மும்பை: தங்க விநியோகத்தில் நிலவும் கெடுபிடி, நகை வியாபாரிகளை மறுசுழற்சி முறையில் கிடைக்கக்கூடிய தங்கத்தினை மூலாதாரமாக உபயோகித்துக் கொள்வதில் கூடுதல் கவனம் செலுத்தும்படி செய்துள்ளதாகவும், பெருமளவிலான தங்க இருப்பு இந்திய மக்களிடம் உள்ளதே இதற்கு முக்கிய காரணம் என்றும் ரேட்டிங் ஏஜென்சியான ஐசிஆர்ஏ ஒரு அறிக்கையில் கூறியுள்ளது.
"கடந்த காலத்தில் தங்கத்திற்கான தேவையில் சிறிதளவு மட்டுமே பூர்த்தி செய்து வந்த மறுசுழற்சி தங்கம், அதன் கெடுபிடிகளற்ற தன்மையாலும், அதிக அளவிலான தங்க இருப்பு இந்தியப் பொதுமக்களின் வசம் இருப்பதாலும், இனி வரும் நாட்களில் மறுசுழற்சி செய்யப்பட்ட தங்கம் உயர்ந்த மவுசுடன் திகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது." என்று இந்த அறிக்கை கூறியுள்ளது.
இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் குறைந்த அளவிலான தங்க ஆபரணங்களால், இறக்குமதிகளும் குறையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது திருவிழா மற்றும் திருமணங்கள் அதிக அளவில் நிகழக்கூடிய காலமான 2013 ஆம் ஆண்டின் பின்பாதியில் இருக்கக்கூடிய விநியோகத்தை பாதிக்கும் என்று இந்த அறிக்கை கூறியுள்ளது.
மேலும் புல்லியன் விலைகளில் ஏற்பட்ட சரிவு, 2013 ஆம் நிதியாண்டின் இறுதி காலாண்டின் போதும், பெரும்பாலான நகை வியாபாரிகளுக்கு சரக்கு இழப்புகளை ஏற்படுத்தியது என்றும் இந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
செய்கூலி அதிகரிப்பின் மூலம் நகை வியாபாரிகள் இதனை ஓரளவிற்கு சரிக்கட்ட முனைவர் என்றும், தங்க விலைகள் தொடர்ந்து உயரக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படும் அதே வேளையில், இந்த நிதியாண்டின் ஒட்டுமொத்த இயக்க லாபம் 2013 ஆம் நிதியாண்டில் இருந்ததைக் காட்டிலும் குறைவாக இருக்கும் என்றும் அவ்வறிக்கை உணர்த்தியுள்ளது.
எனினும், ஆபரேட்டிங் மார்ஜின் அளவுகோலைக் கொண்டு இந்த சரிவின் விஸ்தீரணத்தைப் பார்த்தால், வலுவற்ற கரன்ஸி மற்றும் இந்த உலோகத்துக்கான சாதகமான கிராக்கி மற்றும் விநியோக கோட்பாடுகளால் உந்தப்பட்டதனால் கடந்த சில மாதங்களாக சரசரவென உயர்ந்த தங்கத்தின் விலை, நமது முந்தைய கணிப்புகளான 2 சதவீதத்தைக் காட்டிலும் குறைவாகவே காணப்படுகின்றது.