சமீப காலமாக மிக பரப்பரப்பாக பேசப்பட்டு வரும் விஷயங்களில் ஒன்று பிட்காயின். இந்த பிட்காயின் முதலீடு என்பது ஒரு கட்டத்தில் தங்கத்திற்கே கூட பின்னடைவை கொடுக்கலாம் என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது.
உண்மையில் கிரிப்டோகரன்சிகள் தங்கத்திற்கு இணையாக முடியுமா? இதனால் தங்கம் விலையானது சரியுமா? என்ற பல கேள்விகள் எழுந்துள்ளது. ஏனெனில் லாபம் கொடுத்தாலும் பெரியளவில் கொடுக்கும், நஷ்டம் கொடுத்தாலும் பெரியளவில் இருக்கும். ஆக இந்த கிரிப்டோகரன்சிகள் தங்கத்தில் தாக்கத்தினை ஏற்படுத்துமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
அதெல்லாம் சரி முதலில் கிரிப்டோகரன்சி என்றால் என்ன? அது தங்கத்திற்கு ஈடாகுமா? வாருங்கள் பார்க்கலாம்.
கிரிப்டோகரன்சி என்றால் என்ன?
கிரிப்டோகரன்சி, தங்கம் இந்த இரண்டின் பாதையும் வேறு வேறு தான் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஏனெனில் கிரிப்டோகரன்சி என்பது ஒரு வகையான டிஜிட்டல் நாணயம் ஆகும். உருவ வடிவம் இல்லாத இந்த நாணயத்தை, நம்மால் பார்க்கவோ தொடவோ இயலாது. இது டிஜிட்டல் பரிவர்த்தனையைப் போன்றதாகும். உதாரணத்திற்கு உங்களது பேடிஎம் வாலட்டில், நீங்கள் செலுத்தும் பணத்தை உங்களது வங்கிக் கணக்கில் மாற்றும் வரை, அதை உங்களால் கையில் பெற முடியாது. அதைப் போலத்தான் இந்த நாணயமும். இதன் மதிப்பு சர்வதேச சந்தையில் நிர்ணயிக்கப்படுகிறது. ஆனால் இதனை நாம் கையில் பெற முடியாது. ஆனால் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
தங்கம் போல் அல்ல
இது குறித்து இடி-யில் வெளியான செய்தியொன்றில் இன்வெஸ்கோவின் தலைவர் அர்னாப் தாஸ், கிரிப்டோகரன்சி பற்றிய ஒரு அறிக்கையில், கிரிப்டோகரன்சி என்பது ஒரு சுவாரஸ்யமான யோசனை. இதனை சிறிது ஹெட்ஜிங் ஆக பயன்படுத்தலாம். ஆனால் தங்கத்தினை போல பயன்படுத்த முடியாது. இதனை நான் மிகைப்படுத்த விரும்பவில்லை.
எப்போது பிரச்சனை?
தங்கம் மிகவும் முக்கியமானது. ஆனால் டிஜிட்டல் நாணயங்களுக்கும் ஒரு இடம் உண்டு. நிறைய கிரிப்டோகரன்சிகள் மற்றும் தங்கம் பணவீக்கம் மற்றும் பணவாட்டத்திற்கு எதிரான பயன்படுத்தப்படும் ஹெட்ஜிங் ஆகும். அவை டிஜிட்டல் சொத்துகள். ஆனால் அவற்றை நாணயமாக பயன்படுத்தப்படும்போது தான் பிரச்சனையே என்று கூறியுள்ளார்.
போர்ட்போலியோ முதலீடு
உங்களுக்கு பாதுகாப்பு மற்றும் பணப்புழக்கம், நீண்டகால ஆயுள் தேவை. ஆனால் அந்த வேலையை கிரிப்டோகரன்சி செய்யுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இது மற்ற நிதிச் சொத்துகளை போலவே மேலும் கீழும் செல்லகூடும். ஆக இது தங்கத்தினை போல போர்ட்போலியோவில் இருப்பது கடினம் என்று அர்னாப் கூறியுள்ளார்.
நம்பிக்கையில் தான் முதலீடு
இணையத்தில் தற்போது பல கிரிப்டோகரன்சிகள் பயன்பாட்டில் உள்ளது. ஆனால் இவை அனைத்துமே இணையத்தில் மட்டுமே உருவாக்கி பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஒரு வேளை ஒவ்வொரு நாட்டின் மத்திய வங்கிகள் இதனை அங்கீகரித்தால் இதன் மீதான நம்பிக்கை கூடும். ஆக இந்த சூழ்நிலையில் இவற்றை வாங்குவது என்பது பங்கு சந்தையில் முதலீடு செய்வதை போன்றது தான். பங்கு சந்தைகளாவது நிறுவனங்கள் மீதான நம்பிக்கைக்கு மத்தியில் முதலீடு செய்யப்படுகின்றன. ஆக மக்களுக்கு எப்போது இதன் மீதான நம்பிக்கை குறைய ஆரம்பிக்கிறதோ அப்போது இதன் மதிப்பு குறையலாம்.
தங்கதிற்கு ஈடு இணை இல்லை
கிரிப்டோ கரன்சி என்றவுடன் மக்களின் நினைவிற்கு முதலில் வருவது பிட்காயின் (bitcoin) தான். இது 2009 இல் உருவாக்கப்பட்டது. இதனை உருவாக்கியவர் சடோஷி நாகமோடோ (Satoshi Nakamoto) என்கிற தனிநபர் என்று கூறுகிறார்கள். ஆனால் உண்மை இதுவரை என்னவென்று இதுவரை தெளிவாக தெரியவில்லை. ஆக தங்கம் எப்போதுமே பாதுகாப்பு புகலிடம் தான். அதனை அடித்துக் கொள்ள வாய்ப்பே இல்லை என்பது தான் மறுக்கமுடியாத உண்மை.