மும்பை: நகைக் கடைகளின் மீது மத்திய அரசு விதித்த கூடுதல் கலால் வரி மற்றும் 2 லட்சத்திற்கும் அதிகமாக வர்த்தகத்திற்குப் பான் கார்டு கட்டாயம் போன்ற முக்கியமான பிரச்சனைகளை விரைவில் முடிவிற்குக் கொண்டு வர இந்தியாவில் உள்ள நகைக்கடை உரிமையாளர்களின் அனைவரும் ஒன்றுகூடி காலவரையற்ற நிலையில் கடைகளை மூடி போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்நிலையில் ஜெம்ஸ் மற்றும் நகைகள் ஏற்றுமதி மேம்பாட்டுக் கவுன்சில் (GJEPC) அமைப்பின் முக்கியத் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் சனிக்கிழமை நிதியமைச்சர் அருண் ஜேட்லியுடன் செய்த முக்கிய ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
கூட்டத்தின் முடிவில் இவ்வமைப்புப் போராட்டத்தை இந்தியா முழுவதிலும் நிறுத்திக்கொள்வதாகவும் ஞாயிற்றுக்கிழமை முதல் வழக்கமான முறையில் நகை கடைகள் செயல்படும் எனவும் சனிக்கிழமை இரவு அறிவித்தது.
18 நாள் போராட்டம்
மத்திய அரசு விதிக்கக் கூடுதல் கலால் வரியின் மூலம் தங்களது வர்த்தகம் மற்றும் நிதிநிலை அதிகளவில் பாதிக்கப்படும் என அரசின் அறிவிப்பை எதிர்த்து நகை கடை உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்தனர்.
கடந்த சனிக்கிழமை முதல் 18 நாள் நீடித்த இப்போராட்டம் நிதியமைச்சர் உடனான கூட்டத்தின் மூலம் முடிந்தது.
பான் கார்டு
மேலும் இப்போராட்டம் வெறும் கலால் வரிக்காக மட்டும் அல்லாமல் 2 லட்ச ரூபாய்க்கு அதிக மதிப்புடைய நகைகளை வாங்கும் வாடிக்கையாளர்களிடம் கட்டாயமாகப் பான் கார்டு பெற வேண்டும் என மத்திய அரசு அறிவித்தது. இதனையும் முக்கியக் கோரிக்கையாகக் கொண்டே நகை கடை உரிமையாளர்கள் இப்போராட்டத்தில் இறங்கினர்.
மூவர் குழு
இக்கூட்டத்தில் 2016-17ஆம் பட்ஜெட் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட கூடுதல் கலால் வரி குறித்து ஆய்வு செய்யவும், இதன் குறித்த பாதிப்புகள் மற்றும் விளைவுகளை ஆராயவும் நிதியமைச்சகத்தின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகரான அசோக் லக்ரி தலைமையிலான மூவர் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
60 நாட்கள்
இந்த மூவர் குழு அடுத்த 60 நாட்களில் நகை கடைகள் மீது விதிக்கப்பட்ட கலால் வரி குறித்த முழுமையான ஆய்வறிக்கையை நிதியமைச்சகத்திடம் சமர்ப்பிக்க நிதியமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்துள்ளார்.
ரூ.70,000 கோடி வர்த்தகம்
நகை கடைகளின் 18 நாள் போராட்டத்தின் மூலம் இத்துறையில் சுமார் 70,000 கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகம் பாதிப்படைந்துள்ளது.
300 அமைப்புகள்
இந்தியாவில் உள்ள 3,00,000 நகைக்கடைகள் 300 அமைப்புகளின் கீழ் செயல்பட்டு Unorganised துறையாக இயங்கி வருகிறது.
சந்தை மதிப்பு
இந்திய சந்தையில் இத்துறையில் மதிப்பு 2.5-3 லட்சம் கோடி ரூபாய் எனத் தோராயமாக மதிப்பிடப்பட உள்ளது.