உலகம் முழுக்க கொரோனாவின் தாக்கம் 15 லட்சத்தினை தொட்டுள்ள நிலையில், பலி எண்ணிக்கையோ 89,411 ஆக அதிகரித்துள்ளது.
இப்படி கொரோனாவின் கோரத்தாண்டவம் மக்களை ஆட்டிப்படைத்து வரும் நிலையில், மறுபுறம் ஒரு நல்ல விஷயமும் நடந்துள்ளது.
அப்படி என்ன நல்ல விஷயம் என்ன என்று கேட்கிறீர்களா? தங்கத்தின் தேவை குறைந்துள்ளது தான். நாட்டில் தங்கத்தின் இறக்குமதியை குறைக்கும் பொருட்டு அரசு இறக்குமதி வரியை அதிகரித்தல், ஜிஎஸ்டி வரியை அதிகரித்தல் என பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
சிறந்த முதலீட்டு கருவி
சர்வதேச அளவில் தங்கத்தின் பயன்பாட்டில் இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்தியாவில், தங்கத்தினை விருப்பமான ஆபரணமாக மக்கள் அணிந்து வருகின்றனர். அதிலும் இந்தியாவினை பொறுத்த வரையில் ஆண் பெண் பாகுபாடன்றி அனைவரும் விரும்பி அணியக் கூடிய ஒரு ஆபரணமே. இது சிறந்த ஆபரணமாக மட்டும் அல்லாது, நம்மவர்களின் சிறந்த முதலீட்டு கருவியும் கூட.
தங்கம் சேமிப்பு
குழந்தை பிறப்பு முதல் கொண்டு திருமணம் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளிலும் தங்கம் இடம் பெறாமல் இருக்காது. அதிலும் சிறுக சிறுக என்றாலும் அவ்வப்போது கிடைக்கும் தொகையில் ஒரு கிராம் தங்கமேனும் வாங்கி சேமித்து வைப்பது நம் பெண்களின் பழக்கம். இதனால் நம் நாட்டில் தங்கத்தின் பயன்பாடு அதிகளவில் உள்ளது.
தங்கம் இறக்குமதி
இதனால் நாம் அதிகளவு தங்கத்தினை இறக்குமதி செய்து வருகிறோம். நம் நாட்டில் போதிய தங்கம் இல்லாமையால் தங்கம் இறக்குமதி செய்து பயன் பெறுகிறோம். இந்த நிலையில் கடந்த மார்ச் மாதத்தில் ஆறரை ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தங்கம் இறக்குமதி 25 டன்னாக குறைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கொரோனா தான் காரணம்
இதற்கு முக்கிய காரணம் இந்த கொரோனா தான். ஒன்று உலகம் முழுக்க கொரொணாவின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் தங்கத்தின் தேவை குறைந்துள்ளது. இதனால் நம் நாட்டின் ஏற்றுமதியும் குறைந்துள்ளது. அதோடு உள் நாட்டிலும் தங்கத்தின் தேவை குறைந்துள்ளது. இதனால் கடந்த மார்ச் மாதத்தில் தங்கத்தின் தேவையானது 73% குறைந்து 25 டன்னாக குறைந்துள்ளது.
தேவை குறையும்
இதற்கிடையில் இன்று வெளியான ஒரு அறிக்கையில் நடப்பு ஆண்டில் தங்கத்தின் தேவை 30% குறைந்து 483 டன்னாக குறையலாம் என்றும் கூறப்படுகிறது. இது நிலவி வரும் நிலையற்ற விலை, கொரோனா காரணமாக நிலவி வரும் லாக்டவுன், இந்த லாக்டவுன் வேலை இழப்புக்கும் வழிவகுக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இது தங்கம் வாங்குவோரின் திற்னை குறைக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
நிகழ்ச்சிகள் ஒத்தி வைப்பு
இந்தியாவில் ரத்தினங்கள் மற்றும் நகைத் தொழில் முக்கியமாக திருமணத்தால் இயக்கப்படுகிறது. ஆனால் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் காரணமாக திருமண நிகழ்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் திருமண நிகழ்வுகளுக்கான ஷாப்பிங்களும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் தங்கத்திற்கான தேவை 2020ல் 700 - 800 டன்னாக இருக்காலாம் என்றும் கூறப்படுகிறது.
யாருக்கு பாதிப்பு?
இது கடந்த ஆண்டு 690 டன்னாக இருந்த நிலையில், நடப்பு ஆண்டில் 30% குறைந்து 483 டன்னாக குறையலாம் என்றும் கூறப்படுகிறது. ஜெம்ஸ் அன்ட் ஜூவல்லரி தொழில் இந்த ஆண்டு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதில் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் அன்றாட கூலி தொழிலாளர்களே. ஏனெனில் அவர்கள் தற்போது லாக்டவுன் காரணமாக தற்போது வேலையில்லாமல் உள்ளனர் என்று இந்திய வர்த்தக சபை இயக்குனர் ராஜிவ் சிங் தெரிவித்துள்ளார்.
விலை அதிகரிக்கலாம்
இது மட்டும் அல்ல இந்த துறையில் முன் கூட்டியே வரி செலுத்துதல், கடனின் முதிர்வு தேதி, தங்க கடன் என பல பிரச்சனைகள் உள்ளன. இப்படி பல விதங்களில் தங்கத்தின் தேவையானது குறைய வாய்ப்புள்ளது. எனினும் தங்கம் விலை குறையுமா? ஏனெனில் கொரோனாவின் தாக்கம் அதிகரிக்கும் பட்சத்தில் விலையானது நீண்ட கால நோக்கில் அதிகரிக்கும் என்றே ஆய்வாளர்கள் கருதி வருகின்றனர். தங்கத்தின் இறக்குமதியை குறைக்க அரசு எவ்வளவோ பாடு பட்டது. ஆனால் இன்றே ஆறரை ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வரலாறு காணாத அளவு வீழ்ச்சி கண்டுள்ளது.


Click it and Unblock the Notifications