அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போரில் ஏஐ முக்கிய பங்காற்றி இருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஏஐ தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் முன்னணி நிறுவனமாக இருக்கும் அமெரிக்காவின் ஆந்திராபிக் (Anthropic) நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இந்த அறிக்கையின்படி, ஈரான் மற்றும் சீனா போன்ற நாடுகள் ஆந்திராப்பிக்கின் புகழ்பெற்ற ஏஐ மாடலான க்ளாட் (Claude)-ஐ உளவு பார்ப்பதற்கும், தந்திரமான திட்டங்களை வகுப்பதற்கும் பயன்படுத்தி உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. பல்வேறு நாடுகள் மற்றும் அரசு சார்ந்த அமைப்புகள் தங்களது ஏஐ மாடல்களை தவறாக பயன்படுத்தி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என அதிர்ச்சியூட்டும் உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளது.

ஈரானில் பிப்ரவரி 28 முதல் போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் அமெரிக்காவின் முக்கிய கடற்படை தளங்களை குறிவைக்கவும், ராணுவ ரீதியான தாக்குதல்களை திட்டமிடவும் ஈரான் தரப்பு க்ளாட் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்த முயன்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நவீன தொழில்நுட்பங்களை ராணுவ தேவைகளுக்கும் உளவு வேலைகளுக்கும் பயன்படுத்தும் நாடுகளின் பட்டியலில் ஈரான் முன்னணியில் இருப்பது இந்த அறிக்கையின் மூலம் அம்பலமாகியுள்ளது.
அதுமட்டுமில்லாமல் ஈரானின் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதி சடங்குகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய பாதுகாப்பு மற்றும் அரசியல் நகர்வுகளை திட்டமிடுவதற்கும் ஈரான் ஏஐ மாடல்களை சார்ந்திருந்ததாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய பெரும் நிகழ்வுகளை தங்களுக்கு சாதகமாக மாற்றிக்கொள்ளவும், வியூகங்களை வகுக்கவும் ஏஐ தொழில்நுட்பத்தின் உதவியை ஈரான் பெற்றுள்ளது.
இதற்கிடையே தங்களது ஏஐ தொழில்நுட்பம் தவறான மற்றும் சட்டவிரோத செயல்களுக்கு பயன்படுத்தப்படுவதை கண்டறிந்த ஆந்திராபிக் நிறுவனம், ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலகட்டத்தில் இது போன்ற பல அரசு ஆதரவு உளவு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை முறியடித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
ஈரான் மட்டுமின்றி, சீனாவின் சில தொழில்நுட்ப நிறுவனங்களும் முறையற்ற போலி கணக்குகளை பயன்படுத்தி க்ளாட் ஏஐ-யிடம் இருந்து பதில்களை திருடி, அந்த தரவுகளை கொண்டு தங்களது சொந்த ஏஐ மாடல்களை மேம்படுத்தியதாக ஆந்திராபிக் குற்றம்சாட்டியுள்ளது. இது அமெரிக்காவின் ஏஐ தொழில்நுட்ப திருட்டு மற்றும் பாதுகாப்பு ஒப்பந்த மீறலாக குற்றம்சாட்டியுள்ளது.
ஏஐ தொழில்நுட்பம் மனிதர்களுக்கு உதவியாக இருக்கும் என கூறி தான் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. ஆனால் அண்மை காலமாக இணைய போர், உளவு பார்த்தல் மற்றும் ராணுவ திட்டமிடல் என தவறாகவும் பயன்படுத்தப்படுவது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. குறிப்பாக ஈரான் அமெரிக்க தளங்களை குறிவைக்க அமெரிக்க நிறுவனத்தின் ஏஐ மாடலையே பயன்படுத்தியது உலகளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே ஏஐ ஆய்வுகளுக்கு தடை விதிக்க வேண்டும் ஏஐ கருவிகள் மனிதர்களை மிஞ்சும் அளவுக்கு வளர்ந்து வருகின்றன என தொடர்ச்சியாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. ஆந்திராபிக், ஓபன் ஏஐ நிறுவனங்களில் பணி புரிந்த பலரும் மனித குலத்திற்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையிலான ஆய்வுகள் நடக்கின்றன, ஏஐ மனிதர்களை மிஞ்ச போகிறது என எச்சரிக்கின்றனர். இந்த சூழலில் போரிலும் ஏஐ என்பது மிகப்பெரிய எச்சரிக்கை மணியாக அமைந்துள்ளது.


Click it and Unblock the Notifications


