இந்திய ரூபாயின் மதிப்பு லேசாக மூழ்க ஆரம்பித்து, மோசமாக மூழ்கத் தொடங்கி விட்டது. கடந்த புதன்கிழமை அன்று இந்திய ரூபாய் ஆசியாவின் மிக மோசமாக செயல்படும் நாணயம் என்கிற பெருமையை பெற்றது. தற்போது இந்திய ரூபாயின் மதிப்பு சுமார் 12 சதவீதம் குறைந்து தத்தளித்துக் கொண்டிருக்கிறது.
ரூபாயின் மதிப்பு டாலரின் தேவை குறைகிற போது அதிகரிக்கும் அல்லது டாலருக்கான இந்தியத் தேவை அதிகரிக்கும் போது இது வலுவிலக்கும்.
இந்திய ரூபாயின் சரிவை முட்டு கொடுத்து நிறுத்த இரண்டு வழிகள் உள்ளன.
1. வலுவான அந்நிய முதலீடு மூலம் இந்தியாவிற்குள் அதிகப்படியான டாலரை உள்ளே கொண்டு வருவது.
2. இந்தியாவை விட்டு டாலர் வெளியே போவதை தடுப்பது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக நம்மால் இந்த இரண்டு வழிகளையும் நம் கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை.
கடந்த சில வருடங்களாக மத்திய அரசின் கொள்கைகள் கூட்டணிக் கட்சிகளின் நிர்பந்தங்களுக்கு அஞ்சி முழுமையாக செயலிலந்து விட்டன. அன்னிய நேரடி முதலீடு மூலம் தேவையான டாலர்களை இந்தியாவிற்குள் கொண்டு வரும் மிக முக்கியமான சட்டதிருத்த மசோதாக்கள் சில அரசியல் காரணங்களுக்காக நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டு விட்டன. அதற்கு பதிலாக, இந்திய அரசாங்கம் வெளிநாட்டு நிதி நிறுவன முதலீட்டாளர்களின் நிச்சயமற்றை பங்கு மற்றும் கடன் சந்தை முதலீடுகளை நம்பி இருக்கத் தொடங்கி விட்டது.
முதலீடு
இத்தகைய வெளிநாட்டினருடைய முதலீடுகள் இந்தியப் பொருளாதாரத்தை கடந்த இரண்டு ஆண்டுகளாக தாங்கி பிடித்து கொண்டிருந்தன. ஆனால் இப்போது, அமெரிக்க மத்திய வங்கியின் குவான்டிடேடிவ் ஈசிங் எதிரான நிலைமைப்பாட்டிற்கு அஞ்சி, அந்நிய முதலீட்டாளர்கள் இந்திய பங்கு மற்றும் கடன் சந்தைகளில் உள்ள முதலீட்டை விற்கத் தொடங்கிவிட்டனார். இதன் காரணமாக வரலாறு காணாத வகையில் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ 60.70 ஆகச் சரிந்தது.
தங்க இறக்குமதி
தங்கம் இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள், இந்திய ரூபாயின் வீழ்ச்சியை கட்டுப்படுத்த உதவவில்லை. மத்திய அரசு டாலர் வெளியேற்றத்தை தடுக்க, தங்க இறக்குமதி மீது பல்வேறு தடைகளை விதித்துள்ளது. எனினும், இந்த நடவடிக்கை, தங்கம் விலை வீழ்ச்சியடைவதால் மக்களின் பார்வை தங்கத்தின் பக்கம் திரும்பியுள்ள இந்த நேரத்தில், எதிர்பார்த்த அளவு அதிக பயன்களை தரவில்லை. விலை குறைந்த இந்தத் தருணத்தில் அதிகரித்து வரும் தங்க இறக்குமதி நடப்பு கணக்கு பற்றாக்குறையை அதிகரித்த வண்ணம் உள்ளது.
கச்சா எண்ணெய்
ரூபாயின் மதிப்பின் மீது அழுத்தம் கொடுக்கும் மற்றொரு கவலைக்குரிய விஷயம் கச்சா எண்ணெய் இறக்குமதி ஆகும். கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு தேவைப்படும் அதிக அளவிலான டாலர், இந்திய ரூபாயின் மதிப்பை மாற்றி அமைக்கும் மிக முக்கிய காரணியாகும். இந்தியா தன்னுடைய எண்ணெய் தேவைகளுக்கு பெரும்பாலும் இறக்குமதியையே நம்பி இருக்கிறது. ஆகவே கச்சா எண்ணெயின் இறக்குமதியை பாதிக்கும் எந்த செய்கையும் இந்திய பொருளாதாரத்தை தேக்க நிலைக்கு கொண்டு சென்று விடும்.
அந்நிய செலாவணி
ரூபாயின் வீழ்ச்சியை தடுக்க செயற்கை முறையில் இந்திய ரிசர்வ் வங்கி அந்நிய செலாவணி சந்தையில் தலையிட வேண்டும். ஆனால், ஒவ்வொரு முறை ரிசர்வ் வங்கி தலையிடும் பொழுதும், இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்து விடுகிறது. 2008 ல் ரிசர்வ் வங்கியிடம் சுமார் 18 மாத கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு தேவையான அந்நிய செலவாணி கையிருப்பு இருந்தது. ஆனால் தற்போது ஆறு மாத கையிருப்பாக குறைந்து விட்டது என அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
ஏற்றுமதி
இந்திய அரசாங்கம் ஏற்றுமதியை அதிகரிக்க உதவும் பல்வேறு நடவடிக்கைகளை சில ஆண்டுகளுக்கு முன்பு எடுத்திருந்தால் அது தற்போது ரூபாயின் மதிப்பை அதிகரிப்பதற்கு உதவியாக இருந்திருக்கும். ஆகவே இந்திய அரசாங்கத்தின் உண்மையான கவலை என்பது ஏற்றுமதியை அதிகரிப்பது சம்பந்தமாக இருக்க வேண்டுமே தவிர தங்க இறக்குமதியை குறைப்பது பற்றி இருக்கக் கூடாது.
நடப்புக் கணக்கு
பொருளாதார வல்லுனர்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் உயர்ந்து வரும் நடப்புக் கணக்கு பற்றாக்குறைக்கு எதிராக கடந்த இரண்டு வருடங்களாக குரல் எழுப்பிய வண்ணம் உள்ளனர். ஆனால் கொள்கை வகுக்கும் சீமான்கள் அதை தொடர்ந்து அலச்சியப்படுத்தினார்கள். மேலும் இந்திய நாடாளுமன்றத்திற்கான தேர்தலும் சில மாதங்களில் வர இருக்கும் இந்த சூழ்நிலையில் நாம் மிகப் பெரிய கொள்கை மாற்றங்களை எதிர்பார்க்க முடியாது. ஆகவே டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் அழுத்தத்திற்கு உள்ளாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பங்கு சந்தை
தற்போது நமக்குள்ள ஒரே கவலை வெளிநாட்டு நிதி நிறுவன முதலீட்டாளர்கள், இந்திய சந்தைகளில் இருந்து பெரிய தொகையை திரும்ப எடுப்பார்களா மாட்டார்களா? என்பது தான். அவ்வாறு அவர்கள் தங்களுடைய முதலீட்டை திரும்ப எடுத்தால் இந்திய ரூபாயின் மதிப்பு எங்கு போய் நிற்கும் என்பதை யாராலும் கனிக்க இயலாது.