முதலீடு என்றாலே நம் வாழ்க்கையில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அதிலும் ஓய்வுகாலத்திற்கான முதலீடு எனும்போது இன்னும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
ஏனெனில் இளமை காலத்தில் கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை, வயதான காலத்திலாவது நன்றாக இருக்க வேண்டும். நாம் கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை, குழந்தைகளாவது நன்றாக இருக்க வேண்டும் என்பது தான்.
ஆனால் இதனை செயல்பாட்டில் செயல்படுத்துவது என்பது மிக கஷ்டமான விஷயம் தான். ஆனால் நிதி ரீதியாக நீங்கள் தயாராக இருந்தாலே, பெரும்பாலான பிரச்சனைகளை தவிர்க்க முடியும். அந்த வகையில் மாதம் 1,000 ரூபாய் முதலீட்டின் மூலம் 26 லட்சம் ரூபாய் எப்படி சாத்தியம்? எப்படி திட்டத்தில் இணைவது? யாரெல்லாம் இணையலாம்? என்பதனை பார்க்கலாம் வாருங்கள்.
எந்த திட்டம்?
அந்த வகையில் நாம் இன்று பார்க்கவிருப்பது அஞ்சலகத்தின் பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் தான். இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் எப்படி 26 லட்சம் ரூபாய் பெற முடியும் வாருங்கள் விரிவாக பார்க்கலாம்.
இந்தியாவினை பொறுத்தவரையில் பல ஆயிரம் முதலீட்டு திட்டங்கள் இருந்தாலும், அஞ்சலக முதலீட்டு திட்டங்கள் என்றாலே அதற்கு தனி இடம் உண்டு. ஏனெனில் பாதுகாப்பானது. கணிசமான வருவாய் உண்டு. எல்லாவற்றிற்கும் மேலாக முதலீட்டுக்கு எந்த பங்கமும் இல்லை. அந்த வகையில் அஞ்சலகத்தில் பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்திற்கு என்றுமே மக்களிடத்தில் தனி இடம் உண்டு.
பொது வருங்கால வைப்பு நிதி (PPF)
இந்த திட்டம் 15 ஆண்டுகால திட்டம். இதில் வரிச்சலுகையும் உண்டு. இதற்கான வட்டி விகிதம் தற்போதைய நிலவரப்படி 7.1% ஆகும். இதற்காக வட்டியினை அரசு சந்தை நிலவரத்திற்கு ஏற்ப, ஒவ்வொரு காலாண்டிலும் மாற்றியமைக்கிறது.
இந்த திட்டத்தில் முதிர்வுக்கு பின்னரும் 5 வருட தொகுப்புகளாக மீண்டும் தொடரலாம் என்பதால், இது இன்னும் கூடுதல் நன்மையாக பார்க்கப்படுகிறது. இந்த கணக்கினை வங்கிக் கணக்கு மூலமாகவோ அல்லது அஞ்சலகம் மூலமாகவோ இணைந்து கொள்ளலாம்.
குறைந்தபட்ச முதலீடு எவ்வளவு?
பிபிஎஃப் கணக்கில் வருடத்திற்கு குறைந்தபட்சம், 500 ரூபாய் முதல் செலுத்திக் கொள்ளலாம், அதிகபட்சமாக 1.5 லட்சம் வரையில் முதலீடு செய்து கொள்ளலாம். இதனை நீங்கள் 12 தவணைகளாக தொகையாகவும் செலுத்திக் கொள்ளலாம். ஒரு தனி நபர் கட்டாயம் 1.5 லட்சத்திற்கு மேல் செலுத்த முடியாது. அப்படி அதிகமாக செலுத்த வேண்டும் எனில், நீங்கள் உங்கள் குடும்ப உறுப்பினர்கள் பெயரில் கணக்கினை தொடங்கி செலுத்திக் கொள்ளலாம்.
