டெல்லி: தங்கத்தைப் பணமாக்குதல் என்ற வார்த்தையை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இப்படி ஒரு வார்த்தை புழக்கத்தில் உள்ளதை இன்று தான் தெரிந்து கொண்டவர்கள் அதைப்பற்றி மேலும் தெரிந்து கொள்ள விரும்பக் கூடும். சரி வாங்க பார்ப்போம்.
மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி 2015-16-ம் ஆண்டுக்கான பட்ஜெட் திட்டத்தில் தங்கத்தைப் பணமாக்குதல் பற்றி அறிவிக்கும் போது இந்தியாவில் 20,000 டன்களுக்கும் மேலான தங்கம் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளதாகவும், ஆனால் இந்தத் தங்கம் வியாபாரம் செய்யப்படாமலோ அல்லது பணமாக்கப்படாமலோ முடங்கி உள்ளது என்றும் குறிப்பிட்டார்.
அருண் ஜேட்லி
இப்பிரச்சனையைக் களைய நாட்டில் முடங்கியுள்ள தங்கத்தைப் பணமாக்கும் திட்டத்தை நிதியமைச்சர் அருண் ஜேட்லி முன்மொழிந்தார். இது தற்போது நடைமுறையிலிருக்கும் தங்க சேமிப்பு மற்றும் தங்க உலோக கடன் திட்டங்களுக்கு மாற்றாக இருக்கும்.
சேமிப்பு கணக்கு
இந்தப் புதிய திட்டத்தின் வழியாகத் தங்கத்தைச் சேமிப்பவர்கள் அவர்களுடைய சேமிப்பு கணக்கின் மூலமாக வட்டியைப் பெறவும் மற்றும் நகை வியாபாரிகள் தங்களுடைய உலோக கணக்கின் மூலமாகக் கடன்களைப் பெறவும் அனுமதிக்கப்படுவார்கள்.
தங்கத்தைப் பணமாக்கும் திட்டம்?
இது தங்கத்தைத் தங்களுடைய உலோக கணக்கில் (மெட்டல் அக்கவுண்ட்) சேமிக்கும் முதலீட்டாளர்களுக்கு வட்டியைக் கொடுக்கும் திட்டமாகும். ஒரு முறை இந்தக் கணக்கில் தங்கத்தை முதலீடு செய்து விட்டால், அது உங்களுக்கு வட்டியை கொடுக்கத் துவங்கி விடும்.
செயல்படும் முறை
ஒரு வாடிக்கையாளர் தன்னிடமுள்ள தங்கத்தை ஒரு வங்கி அல்லது முகவரிடம் கொண்டு வரும் போது, தங்கத்தின் தரம்அளவிடப்படும், அதனுடைய சரியான எடையளவிற்கு உலோக கணக்கில் வரவு வைக்கப்படும்.
இந்தச் செயல்பாட்டிற்காக வாடிக்கையாளர்கள் அவர்களுடைய முழுமையான விபரங்களை (KYC) தருமாறு கேட்கப்படுவார்கள். முதலீடு செய்யப்பட்ட தங்கமானது நகை வியாபாரிகளுக்கு, வாடிக்கையாளருக்குத் தரும் வட்டியை விடச் சற்றே அதிகமான வட்டிக்கு கடனாகத் தரப்படும்.
வட்டியைக் கணக்கிடும் முறை?
சேமிப்பவரின் அசல் மற்றும் வட்டி ஆகியவை அனைத்தும் 'தங்கத்தின் பேரிலேயே' மதிப்பிடப்படும். உதாரணமாக, ஒரு வாடிக்கையாளர் 100 கிராம் தங்கத்தை டெபாசிட் செய்து 1 சதவீதம் வட்டியைப் பெறுகிறார் என்றால், அவருடைய கணக்கில் மொத்தம் 101 கிராம் இருக்கும்.
அந்தந்த வங்கிகளால் வட்டி விகிதம் முடிவு செய்யப்படுகிறது.
காலம்
குறைந்தபட்சம் 1 வருடமாவது தங்கத்தை டெபாசிட் செய்திருக்க வேண்டும். சிறிய கணக்குகளில் குறைந்தபட்சம் 30 கிராம் தங்கத்தைச் சேமிப்பதற்கு ஊக்குவிக்கப்படுகிறார்கள். இந்தத் தங்கம் கட்டி அல்லது நகை என எந்த வடிவிலும் இருக்கலாம்
திரும்பப் பெறும் முறை
வாடிக்கையாளர் பணமாகப் பெற்றுக் கொள்ளவோ அல்லது தங்கமாகவோ திரும்பப் பெறலாம். இந்த விருப்பத்தை அவர் டெபாசிட் செய்யும் போது தெரிவிக்க வேண்டும்.