தங்க பத்திரத்தில் முதலீடு செய்பவர்கள் முன்கூட்டியே திரும்ப பெறுவதற்கான தொகையை இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
தங்க பத்திரத்தில் முதலீடு செய்தவர்கள் 8 ஆண்டுகளுக்கு பின் முதிர்வாகும் என்றாலும் முன்கூட்டியே திரும்ப பெறுவதற்கான விலை ஒரு யூனிட்டிற்கு ரூ.5,115 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
இதுகுறித்து ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஐந்து ஆண்டுகளுக்கு முன் தங்கத்தில் முதலீடு செய்தவர்கள் ஒரு யூனிட் ரூ.5,115 என்ற நிலையில் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
தங்கத்தில் முதலீடு
இந்தியர்கள் பொதுவாக தங்கத்தில் முதலீடு செய்வதில் மிகுந்த ஆர்வம் உடையவர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. தற்போதைய இளைய தலைமுறையினர் தங்க நகைகளை வாங்கி முதலீடு செய்வதை தவிர்த்து வருகின்றனர். செய்கூலி, சேதாரம் போன்றவற்றின் காரணமாக இந்திய அரசின் தங்க பத்திரத்தில் முதலீடு செய்வதில் அவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தங்கப்பத்திரத்தில் முதலீடு
தங்கப்பத்திரத்தில் முதலீடு செய்தால் வருடத்திற்கு 2.5% வட்டி கிடைப்பது மட்டுமன்றி முதிர்வு தினத்தில் தங்கத்தின் விலை எவ்வளவோ அந்த தொகை கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. வங்கிகள், அஞ்சல் நிலையங்கள், டிமேட் கணக்கு வைத்திருக்கும் நிறுவனங்களில் இந்த தங்கப்பத்திரங்களை வாங்கலாம்.
தள்ளுபடி
ஒவ்வொரு முறையும் தங்கப்பத்திரம் வெளியிடும் போது அன்றைய தங்கத்தின் விலை நிலவரத்திற்கு ஏற்ப தொகை நிர்ணயம் செய்யப்படும். ஆன்லைன் மூலமாக தங்கத்தை வாங்குபவர்களுக்கு 50 ரூபாய் தள்ளுபடி உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
எவ்வளவு வாங்கலாம்?
ஒரு தனிநபர் அதிகபட்சமாக 4,000 கிராம் வரை தங்கத்தில் முதலீடு செய்யலாம். அறக்கட்டளை மற்றும் நிறுவனங்களாக இருந்தாலும் அதிகபட்சமாக 20,000 கிராம்கள் வரை தங்கத்தில் முதலீடு செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
8 ஆண்டுகள்
தங்கப்பத்திரத்தில் முதலீடு செய்பவர்கள் எட்டு ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். ஆனால் அதே நேரத்தில் அவசர தேவை ஏற்பட்டால் 5 ஆண்டில் வெளியேறிக் கொள்ளலாம் என்ற வசதியும் உண்டு. மேலும் இந்த தங்கப்பத்திரத்தை அடமானமாக வைத்து கடன் பெற்றுக் கொள்ளும் வசதியும் உள்ளது.
ரூ.5,115
இந்த நிலையில் இந்திய ரிசர்வ் வங்கி தற்போது தங்கப்பத்திரத்தை முன்கூட்டியே திரும்பப் பெறுவதற்கான விலை ஒரு யூனிட்டிற்கு ரூ.5,115 என நிர்ணயம் செய்துள்ளது. 2016 ஆம் ஆண்டு நவம்பர் 17-ஆம் தேதிக்கு முன் தங்க பத்திரத்தில் முதலீடு செய்தவர்கள் மேற்கண்ட தொகையில் திரும்பப்பெற அனுமதிக்கப் படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 2016 - 17 ஆம் ஆண்டு தங்கபத்திரத்தின் வெளியீட்டு விலை ஒரு கிராமுக்கு 2,957 ரூபாய் என இருந்த நிலையில் தற்போது அவர்களுக்கு ரூ.5,115 ரூபாய் கிடைக்கிறது.
வரிவிலக்கு
எட்டு வருடம் காத்திருந்து முதிர்ச்சிக்கு பிறகு தங்கப்பத்திரத்தை திரும்பப் பெறுபவர்களுக்கு வரிவிலக்கு சலுகையும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.