளியின் தேவையானது அதிகரிக்கும் என அதிகரிக்கப்படுகிறது.
ஓமிக்ரான் அச்சம்
சர்வதேச அளவில் ஓமிக்ரான் குறித்த அச்சமும் நிலவி வருகின்றது. இது மேற்கொண்டு இரண்டாம் அலை போல தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கடும் கட்டுப்பாடுகள் வரலாமோ? என்ற எதிர்பார்ப்பும் நிலவி வருகின்றது. இதற்கிடையில் முதலீட்டு ரீதியாக தங்கத்தின் தேவை கூடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த இலக்கு
தங்கம் விலையானது அவுன்ஸூக்கு 1800 டாலர்களுக்கு கீழாக வர்த்தகமாகி வரும் நிலையில், அடுத்த இரண்டு மூன்று வாரங்களுக்குள் தங்கம் விலையானது அவுன்ஸூக்கு 1830 டாலர்களை தொடலாம் என மோதிலால் ஆஸ்வால் நிறுவனம் கணித்துள்ளது. இதே எம்சிஎக்ஸ் சந்தையில் 10 கிராமுக்கு 48,800 ரூபாய் முதல் 49,000 ரூபாயினை தொடலாம் என கணித்துள்ளது. இது கடந்த வார முடிவில் 47,900 ரூபாய் என்ற லெவலில் முடிவடைந்துள்ளது.
முக்கிய சப்போர்ட்
தங்கத்தின் தற்போதைய லெவலில் அடுத்த முக்கிய சப்போர்ட் லெவல் 1760 டாலர்களாக உள்ளது. அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களில் ஸ்பாட் மார்கெட்டில் தங்கம் விலையானது 1915 டாலர்கள் வரையில் செல்லலாம். மேலும் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ருபாயின் மதிப்பானது மேற்கொண்டு சரிவடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த காலகட்டத்தில் தங்கத்தின் விலையுடன் ஒப்பிடும்போது வெள்ளியின் விலை அதிகமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச அளவிலான பதற்றம்
சர்வதேச அளவில் ஓமிக்ரான் அச்சம் காரணமாக பெரும் பதற்றமான நிலையே இருந்து வருகின்றது. இதன் காராணமாக பாதுகாப்பு புகலிடமான தங்கம் விலையில் அது எதிரொலிக்கலாம் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும் பணவீக்கம் குறித்த அச்சமும் சந்தையில் நிலவி வருகின்றது. இதன் காரணமாக தங்கம் விலையானது மேற்கொண்டு நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்ற எண்ணமும் நிலவி வருகின்றது.
வட்டி விகித மாற்றம்
அமெரிக்க ஃபெடரல் வங்கியானது வட்டி விகிதத்தினை விரைவில் அதிகரிக்கலாம் என்ற நிலை இருந்து வருகின்றது. எனினும் கொரோனா காரணமாக இதில் ஒரு நிலையற்ற தன்மையே இருந்து வருகின்றது. மேலும் கொரோனா குறித்தான உலக சுகாதார மையம் சரியான வழிகாட்டுதலை கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.