சூடான் நாட்டில் இருந்து தெற்குச் சூடான் தனியாக பிரிந்து சென்ற உடன் எண்ணெய் வருமானம் நின்றுபோனது. இதனையடுத்து அந்நாட்டின் வருமானத்தை பெருக்கும் வகையில் தங்க சுத்திகரிப்பு ஆலை திறக்கப்பட்டுள்ளது. ஆப்பிரிக்காவின் மிகப் பெரிய அந்த ஆலையை சூடான் அதிபர் ஓமர் அல்பஷீர் திறந்து வைத்தார்.
சூடானில் உள்ள தங்கத் தொழிற்சாலைகளில் வருடத்திற்கு 328 டன் தங்கத்தை உற்பத்தி செய்து வருகிறது. இந்த ஆலை உற்பத்தியின் மூலம் சுமார் 300 கோடி டாலர் அளவிற்கு தங்கம் விற்பனை செய்ய எதிர் பார்க்கப்படுகிறது. இப்பகுதியில் வெட்டி எடுக்கப்படும் தங்கம் மட்டும் இல்லாமல் வெளிநாட்டிலிருந்து வரும் தங்கத்தையும் இங்கு சுத்திகரிப்பு செய்ய முடியும்.
இந்த ஆலை ஒரு நாளைக்கு 900 கிலோ தங்கத்தையும் மற்றும் 200 கிலோ வெள்ளியையும் உற்பத்தி செய்யும். இந்த ஆலையில் ஆண்டுக்கு 270 டன் தங்கம் சுத்திகரிப்பு செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த தங்க சுத்திகரிப்பு ஆலைமூலம் அந்நிய முதலீடு அதிகரிக்கும் என்று அந்நாட்டு அமைச்சர் அலிமுகமது கூறினார்.
சூடான் நாட்டிலிருந்து 58 டன் தங்கம் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. சூடான் நாடு பிரிந்த பின்னர் எண்ணெய் வருமானம் இல்லாமல் போனாலும் அந்த வெற்றிடத்தை இந்த தங்கச் சுரங்கம் நிரப்பிவிடும் என்று அந்நாட்டு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதுதான் ஒரு கதவு மூடினால் ஆயிரம் ஜன்னல் திறக்கும் என்பதோ? இனியாவது தங்கம் விலை குறைந்தால் சரிதான்!.