கோடை விடுமுறை முடிந்து குழந்தைகள் பள்ளி செல்கின்றனர் என்றாலே ஒரு குதூகலம் தான். ஆனால் நடுத்தர குடும்பங்களில் இது ஒரு போராட்டமான காலம் என்றே கூறலாம்.
இன்று பல நடுத்தர குடும்பங்களிலும் பெற்றோருக்கு இருக்கும் ஆசை நாங்கள் தான் கஷ்டப்படுகின்றோம். எங்கள் குழந்தைகளாவது நன்றாக இருக்க வேண்டும். அவர்களை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்று கடன் வாங்கி தனியார் பள்ளிகளில் படிக்க வைக்கின்றனர்.
பள்ளி, கல்லூரி தொடங்கி அந்த முதல் ஒரு மாத காலகட்டத்தில் அவர்கள் அதற்காக படும்பாடு கடவுளுக்கு தான் தெரியும்.
அடகு கைக்கு போகும் தங்கம்
ஒரு சிலர் கோடை விடுமுறை காலத்தில் இருந்தே பள்ளிக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தை செலுத்த தயாராவர்கள். இன்றும் பல நடுத்தர காலக்கட்டங்களில் அவசர தேவைக்கு உதவும் ஆபத்பாந்தவானாக இருப்பது தங்கம் தான். சிலர் தங்களிடம் இருக்கும் கொஞ்ச நஞ்சம் தங்கத்தினையும் அடகு வைத்து பீஸ் கட்டுவர். சிலர் இதற்காகவே வங்கிகளில் கடன் வாங்குவர். குறிப்பாக சிறு நகரங்கள், கிராமப்புறங்களில் நிதி நிறுவனங்கலை நோக்கி படையெடுக்கும் போக்கும் உள்ளது.
கோடை காலத்தில் எப்போதும் இருக்கும்
இது குறித்து நகை கடை வட்டாரங்களில் பொதுவாக கோடை காலம் ஆரம்பித்து, பள்ளி, கல்லூரிகள் தொடங்கும்போது, மக்கள் தங்கள் நகைகளை விற்பனை செய்வதும், அடகு வைப்பதும் அதிகரிக்கும். ஆனால் இந்த முந்தைய வருடத்தினை காட்டிலும் கணிசமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக கொரோனாவிற்கு பிறகு இது கணிசமான உயர்வினைக் கண்டுள்ளது.
நகை விற்பனை அதிகரிப்பு
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் பழைய தங்க நகைகள் விற்பனை என்பது கணிசமான அளவில் அதிகரித்துள்ளது. அதேசமயம் மக்கள் நகை திரும்ப புதியதாக வாங்குவது குறைந்துள்ளது.
பள்ளிகளிலும் ஆண்டுக்கு ஆண்டு கல்வி கட்டணம் அதிகரித்து வருகின்றது. குறிப்பாக போக்குவரத்து கட்டணம் என்பது கடுமையாக அதிகரிக்க தொடங்கியுள்ளது.
ஆபத்பாந்தவான்
மொத்தத்தில் கொரோனா காலத்திலும் வேலையினை இழந்து லாக்டவுன் காலகட்டத்தில் வீடுகளில் முடங்கிய மக்கள், அப்போதும் தங்கள் கைகளில் இருக்கும் நகைகளை அடகு வைத்தே செலவு செய்தனர். அந்த நிலையில் இருந்தே தற்போது தான் மீளத் தொடங்கிய நிலையில், தற்போது கல்விக் கட்டணத்திற்காக மீண்டும் தவித்து வருகின்றனர்.