மும்பை: கொரோனா வைரஸ் வெடித்ததைத் தொடர்ந்து நாட்டில் கற்கள் மற்றும் நகைகள் துறை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் நாட்டில் நிலவி வரும் கொரோனா பயத்தின் காரணமாக, சில்லறை விற்பனையாளர்கள் 20 - 25% வணிகத்தினை மட்டுமே செய்ய முடிவதாக கூறியுள்ளனர்.
நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா தாக்கத்தின் காரணமாக தங்க நகை மற்றும் வெள்ளி விற்பனை முக்கால் வாசி குறைந்துள்ளதாக அகில இந்திய ஜெம் அன்ட் ஜூவல்லரி தலைவர் அனந்த பத்ம நாபன் பிடிஐயிடம் அளித்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அவசியமான பொருட்களை வாங்க முயற்சி
அதிகரித்து வரும் கொரோனா தாக்கத்தினால் மக்கள் மத்தியில் பெரும் பீதி நிலவி வருவதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன. மேலும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மால்கள், திரையரங்குகள் மற்றும் பிற நெரிசலான பகுதிகளை தவிர்க்க அறிவுறுத்தியுள்ளது. இதனால் மக்கள் பெரும்பாலும் அவசியமான பொருட்களை மட்டுமே வாங்க முயன்று வருகின்றனர்.
இவ்வளவு பாதிப்பு
இதற்கிடையில் கொரோனாவில் உலகம் முழுக்கிலும் பலி எண்ணிக்கையும் 8,000 பேரை நெருங்கியுள்ளது. இதனால் இந்தியாவில் இதுவரை அதிகாரப்பூர்வமாக 147 பேர் தாக்கம் அடைந்துள்ளதாகவும், இன்று மட்டும் புதியதாக 10 வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வரியினால் பாதிப்பு
ஏற்கனவே நகைத்துறையில் அதிகப்படியான வரியினால் நகை விற்பனை குறைந்துள்ளது. குறிப்பாக தங்கம் இறக்குமதி வரி 12.5% ஆகவும், இதனுடன் ஜிஎஸ்டி வரியும் சேர்த்து செலுத்த வேண்டியுள்ளது. இதனால் சர்வதேச சந்தையில் தங்கம் விலை குறைந்தாலும், உள்நாட்டு சந்தையில் தங்கம் விலையில் அது அவ்வளவாக பிரதிபலிக்கவில்லை.
நகை விலை அதிகரிப்பு
ஆனால் தற்போது சர்வதேச சந்தையிலேயே தங்கம் விலையானது அதிகரித்து வரும் நிலையில், இங்கு அதற்கேற்ப தங்கம் விலை அதிகரித்து வருகிறது. இதனால் தங்கம் விலை இன்னும் கூடுதலாக அதிகரித்துள்ளதால், விற்பனை வெகுவாக குறைந்துள்ளது. மேலும் வரி குறித்தான வேலைகள், முன்கூட்டியே வரி உட்பட, ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு, வருமான வரித் துறையில் சமர்பிக்கப்பட வேண்டிய வணிக குறிப்புகள் உள்ளிட்ட பலவற்றால் வணிகம் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகள் ரத்து
மேலும் பரவி வரும் கொரோனா தொற்று காரணமாக திருமணம் உள்ளிட்ட பெரும்பாலான நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் திருமணங்களுக்கான ஷாப்பிங் நிறுத்தப்பட்டுள்ளது. ஜூலை வரை திருமண தேதிகள் உள்ளன. இந்த பருவத்தில் நகை விற்பனை அதிகரிக்கலாம். ஆனால் இந்த விற்பனையானது கொரோனா வைரஸ் வெடித்த பிறகு ஸ்தம்பித்துள்ளன.
இது தான் எதிர்பார்ப்பு
மார்ச் இறுதிக்குள் மேற்கண்ட இந்த விஷயங்கள் இயல்பு நிலைக்கு வரலாம் என்று நகைக்கடை விற்பனையாளர்கள் நம்புகிறார்கள். எனினும் தற்போதுள்ள நிலையில் நகை வர்த்தகம் 60 - 70% விற்பனை வீழ்ச்சி கண்டுள்ளதாக கூறப்படுகிறது. கொரோனா வைரஸ் தொற்று நோயால் வணிகம் மந்தமாக உள்ளது. அனைவரின் பாதுகாப்பையும் நல்வாழ்வினையும் உறுதிபடுத்த நாங்கள் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம் என்றும் அன்மோல் ஜூவல்லர்ஸ் நிறுவனர் இஷூ தத்வானி லைவ் மின்ட்டுக்கு அளித்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இது நல்ல விஷயம் தான்
ஒரு காலத்தில் தங்கம் இறக்குமதியை குறைக்க படாதபாடு பட்டுக் கொண்டிருந்தது. இதனால் இறக்குமதி வரி, ஜிஎஸ்டி வரி என போட்டுத் தீட்டியது. இதனால் அரசு எதிர்பார்த்தை போலவே நடப்பு கணக்கு பற்றாக்குறையும் கட்டுக்குள் வந்தது. ஆனால் தற்போது அரசு எந்த வித நடவடிக்கையும் எடுக்காமலேயே தங்கம் இறக்குமதி குறையும். இதனால் பற்றாக்குறையும் குறையும். எப்படியோங்க கெட்டதிலும் ஒரு நல்லது நடந்திருக்கு..