பொதுவாக இன்றைய காலக்கட்டத்தில் அனைத்து தரப்பு மக்களுக்கும் அவரவர் சூழ்நிலைக்கு ஏற்ப, பணத் தேவைகள் என்பது இருந்து கொண்டே தான் உள்ளது.
பலரும் வங்கிகள், நகைக் கடன், வாகன கடன், தனிநபர் கடன் என பல வகைகளிலும் தங்களின் தேவைக்கு ஏற்ப வாங்கி பயனடைகின்றனர்.
எது சிறந்தது?
நம்மில் பலரும் இந்த கடன்களை வாங்கியிருக்கிறோம். ஆனால் இந்த கடன்களில் என்னென்ன வித்தியாசம், எது சிறந்தது, என்றேனும் யோசித்திருக்கின்றோமா? என்றால் இல்லை. அந்த வகையில் அதிகம் நாம் வாங்கும் நகைக் கடன் மற்றும் தனி நபர் கடன். இதில் எது சிறந்தது என்பதைத் தான் இதில் பார்க்கவிருக்கிறோம் வாருங்கள்.
நகைக்கடன்
தங்கம் மீதான கடன் பாதுகாப்பான கடன் என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில் கடன் வாங்குபவர் தங்களது கடன் மதிப்பில் குறிப்பிட்ட மதிப்பினை பெறுகிறார். அதற்கு மாத மாதம் தவணை தொகையாக செலுத்துகிறார். அல்லது ஒரே நிலுவையாக செலுத்துகிறார். அதன் பிறகே கடன் அளிக்கும் வங்கிகள் நிறுவனங்கள் தங்கத்தினை திரும்ப கொடுக்கின்றன.
விரைவில் எது கிடைக்கும்
இதற்கு வட்டி விகிதம் என்பது பர்சனல் லோன்களை விட சற்று குறைவாகத் தான் இருக்கும். எனினும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் சற்று அதிகமாக வசூலிக்கின்றன. அதோடு செயல்பாட்டு கட்டணமும் குறைவு தான். மேலும் ஆவணங்கள் என்பதும் குறைவு தான். எல்லாவற்றிற்கும் மேலாக மிக விரைவில் கிடைக்கும். வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் பல இந்த சேவையை செய்து வருகின்றன. ஆக அவசர தேவைகளுக்கு சிறந்த கடனாக நகைக் கடன் பார்க்கப்படுகிறது.
வட்டி வீத நிலவரம்
குறிப்பாக நகைக்கடன்களுக்கு 7.5% முதல் 29% வரையில் வட்டி விகிதம் காணப்படுகிறது. இதே தனி நபர் கடன்களுக்கு வட்டி விகிதம் 9% முதல் 24% வரையில் வசூலிக்கப்படுகிறது. தனி நபர் கடன்கள் பாதுகாப்பற்ற கடன்களாக பார்க்கப்படுகிறது. இதற்கு செயல்பாட்டுக் கட்டணமும் அதிகம். ஆவணங்களும் அதிகம்.
கடன் செலுத்தும் அவகாசம்
கடனுக்கான கால அவகாசம் என்பது கடன் வழங்குனர், கடனை திரும்ப செலுத்த வாடிக்கையாளருக்கு திரும்ப அளிக்கும் கால அவகாசமாகும். குறிப்பாக தனி நபர் கடன்களுக்கு 1 வருடம் முதல் 5 வருடம் கால அவகாசம் வரையில் வழங்கப்படுகிறது. ஆனால் நகைக் கடன்களுக்கு மூன்று வருடம் வரையில் கால அவகாசம் வழங்கப்படுகிறது. இது தொகையை பொறுத்து மிக குறுகிய கால அவகாசத்திலும் வழங்கப்படுகிறது.
கடனை எப்படி செலுத்தலாம்?
தனி நபர் கடனை நீங்கள் மாத தவணைகளாக செலுத்தலாம். இதே நகைக் கடனையும் மாத தவணையாகவும் அல்லது ஒரே தவணையாகவும், மொத்தத்தில் வாடிக்கையாளர்கள் அவரவர் சூழ்நிலைக்கு ஏற்ப ஃபிளெக்ஸி முறையில் செலுத்திக் கொள்ளலாம். ஏனெனில் நகைக்கடனுக்கு வட்டியை மட்டுமே செலுத்திக் கொண்டு, அதன் பின்னர் தொகையை செலுத்திக் கொள்ளும் வசதியும் உண்டு.
சிபில் ஸ்கோர்
நகைக் கடனை பொறுத்தவரையில் ஆவணங்கள் பெரிதாக இல்லை என்பதால், விரைவில் கிடைக்கும். இதே பர்சனல் கடன்களுக்கு வருவாய் ஆதாரம், அடையாள சான்று முகவரி சான்று என பலவும் கொடுக்க வேண்டியிருக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக நகை கடனுக்கு பெரிதாக கிரெடிட் ஸ்கோர் பார்க்கப்படுவதில்லை. ஆனால் பர்சனல் லோனுக்கு கட்டாயம் சிபில் மதிப்பெண் தேவைப்படுகிறது.