ஒரு பிறந்த குழந்தையை ஒரு உலோகத்தோடு ஒப்பிட்டு கொஞ்சுவார்களா? கொஞ்சுவார்கள். அந்த உலோகத்தின் பெயர் தங்கம்.
"வாடி / வாடா என் தங்கமே" என நம் அம்மாக்களே நம்மைக் கொஞ்சி இருப்பார்கள். அந்த அளவுக்கு தங்கம், நம் இந்தியர்களின் நாடி நரம்புகளில் பதிந்துவிட்டது.
அப்படிப்பட்ட தங்கத்தின் விலை கடந்த 18 மாதங்களாக தொடர்ந்து டாப் கியரில் பறந்து கொண்டே இருக்கிறது. இப்போது கொஞ்சமாக நம் மீது இரக்கம் காட்டி விலை குறைந்து இருக்கிறது போல. அந்த Gold விலை விவரங்களையும், எதிர்காலத்தில் தங்கம் விலை என்ன ஆகப் போகிறது என்பதையும் தான் பார்க்கப் போகிறோம்.
சென்னையில் தங்கம் விலை 24 கேரட்
கொரோனா வைரஸ் ஏதோ விருந்துக்கு வந்தது போல குடி இருக்கும் நம் சென்னையில், 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று 50,620 ரூபாய்க்கு விற்பனை செய்து இருக்கிறார்கள். கடந்த ஜூலை 01, 2020 அன்று இதே 24 கேரட் 10 கிராம் தங்கத்தின் விலை வாழ் நாள் உச்சமாக 50,950 ரூபாய்க்கு விற்பனை ஆனது. அதோடு ஒப்பிட்டால் நேற்று சுமாராக 330 ரூபாய் விலை இறங்கி விற்பனை ஆகி இருக்கிறது.
சென்னையில் தங்கம் விலை 22 கேரட்
அதே போல 22 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 46,410 ரூபாய்க்கு விற்பனை செய்து இருக்கிறார்கள். 01 ஜூலை 2020 அன்று 46,740 என்கிற வரலாற்று உச்சத்தில் விற்பனை ஆன தங்கம் விலை உடன் ஒப்பிட்டால் 330 ரூபாய் விலை குறைந்து இருக்கிறது.
இதெல்லாம் ஒரு இறக்கமா
தங்கம் விற்கும் விலைக்கு, இந்த 300 ரூபாய், 400 ரூபாய் எல்லாம் ஒரு பெரிய விலை இறக்கமா? என்று தோன்றலாம். ஆனால் நல்ல வேளையாக, தங்கம் விலை மேலும் அதிகரிக்காமல் ஒரு சில நூறு ரூபாயாவது விலை குறைந்து இருக்கிறதே என்று தான் இந்த நேரத்தில் பார்க்க வேண்டி இருக்கிறது.
விலை இறக்கம் தொடருமா
சரி இப்போதைக்கு, தங்கத்தில் ஒரு குட்டி விலை இறக்கம் வந்துவிட்டது. இனி தொடர்ந்து விலை இறங்குமா? என்றால் நிச்சயம் இல்லை எனச் செய்திகள் சொல்கின்றன. மேற்கொண்டு விலை அதிகரிக்கவே அதிக வாய்ப்புகள் இருக்கிறதாம். அதை ஒவ்வொன்றாகப் பார்ப்போம். முதலில் சர்வதேச தங்கம் விலைப் பிரச்சனையைப் பார்ப்போம்.
ஒரு அவுன்ஸ் சர்வதேச தங்கம் விலை
சர்வதேச அளவில், ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 1,796 டாலரைத் தொட்டு படு ஜோராக வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. இன்னும் ஒரு சில டாலர் தான் அதன் பின் 1,800 டாலரைத் தொட்டு நம்மை எல்லாம் அலற விடப் போகிறது. இந்த சர்வதேச தங்கம் விலை ஏற்றம் இயற்கையாகவே, இந்தியாவில் ஆபரணத் தங்கம் விலை ஏற்றத்தில் எதிரொலிக்கும். எனவே விலை ஏற்றத்துக்கு தயாராக இருங்கள்.