லட்சத்தில் வருமானம்
அஞ்சலகத்தின் இந்த திட்டத்தின் மூலம் மாதம் 1,000 ரூபாய் முதலீடு செய்தால், 15 ஆண்டுகளுக்கு பிறகு, அதாவது முதிர்வுக்கு பிறகு லட்சங்களில் உங்களால் வருமானம் பெற முடியும். ஆனால் அந்த சமயத்தில் 26 லட்சம் ரூபாய் சாத்தியமில்லை. அதெல்லாம் சரி 1000 ரூபாய் முதலீடு மூலம் எப்படி 26 லட்சம் ரூபாய் பெற முடியும். உதாரணத்திற்கு நீங்கள் இந்த திட்டத்தினை 20 வயது முதல் தொடங்குகிறீர்கள் என வைத்துக் கொள்வோம். உங்களால் 0 வயது வரையில் இதனை தொடர முடியும் என்றால், மேற்கொண்ட கார்பஸ் தொகையானது சாத்தியமான ஒன்றே.
15 ஆண்டு முதிர்வு காலம்
நீங்கள் மாதம் 1,000 ரூபாய் வீதம் 15 ஆண்டுகளுக்கு முதலீடு செய்யும்போது, நீங்கள் 1.80 லட்சம் ரூபாய் முதலீடு செய்வீர்கள். வட்டி விகிதம் 7.1% என கணக்கீடு செய்து கொண்டால், நீங்கள் மொத்தம் 3.25 லட்சம் ரூபாய் முதிர்வுக்கு பிறகு பெறுவீர்கள்.
5 ஆண்டுகளாக அதிகரிக்கலாம்
3.25 லட்சம் ரூபாய் முதிர்வு தொகையை, நீங்கள் மீண்டும் 5 ஆண்டுகள் அதிகரிக்கலாம். இதன் மூலம் உங்களது முதலீடு 5.32 லட்சம் ரூபாயாக பெருகும்.
இதனை இரண்டாவது ஐந்தாண்டு தொகுப்பின் மூலம் 5 ஆண்டுகள் அதிகரிக்கும்போது 8.24 லட்சம் ரூபாய் கிடைக்கும்.
இப்படி தொடர்ந்து 5 முறை நீங்கள் அதிகரித்தால் உங்களது 1000 ரூபாய் முதலீடானது, 40வது வருடத்தில் 26.32 லட்சம் ரூபாயாக பெருகும்.
எனினும் இந்த முதலீட்டினை நீங்கள் உங்கள் இளமை காலத்தில் தொடங்கினால் மட்டுமே இது சாத்தியம். ஒரு வேளை நீங்கள் தற்போது 30 வயதானவர், அல்லது 35 வயதானவர் எனில், அதற்கேற்ப முதலீட்டினை அதிகரிக்க வேண்டும். அப்போது தான் இது சாத்தியமாகும்.
அதிகபட்ச முதலீடு செய்தால்?
பிபிஎஃப் திட்டத்தில் அதிகபட்ச முதலீட்டு தொகையான மாதம் 12,500 ரூபாய் முதலீடு செய்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். இதன் மூலம் நீங்கள் வருடத்திற்கு 1,50,000 ரூபாய் முதலீடு செய்வீர்கள்.
15 வருடத்தில் நீங்கள் 22,50,000 ரூபாய் முதலீடு செய்திருப்பீர்கள். தற்போதைய வட்டி விகிதம் - 7.1%, இதன் மூலம் வட்டி வருமானம் - ரூ.18,18,209, மொத்த முதிர்வு தொகை - ரூ.40,68,209. இதனை 5 வருட காலம் நீடித்தால் உங்கள் கைக்கு - ரூ.66,58,288 ரூபாய் கிடைக்கும். இதனை தொடர்ந்து நீடித்தால் உங்களது கார்ப்பஸ் தொகையானது நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவில் பெருகும்.
இந்த திட்டத்தில் 3 ஆண்டுகளுக்கு பிறகு பிணையமாக வைத்துக் கொண்டு கடன் பெற்றுக் கொள்ள முடியும்.
*****எனினும் இன்றைய காலகட்டத்தில் பணவீக்க விகிதத்திற்கு ஏற்ப திட்டமிட்டு முதலீடு செய்ய வேண்டும். உதாரணத்திற்கு இன்று உங்களுக்கு மாதம் 30,000 ரூபாய் தேவைப்படுகின்றது எனில், இன்னும் 30 - 50 வருடங்களில் உங்களது தேவை அதிகரிக்க கூடும். ஆக உங்களது தேவை, இலக்கு என அதற்கேற்ப, சரியான முதலீட்டு ஆலோசகரை அணுகி உங்களது முதலீடுகளை செய்யலாம்.