டெல்லி: உலகில் டாப் பணக்கார கோவில்களில் ஒன்றான திருப்பதி வெங்கடாஜலபதி திருக்கோவில் தேவஸ்தானம், பிரதமர் மோடியின் தோல்வி அடைந்த தங்க நாணயமாக்கும் திட்டத்தை மீட்டு எடுக்கவும், மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாகப் பல டன்கள் தங்கத்தை இத்திட்டத்தில் முதலீடு செய்ய உள்ளது.
இந்திய மக்களின் வீடுகளிலும் மற்றும் கோவில்களிலும் முடங்கியுள்ள சுமார் 20,000 டன் தங்கத்தை, புழக்கத்திற்குக் கொண்டு வந்து நாட்டில் தங்க இறக்குமதியைக் குறைப்பதே இத்திட்டத்தின் முதன்மையான நோக்கம். ஆனால் நடந்தது வேறு..
தீபாவளி..
தீபாவளி மற்றும் தசரா பண்டிகையை முன்னிட்டு மோடியால் அறிமுகம் செய்யப்பட்ட இந்தத் தங்க நாணயமாக்கும் திட்டம் 1 மாத காலத்தில் வெறும் 1 கிலோ தங்கத்தை மட்டுமே ஈர்த்துள்ளது. இதனால் மோடி அறிவித்த இத்திட்டம் தோல்வி அடைந்ததாக மக்கள் கருதினர்.
திருப்பதி தேவஸ்தானம்..
இந்நிலையில் 5.5 டன்னுக்கும் அதிகமாகத் தங்கம் வைத்துள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானம், தன்னிடம் பயன்பாட்டில் இல்லாத தங்க நகை மற்றும் தங்க கட்டிகளை இத்திட்டத்தில் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
திருப்பதி கோவிலுக்கு இது ஜாக்பாட்..
திருப்பதி ஏழுமலையான் கோவில்களுக்குப் பக்தர்கள் காணிக்கையாக அளிக்கும் தங்கம், வெள்ளி, வைரம் மற்றும் இதர ரத்தினங்களைத் தேவஸ்தானம் வெறும் 1 சதவீத வட்டியில் நாட்டின் பல முக்கிய வங்கிகளில் டெப்பாசிட் வைத்துள்ளது. இத்திடத்திற்கு 2.5 சதவீதம் வரை வட்டி கிடைக்க உள்ளதால் திருப்படி தேவஸ்தானத்திற்கு இது ஜாக்பாட் தான்.
வருடத்திற்கு 1 டன் தங்கத்தைத் திருப்பதி தேவஸ்தானம் காணிக்கையாகப் பெறுகிறது.
ஆந்திர பிரதேசம்
இச்சிறப்பான திட்டத்தில் முதலீடு செய்ய நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். இதற்கான ஆணையைத் திருப்பதி தேவஸ்தானத்திடம் அளிக்கப்பட்டுள்ளது என ஆந்திர பிரதேச மாநில நிதி அமைச்சர் யானாமாலா ராமகிருஷ்னடு தெரிவித்தார்.
இதற்கான இறுதி முடிவுகளை அடுத்த 10-15 நாட்களில் திருப்பதி தேவஸ்தானத்தம் எடுக்கும் எனவும் ராமகிருஷ்னடு தெரிவித்தார்.
சீனாவும்.. இந்தியாவில்..
உலகில் அதிகப் புழக்கம் கொண்ட நாடுகளில் சீனா முதல் இடத்திலும், இந்தியா 2வது இடத்திலும் உள்ளது. இந்நிலையில் நாட்டின் நடப்புக் கணக்கை பதம்பார்க்கும் அதிகளவிலான தங்க இறக்குமதியைக் குறைக்க மத்திய அரசு செய்த முயற்சிதான் இந்தத் தங்க முதலீட்டுத் திட்டங்கள்.