டாலர் VS ரூபாய் மதிப்பு
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு கடந்த சில நாட்களாக கூல் டவுன் ஆனது. ஆனால் இப்போது மீண்டும் சூடு பிடித்து உயரத் தொடங்கி இருக்கிறது. கடந்த 03 ஜூலை 2020 அன்று 74.6 ரூபாய் வரை இறக்கம் கண்ட டாலர் - ரூபாய் மதிப்பு, தற்போது மீண்டும் 74.99 ரூபாயைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. இதுவும் இந்தியாவில் தங்கம் விலை உயர முக்கிய காரணமாக இருக்கலாம்.
எம் சி எக்ஸ் தங்கம் விலை சொல்வது என்ன
இந்தியாவின் கமாடிட்டி சந்தையான மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில், ஆகஸ்ட் 2020 மாதத்துக்கான 10 கிராம் தங்க காண்டிராக்டின் விலை கடந்த 01 ஜூலை 2020 அன்று 48,982 ரூபாயைத் தொட்டு வர்த்தகமானது. அதன் பின் மெல்ல 48,273 ரூபாய் வரை விலை சரிந்தது. நேற்று மீண்டும் 48,825 ரூபாய் வரை விலை அதிகரித்து இருக்கிறது. எனவே விலை ஏற்றத்தை எம் சி எக்ஸ் சத்தம் காட்டாமல் உறுதி செய்து இருக்கிறது.
தங்கம் விலை குறித்து அனலிஸ்ட் பார்வை
எதிர்காலத்தில் தங்கம் விலை அதிகரிக்கும் என்கிற நம்பிக்கையில் பணத்தை தங்கத்தில் முதலீடு செய்வர்களுக்கு ஒரு நற் செய்தி. தங்கம் எதிர்காலத்திலும் ஒரு நல்ல விலை ஏற்றத்தைக் காணும் எனச் சொல்கிறார் ஏஞ்சல் ப்ரோக்கிங் நிறுவனத்தின் மூத்த டெக்னிக்கல் அனலிஸ்ட் அனுஜ் குப்தா. அமெரிக்காவின் சேவைத் துறை வளர்ச்சி காண்கிற போதிலும், சீனாவின் பொருளாதாரம் மீளும் போதும் தங்கம் விலை அதிகரிக்கும் என்கிறார். ஆக எந்த பக்கம் திரும்பினாலும் தங்கம் விலை ஏற்றம் மட்டும் உறுதி செய்கிறார்கள்.
சர்வதேச காரணிகள்
இது போக, Geo - Political Tension என்று ஆங்கிலத்தில் சொல்வார்களே அது நிறைய இருக்கிறது. உதாரணம்: அமெரிக்கா - சீனா, இந்தியா - சீனா. அது போக கொரோனா வைரஸ் வேறு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்த பிரச்சனைகளில் இருந்து எல்லாம் எப்படி மீளப் போகிறோம். எப்போது பொருளாதாரம் தேறி பழைய நிலைக்கு வரும் என யாருக்குமே தெரியவில்லை.
முந்தைய கணிப்புகள்
கோல்ட் மேன் சாக்ஸ் நிறுவனம், அடுத்த 12 மாதங்களில் தங்கம் விலை 2,000 டாலரைத் தொடும் எனக் கணித்து இருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது. அதே போல, உலகின் முன்னணி கமாடிட்டி வர்த்தகரான ஜிம் ராஜர்ஸும், இந்த கொரோனா வைரஸ் பிரச்சனை எல்லாம் முடிவுக்கு வருவதற்குள் தங்கம் ஒரு கணிசமான ஏற்றத்தைக் காணும் எனச் சொல்லி இருந்ததும் இங்கு நினைவு கூறத்தக்கது.