தங்கம் என்றாலே இந்திய மக்கள் மனதில் புரியாத ஒரு மகிழ்ச்சி வரும், காலம் காலமாக இந்திய மக்கள் குறிப்பாகத் தென்னிந்திய மக்கள் தங்கத்தை வெறும் நகைகளாகப் பார்ப்பது மட்டும் அல்லாமல் நீண்ட கால முதலீடாகப் பார்க்கும் காரணத்தால் விலை அதிகரித்தாலும் சரி, குறைந்தாலும் சரி நகைக் கடைகளில் கூட்டம் குறைவது இல்லை.
இந்த நிலையில் தான் மத்திய அரசு இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து தங்க நகைகளின் தரத்தை உறுதி செய்யும் வகையில் அனைத்து தங்க நகைகளுக்கும் ஹால்மார்க்கிங் விதிமுறையைக் கொண்டு வந்தது.
ஆனால் தற்போது சந்தையில் ஏராளமான போலி ஹால்மார்கிங் கொண்ட தங்க நகைகள் வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பிள்ளைகள் திருமணத்திற்குத் தங்கம் வாங்குவோர், சேமிப்புக்காகத் தங்கம் வாங்குவோர், ஆசைக்காகத் தங்கம் வாங்குவோர் என அனைத்து தரப்பினரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
போலி ஹால்மார்க்
உலகிலேயே அதிகத் தங்க நகைகளை வாங்கும் ரீடைல் சந்தையைக் கொண்டு உள்ள இந்தியாவில் போலி ஹால்மார்க் கொண்ட தங்க நகைகள் அதிகமாக வலம் வருவதாக முன்னணி நகைக் கடைகள் மற்றும் இத்துறை அமைப்புகள் மக்களை எச்சரித்துள்ளனர்.
தங்க நகைகள்
இத்தகைய போலி ஹால்மார்க்கிங் கொண்ட தங்க நகைகளின் வர்த்தகம் குறித்து ஏற்கனவே இத்துறை வர்த்தக அமைப்புகள் மத்திய அரசின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளது, சந்தையில் போலி ஹால்மார்க் செய்யப்பட்ட தங்க நகைகள் வருவதையும், விற்பனை செய்வதையும் தடுக்கும் புதிய கட்டுப்பாடு மற்றும் விதிமுறைகளுக்காகக் காத்திருக்கிறது.
BIS ஹால்மார்க்
இந்தியாவில் Bureau of Indian Standards (BIS) தங்க நகை சில்லறை விற்பனையில் ஹால்மார்க்கிங்-ஐ கட்டாயமாக்கினாலும், போலி ஹால்மார்க் முத்திரை கொண்ட நகைகள் இன்னும் நாட்டில் பல இடங்களில் புழக்கத்தில் தான் உள்ளன.
கடத்தல் தங்கம்
சட்டவிரோதமாக செயல்படும் நகை தயாரிப்பு மையங்களில், கடத்தப்பட்ட தங்கத்தைக் கொண்டு தயாரிக்கப்படும் நகைகள் தான் போலி ஹால்மார்க் முத்திரை கொண்டு சில்லறை விற்பனை சந்தைக்கு வருகிறது. அத்தகைய தங்கம் கிராமுக்கு ₹200-300 வரை குறைந்த விலையில் விற்கப்படுகிறது.
மலபார் கோல்டு & டைமண்ட்ஸ்
இத்தகைய போலி ஹால்மார்க் முத்திரை கொண்ட நகைகள் குறித்து மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் நிறுவனத்தின் தலைவர் எம்.பி.அகமது கூறுகையில், சட்டப்படியும், நெறி முறைப்படியும் வியாபாரம் செய்யும் நகைக்கடைக்காரர்களுக்கு இது மிகப்பெரிய சவாலாக உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
இறக்குமதி வரி
இந்தியாவில் தங்கம் இறக்குமதியைக் கட்டுப்படுத்த மத்திய அரசு தங்கம் மீதான இறக்குமதி வரியை உயர்த்தியதால், அதிக அளவில் கடத்தல் தங்கம் உள்நாட்டுச் சந்தைக்கு வந்துள்ளது. இதன் மூலம் அங்கீகரிக்கப்படாத நகை தயாரிப்பு மையங்களில் நகைகளாக மாற்றப்பட்டுப் போலி ஹால்மார்க் முத்திரை உடன் ரீடைல் சந்தை விற்பனைக்கு வருகிறது.
வரி வருவாய் இழப்பு
இதனால், அரசுக்கு ஆண்டுக்கு பல கோடி ரூபாய் வரி வருவாய் இழப்பு ஏற்படுகிறது. போலி ஹால்மார்க்கிங், தூய்மையற்ற தங்கத்தால் செய்யப்பட்ட நகைகளை வாங்கும் மக்களுக்கு இது பெரும் இழப்பாக உள்ளது. எனவே மக்கள் உஷாராகவும், நம்பிக்கையான இடத்தில் தங்கம் வாங்குவதும் தான் சரியாக இருக்கும்.