தங்கம் என்பது மிகச்சிறந்த முதலீடு என்பதும் அதில் முதலீடு செய்வதற்கு பொதுமக்கள் மிகுந்த ஆர்வம் காட்டுவார்கள் என்பதும் தெரிந்ததே.
குறிப்பாக பண்டிகை நாட்களின் போது தங்கம் வாங்குவது என்பது இந்தியர்களுக்கு ஒரு வழக்கமாகவே உள்ளது.
அந்த வகையில் தீபாவளி பண்டிகையின் போது இந்தியாவில் தங்கம் வாங்குபவர்கள் எண்ணிக்கை மிக அதிகம் என்றும் குறிப்பாக இரண்டே நாட்களில் ரூ.25,000 கோடிக்கு தங்கம் விற்பனையாகி உள்ளது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தீபாவளி பண்டிகை
இந்தியாவில் மிகப்பெரிய அளவில் சிறப்பாக கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகையின் போது தங்க நகை வியாபாரம் உண்மையிலேயே ஜொலித்திருக்கின்றது என்றுதான் சொல்லவேண்டும். தீபாவளிக்கு முந்தைய நாட்களான அக்டோபர் 22 மற்றும் 23 ஆகிய இரண்டு நாட்களில் மட்டும் தங்கம் விற்பனை 25 ஆயிரம் கோடியை தாண்டி உள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
தங்கம் விற்பனை
இந்தியாவில் கடந்த இரண்டு நாட்களில் மொத்த வர்த்தகம் ரூ.45,000 கோடி என்றும் அதில் தங்கம் மட்டுமே ரூ.25,000 கோடி என்றும் மற்ற பொருட்களின் விற்பனை ரூ.20,000 கோடி என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரூ.25,000 கோடிக்கு தங்க விற்பனை
சுமார் ரூ.25 ஆயிரம் கோடிக்கு அக்டோபர் 22, 23 ஆகிய இரண்டு நாட்களில் மட்டும் தங்கம் விற்பனையாகி உள்ளது என்றும் மீதமுள்ள ரூ.20 ஆயிரம் கோடிக்கு ஆட்டோமொபைல், கம்ப்யூட்டர் மற்றும் கம்ப்யூட்டர் சார்ந்த பொருட்கள், வீடு அலுவலகத்திற்கு தேவையான அலங்காரப் பொருட்கள், இனிப்பு தின்பண்டங்கள், சமையல் பொருட்கள் உள்பட பல எலக்ட்ரானிக் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விற்பனையாகி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
சாதனை விற்பனை
இதுகுறித்து அகில இந்திய வர்த்தக கூட்டமைப்பின் தலைவர் கூறிய போது, 'இரண்டு நாள் தீபாவளி கொண்டாட்டத்தின் போது நாட்டில் தங்கம் மற்றும் வெள்ளி மிக அதிகமாக விற்பனையானது. குறிப்பாக தங்க நாணயங்கள் அதிகமாக விற்பனையானது என்று தெரிவித்துள்ளார். மேலும் கடந்த இரண்டு நாட்களில் தங்கம் மற்றும் வெள்ளி மட்டுமே 25 ஆயிரம் கோடி விற்பனையானது ஒரு மிகப்பெரிய சாதனை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எழுச்சி மிக்க தீபாவளி
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு பின்னர் முழு அளவில் சிறப்பாக கொண்டாடப்படும் தீபாவளி என்பதால் இந்த ஆண்டு தீபாவளி எழுச்சிமிக்க தீபாவளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தங்க நகைகள் மட்டுமின்றி இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களையும் தீபாவளி பண்டிகையின்போது பலர் வாங்கி உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தங்கத்தின் தேவை
இந்தியாவில் தங்கத்தின் தேவை சுமார் 80 சதவீதம் வரை அதிகரித்திருப்பதாகவும், கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பின்னர் தங்கத்தின் வர்த்தகம் முழுமையாக மீண்டு உள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அகில இந்திய ஜூவல்லர்ஸ் அண்ட் கோல்ட்ஸ்மித் பெடரேஷனின் தேசியத் தலைவர் பங்கஜ் அரோரா அவர்கள் கூறியபோது, 'இந்தியாவில் தங்கத்தின் தேவை தற்போது உச்சத்தில் இருப்பதால் இந்திய தங்கத்தொழில் முழுமையாக மீண்டு உள்ளது என்பதை உறுதியாகச் சொல்லலாம்' என்று தெரிவித்துள்ளார்.