மும்பை: அமெரிக்கச் சந்தையில் நவம்பர் மாதத்தில் வேலைவாய்ப்புகள் மற்றும் பணவீக்கம் அதிகரித்துள்ளதால் பெடரல் ரிசர்வ் வங்கியின் வட்டி உயர்வுக்கான சாதகமாகச் சூழ்நிலை அமைந்துள்ளது. இதனால் சர்வதேச சந்தைகளில் முதலீட்டாளர்கள், பங்குச்சந்தை மற்றும் கமாடிட்டி சந்தையில் செய்திருந்த முதலீட்டைத் தொடர்ந்து குறைத்து வருகின்றனர்.
இதன் காரணமாகத் திங்கட்கிழமை வர்த்தகத்தில் தங்கத்தின் விலை அதிகளவில் சரிந்தது. சர்வதேச சந்தையில் முதலீட்டாளர்களின் குறைவான முதலீடு மற்றும் வர்த்தகத்தால் திங்கட்கிழமை வர்த்தகத்தில் 6 வருடச் சரிவை எட்டியதுள்ளது தங்கம்.
இன்றைய வர்த்தகத்தில் 24 கேரட் 1 கிராம் தங்கத்தின் விலை 7 ரூபாய் குறைந்து 2,564 ரூபாய்க்கும், 22 கேரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை 7 ரூபாய் குறைந்து 2,397 ரூபாய்க்கும் வர்த்தகம் செய்யப்படுகிறது.
அதே போல் 1 கிலோ பார் வெள்ளியின் விலை 230 ரூபாய் குறைந்து 33,775 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் பெடரல் ரிசர்வ் வங்கியின் அறிவிப்பிற்குப் பின் தங்கம் மற்றும் பிற கமாடிட்டி பொருட்களின் விலை அதிகளவில் குறையும் எனச் சந்தை வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இந்திய பங்குச்சந்தையில் 60 சதவீதம் அன்னிய முதலீட்டாளர்கள் மூலம் வர்த்தகம் செய்யப்படுவதால், அமெரிக்கப் பெடரல் ரிசர்வ் வங்கியின் வட்டி உயர்விற்கான அறிவிப்புகள் வெளியான பின் இந்திய பங்குச்சந்தை அதிகளவிலான சரிவை சந்திக்கும் எனத் தெரிகிறது.
இதற்குச் சான்றாகக் கடந்த ஒரு மாத வர்த்தகத்தில் மட்டும் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு சுமார் 1,579 புள்ளிகள் வரை சரிந்துள்ளது.