இன்றளவிலும் வீட்டில் கஷ்டமான காலகட்டத்தில் ஆபத்பாந்தவனாக கைகொடுப்பது தங்கம் தான். ஏனெனில் கேட்டவுடன் சிறிது நேரத்தில் அதிக ஆவணங்கள் இல்லாமல், விரைவில் தரத்திற்கு ஏற்ப கடன் கிடைக்கும் என்றால் அது தங்கத்திற்கு தான்.
இன்றும் பல நடுத்தர குடும்பங்களில் அவசர தேவைக்கு உதவுவது தங்கம் தான். ஆக நம்மவர்கள் அதிகளவில் இதன் மீது மோகம் கொள்வதற்கு ஒரு முக்கிய காரணம் இதுவும் தான்.
ஏனெனில் நினைத்த நேரத்தில்? எந்த கேள்வியும் கேட்காமல்? குறைந்த நேரத்தில் பணம் கிடைக்கும் என்றால் அது நகைக்கடன் தான். அதோடு தேவை இருக்கும்போது மீட்டு பயன்படுத்திக் கொண்டு, திரும்ப வாங்கிக் கொள்ளலாம். இதே மற்ற கடன்களுக்கு பல விதிமுறைகள், ஆவணங்கள் தேவைப்படும் நிலையில், நகைக்கடனுக்கு அப்படி ஏதும் தேவையில்லை என்பதும் ஒரு சிறப்பான விஷயமே.
கையில் பணம் இருக்கும்போது செலுத்தலாம்
அதோடு நகையை வைத்து குறைந்த நேரத்தில் பல லட்சம் கடன்களை பெற்றுக் கொள்ளலாம். வட்டியை மட்டும் செலுத்திக் கொண்டு, நம் கையில் பணம் இருக்கும்போது அசலை திரும்ப செலுத்திக் கொள்ளலாம் என்பதால், மக்களின் விருப்பமான ஒன்றாக இருக்கிறது. மேலும் இந்த நகைக்கடனை குறைந்தபட்சம் 18 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் பெற்றுக் கொள்ளலாம்.
நகைக்கடன்
எனினும் மற்ற கடன்களில் இருந்து தங்க நகைக்கடன் வேறுபட்டது. ஏனெனில் இரு சக்கர வாகன லோன் அல்லது கார் கடன் என்றால், அதனை நீங்கள் மாதந்தோறும் செலுத்திக் கொள்ளலாம். ஆனால் தங்க நகையை பொறுத்த வரையில், நீங்கள் வட்டியை மட்டுமே செலுத்த முடியும், மொத்தமாக கடனை செலுத்திய பின்னரே கடனை அடைக்க முடியும்.
எவ்வளவு கடன் பெறலாம்
உங்களது நகை குறைந்தபட்சம் 18 காரட் ஆவது இருக்க வேண்டும். பொதுவாக தங்க நகையின் மதிப்பில் 80% கடனாக பெற முடியும். தங்க நகைக்கடனுக்கோ பெரியதாக ஆவணம் ஒன்றும் தேவையில்லை. சொல்லப்போனால் உங்களது முகவரி சான்று மற்றும் அடையாள சான்று இருந்தால் போதுமானது,
என்னென்ன பயன்கள்
உங்களின் அவசர தேவைக்கு பயன்படும் நகைக்கடன் பாதுகாப்பான ஒன்று. குறைவான ஆவணங்கள் போதுமானது. இதற்கு குறைந்த அளவில் கடன் வாங்கும்போது கிரெடிட் ஸ்கோர் பார்க்கப்படுவதில்லை. இந்த கடன்களுக்கு இரண்டு வருடம் வரை அவகாசம் வழங்கப்படுகிறது. உங்களது கடன் மதிப்பு அதிகரிக்கும்போது வட்டியும் அதிகரிக்கும். நீங்கள் கடன் வாங்கும்போது தங்கம் விலை நிலவரப்படி கடன் வழங்கப்படுகிறது.
நகைக்கடன் கவனிக்க வேண்டியவை
மற்ற கடன்களுடன் ஒப்பிடும்போது நகைக்கடனுக்கு வட்டி சற்று குறைவு தான். எனினும் இந்த வட்டி விகிதங்கள் வங்கிகளுக்கு வங்கி வித்தியாசப்படும். நிதி நிறுவனங்களிலும் வட்டி வித்தியாசப்படுவதால், உங்களுக்கு ஏற்றதொன்றை தேர்தெடுக்கலாம். இங்கு செயல்பாட்டுக் கட்டணம் உண்டு. இதுவும் வங்கிக்கு வங்கி மாறுபடும். இது தவிர டாக்குமெண்ட் கட்டணம்,அப்ரைசர் கட்டணம், ஒவர்டியூ கட்டணம் உள்ளிட்டவற்றை கவனிக்க வேண்டும். கடனை திரும்ப செலுத்தும் கால அவகாசத்தினையும் கவனிக்க வேண்டும். எப்போதுமே நகைக்கடன் வாங்கும்போது ஒப்பிட்டு பார்த்து வாங்குவது நல்லது.
எந்த வங்கியில் எவ்வளவு வட்டி?
பஞ்சாப் & சிந்த் வங்கி வருடத்திற்கு - 7%
பேங்க் ஆப் இந்தியா வருடத்திற்கு - 7.35%
எஸ்பிஐ-யில் வருடத்திற்கு - 7.5%
கனரா வங்கியில் வருடத்திற்கு - 7.65%
யூனியன் வங்கியில் வருடத்திற்கு - 8.2%