நாளுக்கு நாள் தண்ணீர் பிரச்னை (Water Scarcity) தமிழகத்தில் விஸ்வரூபம் எடுத்து வெடித்துக் கொண்டிருக்கிறது. சென்னையின் பல பகுதிகளில் குடிநீர் கிடைப்பது கூட பெரிய சிக்கலாகிக் கொண்டிருக்கிறது.
காலையில் கிடைக்கும் சொர்ப நீர் காலைக் கடன்களை முடித்து, அத்தியாவசிய வேலைகளைச் செய்து கொள்ளவே முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள் மக்கள். குளிப்பது எல்லாம் பணக்காரர்கள் செய்யும் வேலையாக சில வாரங்களில் மாறிவிட்டது.
சென்னைக்கு நீர் கொடுத்துக் கொண்டிருந்த பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம், புழல் என நான்கிலும் தண்ணீர் வற்றிவிட்டது. தற்காலிகமாக விவசாயத்துக்கு தண்ணீர் எடுக்க போட்ட ஆள்துளைக் கிணறுகளில் இருந்து தான் இப்போது சென்னை நகரத்துக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
ஐடி நிறுவனங்கள் தொடங்கி தெருக்கடை உணவகங்கள் வரை பல வியாபாரங்களும் தண்ணீர் பற்றாக்குறையால் ஸ்தம்பித்திருக்கிறது. இவ்வளவு நெருக்கடியான நேரத்திலும் தண்ணீர் கொண்டு வரும் டேங்கர் லாரிகள் எல்லாம் மனசாட்சியே இல்லாமல் கொள்ளை லாபம் அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஒரு லாரி தண்ணீரின் விலை சில வாரங்கள் முன்பு வரை 1200 - 1400 ரூபாய் என் இருந்தது. தண்ணீர் பிரச்னைக்கு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க 1200 ரூபாயில் இருந்து 1500, 1800, 2000, 2500, 3000, 3500 என விலை உயர்ந்து இப்போது அதே ஒரு லாரி தண்ணீரின் விலை சுமார் 4000 ரூபாய் முதல் 5000 ரூபாய் வரை பேரம் பேசி விற்கிறார்கள்.
இப்படி 4000 - 5000 ரூபாய் வரை விலை பேசி ஓகே சொன்னாலும் இப்போது கேட்டால் "இப்போது பணத்தைக் கொடுங்க, ஆறு நாளுக்குப் பின் டெலிவரி" என்கிறார்கள் டேங்கர் லாரிக் காரர்கள்.
இந்த ஈவு இறக்கமற்ற டேங்கர் லாரியினர் கொடுக்கும் தண்ணீரில் தான் வாரம் இரு முறையாவது பள்ளிக்குச் செல்லும் குழந்தையை குளிப்பாட்ட வேண்டி இருக்கிறது. வியர்வையில் சிக்கு பிடித்திருக்கும் தலையில் தண்ணீர் ஊற்ற முடிகிறது.
இப்படி அன்றாட தேவைக்கான தண்ணீர் வாங்கவே சேர்த்து வைத்திருக்கும் பணத்தை எல்லாம் செலவு செய்தால் கல்யாண வயதில் இருக்கும் மகளுக்கு என்ன தங்கம் வாங்கிப் போட்டு அனுப்ப முடியும், எத்தனை நாள் இப்படி ஒரு கிராம் தங்கத்துக்கு ஒரு லாரி தண்ணீர் வாங்குவது என குமுறிக் கொண்டிருக்கிறார்கள் மக்கள்.
மாநில அரசோ இது ஏதோ ஜப்பானில் நடக்கும் பிரச்னை போல தங்கள் அரசியல் வேலைகலை கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். மத்திய அரசோ தன் ஜல் சக்தி அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்தை விட்டு "இந்தியா முழுக்க தண்ணி இருக்கு, பொய் சொல்றதையும், அரசுக்கு எதிரா பிரச்சாரம் பண்றதையும் நிறுத்துங்க" என்கிறார்கள்.