டெல்லி: தங்க நகை விற்பனையாளர்கள் அடுத்த ஆண்டு ஜனவரி 15ம் தேதி முதல், ஹால்மார்க் முத்திரை உள்ள நகைகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் கூறியுள்ளார்.
மேலும் தங்க நகை வர்த்தகத்தில் முறைகேடுகளை தடுப்பதற்கு மூன்று கிரேடுகளில் மட்டுமே தங்க நகை விற்பனை செய்ய வேண்டும் என்ற நடைமுறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்த நடைமுறையை செயல்படுத்த ஓராண்டு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் மத்திய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் ராம்விலாஸ் தெரிவித்துள்ளார்.
மூன்று கிரேடுகளில் விற்பனை
இதன் படி 14 கேரட், 18 கேரட் மற்றும் 22 கேரட் உள்ளிட்ட மூன்று கிரேடுகளில் மட்டுமே தங்க நகை விற்பனை செய்யப்பட வேண்டும். இதோடு இந்திய தர நிர்ணய அமைப்பு பிஐஎஸ் சான்றான ஹால்மார்க் முத்திரை இடம்பெற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இதை செயல்படுத்த ஜனவரி 15, 2021 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
அபராதம் & தண்டனை
இந்த தங்க நகை ஹால்மார்க் கட்டாய நடைமுறை தொடர்பான அறிவிப்பு விரைவில், நுகர்வோர் விவகார அமைச்சகத்தால் வெளியிடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த திட்டம் நடைமுறை படுத்தப்பட்ட பின்பு ஹால்மார்க் முத்திரையுடன் 14, 18 மற்றும் 22 கேரட் நகைகளை மட்டுமே விற்க முடியும். இதையும் மீறி விற்பனை செய்தால் ஓராண்டு சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஹால்மார்க் மதிப்பீடு மையங்கள்
தற்போது நாடு முழுவதும் 234 மாவட்டங்களில் 892 ஹால்மார்க் மதிப்பீடு மற்றும் முத்திரை வழங்கும் மையங்கள் உள்ளன. சுமார் 28,849 நகைக்கடைகள் இதில் பதிவு செய்துள்ளன. ஆக நகை விற்பனையாளர்கள் இந்த விதிகளை மீறினால் ஒரு லட்சம் ரூபாய் முதல் நகையின் மதிப்பில் 5 மடங்கு வரை அபராதம் விதிக்கப்படும். மேலும் ஓராண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.
தரமானதை பார்த்து வாங்குகள்
மேலும் ஹால்மார்க் முத்திரை மற்றும் மதிப்பீடு மையங்களை அனைத்து மாவட்டங்களிலும் ஏற்படுத்த வேண்டும் என்பதை இலக்காக வைத்துள்ளதாகவும் பஸ்வான் தெரிவித்துள்ளார். இதன்படி அடுத்த ஆண்டு ஜனவரி 15ம் தேதிக்கு பிறகு நகை வாங்குபவர்கள் பிஐஎஸ் ஹால்மார்க் தர முத்திரை, கேரட் அளவு, மதிப்பீடு மையத்தின் பெயர் மற்றும் ஜூவல்லரி முத்திரை இருக்கிறதா என்பதை பார்த்து வாங்க வேண்டும்.