ரூ. 2 லட்சத்திற்கும் மேற்பட்ட தங்க விற்பனைகளுக்கு(தங்க நாணயங்கள் மற்றும் தங்க பத்திரங்கள் உட்பட) 1 சதவீத வரி (டிசிஎஸ்) பிடித்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதே போன்று திருத்தப்பட்ட 2013 நிதி மசோதாவின்படி, ரூ 5 லட்சத்திற்கும் மேல் ரொக்கத்திற்கு வாங்கும் தங்க ஆபரணங்களுக்கும் 1 சதவீதம் வரி விதிக்க திட்டமிடப்பட்டிருக்கிறது. மாற்றப்ட்ட புதிய விதிகள் வரும் ஜூன் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன.
தற்போதுள்ள விதிமுறைகளின் படி தங்க நாணயங்கள் தங்கம் மற்றும் ஆபரணங்களின் பட்டியலில் சேர்க்கப்படவில்லை. எனவே, ரூ 2 லட்சத்திற்கும் அதிக மதிப்புடைய தங்க நாணயங்களின் பரிவர்த்தனைகளின் போது எவ்வித வரியும் விதிக்கப்படவில்லை என கூறப்படுகின்றது.
தற்போது புதிதாக எந்த ஒரு வரியும் விதிக்கப்படவில்லை என்றும், தங்க நாணயங்கள் மற்றும் தங்க பத்திரங்களுக்கு (10 கிராம் அல்லது அதற்கு குறைந்த எடையுள்ள) அளிக்கப்பட்டிருந்த விதி விலக்கு நீக்கப்பட்டுள்ளது என்று செவ்வாய்க்கிழமை மக்களவையில் தாக்கல் செய்துள்ள மசோதாவின் மூலம் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
"இது புதிய வரி அல்ல. நடைமுறையில் உள்ள பழைய வரியே. ஆனால், அதில் அளிக்கப்பட்டிறுந்த 10 கிராம் அல்லது அதற்கு குறைந்த எடையுள்ள தங்க நாணயங்கள் மற்றும் தங்க பத்திரங்களுக்கு கொடுக்கப்பட்டிருந்த விதி விலக்கு மட்டும் நீக்கப்பட்டுள்ளது" என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மக்களவையில் இம்மசோதாவை தாக்கல் செய்து பேசிய நிதி அமைச்சர் திரு ப. சிதம்பரம், "தற்போது நடைமுறையில் உள்ள விதி விலக்கு, பல்வேறு முறைகேடுகளுக்கு வழி வகுக்கின்றது", என்று கூறினார். தற்போது, இந்த மசோதா மாநிலங்களவையின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் பின் ஜனாதிபதியின் கையொப்பம் பெற்று சட்டமாக நிறைவேற்றப்படும்.