டெல்லி: சர்வதேச சந்தையில் ஏற்பட்ட பொருளாதாரப் பிரச்சனைகளால் நடப்பு நிதியாண்டில் தங்கத்தின் விலை அதிகளவில் குறைந்தது. இதனால் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் தங்கத்தின் அளவு 2015ஆம் ஆண்டில் 1,000 டன்னாக இருக்கும் எனக் கணிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டைக் ஒப்பிடுகையில் இந்த 1,000 டன் தங்கம்11 சதவீதம் கூடுதலாகும். கடந்த ஆண்டு இந்திய சந்தையில் 900 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
விலை குறைவு..
தங்க இறக்குமதியின் அளவில் ஏற்பட்ட உயர்விற்கு முக்கியக் காரணம் சர்வதேச சந்தையில் ஏற்பட்ட அதன் விலை குறைவு தான், மேலும் இக்காலகட்டத்தில் கள்ளக்கடத்தல் மூலமாக இந்தியாவிற்குள் 100 டன் தங்கம் இந்தியாவுக்குள் வந்திருக்கலாம் என அகில இந்திய ஜெம்ஸ் அண்ட் ஜூவல்லரி சம்மேளனத்தின் தலைவர் ஜி.வி. ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.
850 டன் தங்கம் இறக்குமதி
இந்த ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரையான காலத்தில் 850 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் இறக்குமதி ஆன தங்கத்தின் அளவு 650 டன்னாகும்.
தேவையின் அளவு உச்சம்
இந்த ஆண்டு ஜூலை முதல் செப்டம்பர் வரையான காலத்தில் பண்டிகைக் காலம் மற்றும் திருமண நாள்கள் ஆகியன காரணமாகத் தங்கத்தின் நுகர்வு முந்தைய காலாண்டை விட அதிகமாக இருந்தது.
நடப்புக் கணக்குப் பற்றாக்குறை
பெட்ரோலியம் பொருள்களுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் அதிக அளவில் இறக்குமதி செய்யப்படுவது தங்கம்தான். நாட்டின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை அதிகரிப்புக்கு இதுவும் ஒரு காரணமாகும்.
தங்க முதலீட்டுத் திட்டங்கள்
இதனைத் தடுக்கும் விதமாக மத்திய அரசு இந்திய வீடுகள் மற்றும் கோவில்களில் முடங்கிக் கிடக்கும் தங்கத்தை வர்த்தகச் சந்தைக்குக் கொண்டு வர பல முயற்சிகள் செய்தும் மிகவும் குறைந்த அளவிலான தங்கத்தை மட்டுமே இத்திட்டங்கள் ஈர்த்தது.