பெர்ன்: உலக நாடுகள் அனைத்தும் கருப்பு பணம் ஒழிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளதால் சுவிஸ் வங்கிகள் நெருக்கடி தாங்க முடியாமல் வங்கி கணக்காளர்களுக்கு இருப்பை தங்கம் வாயிலாக அனுப்பி வருகிறது.
இதன் மூலம் இந்தியாவிற்கு சுமார் 11 பில்லியன் பிராங்கு மதிப்புள்ள தங்கத்தை அனுப்பியுள்ளது சுவிஸ் வங்கிகள். இந்திய ரூபாய் மதிப்புப்படி இது 70,000 கோடி ரூபாய் ஆகும்.
செப்டம்பரில் உச்சம்...
இந்தியாவில் கருப்பு பணத்திற்கு எதிரான வழக்கு பலவீனமாக மாறிய செப்டம்பர் மாத காலகட்டத்தில் சுவிஸ் வங்கிகள் அதிகளவில் தங்கத்தை ஏற்றுமதி செய்தது. செப்டம்பர் மாத காலகட்டத்தில் மட்டும் சுவிஸ் வங்கிகள் 2.2 பில்லியன் பிராங்க் மதிப்புள்ள தங்கத்தை இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்துள்ளது. மேலும் இந்த அளவீடு ஆகஸ்ட் மாதத்தை ஒப்பிடுகையில் இரட்டிப்பாகும்.
மொத்த ஏற்றுமதி
2014ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் இருந்து சுவிஸ் வங்கிகள் இந்தியாவிற்கு சுமார் 11.4 பில்லியன் பிராங்கு மதிப்புள்ள தங்கத்தை இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்துள்ளதாக சுவிஸ் டிரேட் ஏஜென்சி தெரிவித்துள்ளது.
தீபாவளி பண்டிகை சாதகமாக அமைந்தது...
மேலும் இந்தியாவில் தீபாவளி பண்டிக்கையில் தங்கத்தின் தேவை அதிகரித்ததால், இத்தேவையை சுவிஸ் வங்கிகளும், கருப்பு பணம் வைத்திருந்தவர்களும் பயன்படுத்திக் கொண்டனர் என்று வல்லுனர்கள் தெரிவித்தனர். பண்டிகை காலத்தில் தங்கத்தின் விலையை கணிசமான விலை உயர்வை காண முடிந்தது, இந்த உயர்வும் இவர்களுக்கு மேலும் சாதகமாக அமைந்தது குறிப்பிடதக்கது.
வாடிக்கையாளர்களுக்கு அறிவுறை
மேலும் சுவிஸ் வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு வங்கியின் அபத்து காரணிகளை களைய சில முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளோம் என எச்சரித்துள்ளதாகவும் செய்திகள் பரவுகிறது.
சுவிஸ் அரசும்.. வங்கிகளும்..
மேலும் சுவிஸ் வங்கிகள் அந்நாட்டு அரசுடன் மறைமுகமாக சில ஒப்புதல்களை பெற்றுள்ளது. இதில் இந்தியாவிற்கும் பிற நாடுகளுக்கும் வங்கி கணக்காளர்கள் மற்றும் இதர தகவல்களை வெளியிடும் போது வங்கிகளின் செயல்பாடு மற்றும் தறம் பாதிக்காத வகையில் தகவல் அளிக்குமாறு ஒப்புதல் பெற்றது. இதற்கு உள் அர்த்தம் தகவல்களை தெரிவிக்க வேண்டாம் என்று தான். சுவிஸ் நாட்டின் மிகப்பெரிய வர்த்தகம் என்றால் அது வங்கித்துறை தான்.
செப்டம்பர் மாதம் மட்டும்..
இந்நாட்டின் அரசின் தகவல் படி செப்டம்பர் மாதத்தில் மட்டும் தங்கம், வெள்ளி மற்றும் நாணயங்கள் மொத்தமாக சுமார் 347 டன் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதில் தங்க ஏற்றுமதி மட்டும் 172.5 டன்களாகும். இதில் இந்தியாவிற்கு மட்டும் 66.5 டன் தங்கம் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.