இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான ஊழியர்களுக்கு பயனளிக்கும் வகையில், ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பான ஈபிஎஃப்ஓ சம்பள உச்சவரம்பை உயர்த்தியுள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கு பின் நீண்ட காலமாக 15,000 ரூபாய் என்ற அளவிலேயே இருந்து வந்த இந்த சம்பள உச்சவரம்பு தற்போது 25,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மாதமே அமலுக்கு வந்துள்ள இந்த அதிரடி மாற்றத்தால் ஊழியர்களின் சேமிப்பு, பென்ஷன் மற்றும் காப்பீடு உள்ளிட்ட பல அம்சங்களில் பெரும் மாற்றம் ஏற்படவுள்ளது.
இதுநாள் வரை 15,000 ரூபாய் முதல் 25,000 ரூபாய் வரை அடிப்படை சம்பளம் பெற்று, கட்டாய ஈபிஎஃப்ஓ வரம்பிற்கு வெளியே இருந்த லட்சக்கணக்கான ஊழியர்கள் இனி கட்டாய ஈபிஎஃப்ஓ வரம்பிற்குள் கொண்டுவரப்படுவார்கள். இதன் மூலம் அவர்களுக்கு பிஎஃப் சேமிப்பு, ஈபிஎஸ் பென்ஷன் பாதுகாப்பு மற்றும் EDLI காப்பீட்டு பாதுகாப்பு போன்ற சமூக பாதுகாப்பு திட்டங்கள் சட்டப்பூர்வமாக கிடைக்க வழி வகை செய்யப்பட்டுள்ளது. சுமார் 51 லட்சம் முதல் 1 கோடிக்கும் அதிகமான புதிய தொழிலாளர்கள் இதனால் பலன் அடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சம்பள உச்சவரம்பு உயர்த்தப்பட்டுள்ளதால், பிஎஃப் குறைந்தபட்ச மாதாந்திர பங்களிப்பும் அதிகரிக்கும். முன்னதாக, 15,000 ரூபாயில் இருந்து 12% என்ற கணக்கீட்டின்படி ஊழியரும் நிறுவனமும் தலா 1,800 ரூபாயை பிஎஃப் பங்களிப்பாக செய்தனர். தற்போதைய புதிய வரம்பான 25,000 ரூபாய் படி, 12% பங்களிப்பு தொகையானது 3,000 ரூபாயாக உயர்த்தப்படும் . அதாவது ஊழியர் மற்றும் நிறுவனம் தலா 3,000 ரூபாய் பிஎஃப் பங்களிப்பு செய்ய வேண்டி இருக்கும். இதன் காரணமாக, இரு தரப்பிலும் மாதாந்திர பங்களிப்பு 1,200 ரூபாய் அதிகரிக்கும்.
எனவே 15,000 முதல் 25,000 ரூபாய் வரை அடிப்படை சம்பளம் பெறும் ஊழியர்களின் கையில் கிடைக்கும் மாத சம்பளம் மாதத்திற்கு சுமார் 1,200 ரூபாய் வரை குறையக்கூடும். இருந்தாலும் இந்த தொகை சேமிப்பாக உங்களின் பிஎஃப் கணக்கிலேயே பாதுகாப்பாக சேரும். அதுவும் வட்டியோடு மொத்த தொகையாக வரும்.
சம்பள உச்சவரம்பு உயர்த்தப்பட்டதால் நிறுவனங்களுக்கு தான் கூடுதல் செலவினம் ஏற்படும். நிறுவனங்கள் கூடுதல் பிஎஃப் பங்களிப்பு செலவை ஏற்க வேண்டியிருக்கும் அல்லது புதிய விகிதங்களுக்கு ஏற்ப CTC-ஐ மாற்றியமைக்க வேண்டியிருக்கும். இனி மாதந்தோறும் பிஎஃப் கணக்கிற்கு செல்லும் தொகை அதிகரிப்பதால், நீண்ட கால அடிப்படையில் ஊழியர்களின் ஓய்வூதிய கார்பஸ் பலமடங்கு அதிகரிக்கும்.
முந்தைய முறையில் சேமிக்கப்பட்ட தொகையை விட, புதிய 25,000 ரூபாய் உச்சவரம்பு முறையில் நம் கணக்கில் அதிக பணம் பங்களிப்பாக் செய்யப்படும் எனவே நமக்கு கிடைக்கும் வட்டியும் அதிகரிக்கும். 30 ஆண்டுகள் தொடர்ந்து பங்களித்தால், ஓய்வூதியக் காலத்தில் கிடைக்கும் மொத்த தொகை கணிசமாக உயரும்.
பிஎஃப் கணக்கில் இருக்கும் பணத்தின் அளவும் இனி அதிகமாகும். எனவே பிஎஃப் பலன்களை முழுமையாக பெற வேண்டும் என்றால் தனியார் நிறுவன ஊழியர்கள் UAN எண் சரியாக இணைக்கப்பட்டுள்ளதா என்பதை அப்டேட் செய்து கொள்ள வேண்டும். உங்கள் கணக்கில் பிஎஃப் பணம் வரவு வைக்கப்படுகிறதா வட்டி வருகிறதா என்பதை எல்லாம் அவ்வப்போது சரிபார்க்க வேண்டும். பிஎஃப் கணக்கில் நாமினி , ஆதார் இணைப்பு, வங்கி கணக்கு உட்பட அனைத்து தகவல்களையும் அப்டேட்டாக வைத்திருப்பது அனைத்து பலன்களும் உரிய நேரத்தில் கிடைப்பதை உறுதி செய்யும்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications


