மும்பை: சமீப காலமாக ஆன்லைன் திருட்டு, டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, மொபைல் பேங்கிங், நெட் பேங்கிங் என பல வகையில் பணம் திருடப்படுவதாக செய்திகள் தொடர்ந்து வெளியாகிய வண்ணமே உள்ளன.
ஆனால் ஒரு மேசேஜ்ஜை காட்டி 5.33 லட்சத்தை ஆட்டையை போட்ட நபரை என்னவென்று சொல்வது.
இதற்காக இவர் பயன்படுத்திய ஆயுதம். நெட் பேங்கிங் என்ற வார்த்தை தான். ஒரு புறம் மத்திய அரசு எப்படியேனும் இந்தியாவை டிஜிட்டல் மயமாக்கியே தீருவோம் என்று நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், மறுபுறம் இப்படி நினைத்துக் கூட பார்க்க முடியாத வகையில் மோசடிகளும் அதிகரித்து வருகின்றன.
நூதன முறையில் மோசடி
மும்பையின் வடக்கு புற நகர் பகுதியான விரார் பகுதியை சேர்ந்த 25 வயதான நபர் தான் நிகில் துர்கேஷ் சுமன். இவர் தனது மொபைல் வங்கி மூலம் தான் வாங்கிய மதிப்புமிக்க நகைக்களுக்கு பணம் செலுத்துவதாக பொய்யான உறுதியை கொடுத்து, நூதன முறையில் நகைக் கடை உரிமையாளரை ஏமாற்றியுள்ளார்.
ஆன்லைனில் பணம் செலுத்துகிறேன்
கடந்த செவ்வாய்கிழமையன்று மும்பை போலீசார் சுமனை கைது செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மும்பையில் உள்ள பிரபல நகைகடையில் 5.33 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க சங்கிலியை சுமன் விலைக்கு வாங்கியதாகவும், அந்த நகைக்கு தனது ஆன்லைன் வங்கியில் இருந்து பணம் செலுத்துவதாகவும் கூறியுள்ளார்.
நகை டெலிவரி
அதற்கு ஒப்புக் கொண்ட நகைக் கடை உரிமையாளார், சுமன் தனது இணைய வங்கியிலிருந்து பணத்தை அனுப்பி விட்டதாகவும், தனது வங்கிக் கணக்கில் இருந்து பணம் டெபிட் ஆகிவிட்டது என்றும் கூறி, அந்த செய்தியை நகைக் கடை உரிமையாளரிடன் காண்பித்துள்ளார் சுமன். இதை நம்பிய நகைக் கடை உரிமையாளரும், 5.33 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகையை சுமனிடம் கொடுத்துள்ளனர்.
பணம் வரவில்லை
சிறிது நேரம் கழித்து தனது வங்கி கணக்கை சரி பார்த்த நகைக் கடை உரிமையாளர், அப்போதும் கூட தனது வங்கி கணக்கிற்கு சுமன் அனுப்பிய பணம் வந்து சேரவில்லை என சுமனிற்கு போன் செய்துள்ளார். பல முறை தொடர்பு கொண்டும் சுமனை தொடர்பு கொள்ள முடியவில்லை. ஏனெனில் சுமனின் தொலைப்பேசி சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
ஏமாற்றப்பட்டுள்ளோம்
இதன் பின்னரே நகைக் கடை உரிமையாளருக்கு தாம் ஏமாற்றுப்பட்டுளோம் என்று தெரிய வந்துள்ளது. இதன் பின்னரே மன்கூர்ட் போலீசை அணுகியுள்ளார். இதன் பின்னரே சுமன் கைது செய்யப்பட்டுள்ளார்.
பல இடங்களில் கைவரிசை
இதன் பின்னரே மும்பை, நவி மும்பை, தானே, மீரா சாலை, வசாய் விரார் மற்றும் பால்கர் ஆகிய இடங்களில் உள்ள கடைகள், ஹோட்டல்கள், பயண நிறுவனங்கள், நகை கடைகள் என பல இடங்களில் தனது கைவரிசை காட்டி மக்களிடம் ஏமாற்றியதாகவும் லஷ்மிகாந்த் சலுங்கே, காவல்துறை உதவி ஆய்வாளர் தெரிவித்துள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன.
ஆடம்பர வாழ்க்கை
இவ்வாறு தனது கைவரிசையை காட்டி மக்களிடம் ஏமாற்றிய பணம், நகை, விலையுயர்ந்த பொருட்களை வைத்து சுமன் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்ததும் கண்டறியப்பட்டுள்ளது.
சுமன் மட்டுமல்ல, நாட்டின் பல பகுதிகளில் இப்படி பல ஏமாற்று பேர்வழிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆக மக்கள் எதிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.