கொல்கத்தா: இன்னும் இந்த கொரோனாவால் என்னவெல்லாம் நடக்குமோ தெரியவில்லை. இன்று உலகளாவிய அளவில் அதிக இறப்பு எண்ணிக்கையில் முதலிடத்தில் இருப்பது இந்தியா தான்.
இப்படி உலகமே நம்மை திரும்பி பார்க்கும் அளவுக்கு செய்து விட்டது இந்த கொரோனா. இது தான் இப்படி எனில், மறுபுறம், இந்தக் கொரோனாவால் மக்கள் தங்கள் வேலைகளை இழந்து, வருமானத்தினை இழந்து தவித்து வருகின்றனர்.
இப்படி நிலையற்ற பொருளாதார நிலையில் சிக்கித் தவித்து வரும் மக்களுக்கு, இன்றும் அவசர காலத்திற்கு ஆபத்பாந்தவனாக உதவுவது தங்கம் தான். ஏனெனில் கேட்டவுன் குறைந்த நேரத்தில் கேட்ட பணம் கிடைக்குமெனில் அது நகை கடன் தான்.
அதிகரித்துள்ள நகை கடன்
தற்போது லாக்டவுனில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டிருந்தாலும், கடந்த மார்ச் மாதம் முதல் கடுமையான நடவடிக்கைகள் இருந்து வந்தது. இதன் காரணமாக மக்கள் கையில் பணப்புழக்கம் இல்லாததால், வீட்டில் இருக்கும் நகைகளை அடகு வைத்தும் தங்களது தேவைகளை பூர்த்தி செய்து கொண்டு வந்தனர். அதிலும் மே மாதத்திற்கு மேல் வீட்டில் இருக்கும் ஆபரண நகைகளை ஒன்றுக்கும் மேற்பட்ட முறை, அடகு வைத்து கடன் பெற்றுள்ளனர் என நிதி நிறுவனங்கள் கூறுகின்றன.
கடுமையான நிதி நெருக்கடி
கொரோனா வைரஸ் கடுமையான நிதி நெருக்கடியினை கொண்டு வந்துள்ளது. இதன் காரணமாக கடந்த நான்கு மாதங்களில் 80% வாடிக்கையாளர்கள் தங்கத்திற்கு எதிராக கடன்களை வாங்கியுள்ளனர் என்றும் நிதி நிறுவனங்கள் (NBFC) கூறியுள்ளன.
ஏறக்குறைய 25,000 டன் தங்கம் இந்தியா வீடுகளில் உள்ளதாக நம்பப்படுகிறது. பெரும்பாலான மக்கள் வீட்டில் இருக்கும் தங்கத்தினை விற்று பணமாக்குவதற்கு பதிலாக, தங்கத்தினை அடகு வைத்து பணம் பெறுகின்றனர் என்று NBFC நிர்வாகிகள் கூறுகின்றனர்.
எளிதில் கிடைக்கும் நகை கடன்
சந்தையில் நகை கடன் என்பது மற்ற கடன்களோடு ஒப்பிடும்போது மிக சிறந்த கடனாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் இதன் மூலம் விரைவில் கடன் வாங்க முடியும். இதனால் தான் மக்கள் மருத்துவ செலவு, குழந்தைகளின் மருத்துவ செலவு, கல்வி கட்டணம் என அவசர காலங்களில் தேவைப்படும் போது, அடகு வைத்து பணம் பெறுகின்றனர். அதிலும் இந்த கொரோனாவால் அடிப்படை தேவைக்களுக்கே கஷ்டப்படும் நிலைக்கு தள்ளப்பட்ட நிலையில் நகை கடன் என்பது வெகுவாக அதிகரித்துள்ளது.
நகை கடன் மதிப்பு அதிகரிப்பு
இதற்கிடையில் ஆர்பிஐ கடந்த ஆகஸ்ட் மாதம் தங்க நகையின் மதிப்பில் 90% கடனாக பெற்றுக் கொள்ளலாம் என அறிவித்தது. இந்த தளர்வானது மார்ச் 31, 2021 வரை செல்லும் என்றும் கூறியிருந்தது. இது முன்பு 75% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பினால், இது அதிக வாடிக்கையாளர்களையும் ஈர்த்து வருகிறது.