அட்சயதிருதியை முன்னிட்டு புதுப்புது டிசைன்களில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள தங்க நகைகள்
சென்னை: அட்சயதிருதியை தினத்தில் தங்க நகை விற்பனை அதிகளவில் இருக்கும் என்பதால், 40 சதவீதம் கூடுதலாக தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக நகை வியாபாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக தகவல் தெரிவித்துள்ள தங்க, வைர நகை வியாபாரிகள் சங்கம், அட்சயதிருதி அன்று பொதுமக்கள் போட்டி போட்டிக்கொண்டு தங்க நகையை வாங்கி குவிக்கின்றனர். எனவே கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 40 சதவீதம் தங்க விற்பனை கூடுதலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக கூறியுள்ளது.

இதற்கேற்றாற் போல கடந்த மாதம், 30 முதல் 40 சதவீதம் வரை தங்கம் இறக்குமதி கூடுதலாக செய்யப்பட்டுள்ளது என்றும் அச்சங்கம் தெரிவித்துள்ளது. மேலும் கடந்த 60 நாட்களாக தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்த காரணத்தினால், தங்க நகை விற்பனை மிக மந்தமாக காணப்பட்டது.
பெரும்பாலான மக்கள் அட்சயதிருதிக்கு நகை வாங்கி கொள்ளலாம் என நினைத்துள்ள காரணத்தாலும், நகை விற்பனை தற்போது மந்தமாக காணப்படுகிறது. இதனையடுத்து மக்களை மேலும் ஈர்க்கும் வகையில், கண்கவரும் வடிவமைப்பு நகைகளை பெரும்பாலான நிறுவனங்கள் விற்பனைக்கு தயாராக வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 7-ம் தேதியன்று அட்சயதிருதி தினம் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் நகை வாங்கினால் குடும்ப வளம் செழிக்கும் என்பது பலரது நம்பிக்கையாகும். இதனால் அந்நாளில் குண்டுமணி தங்கமாவது வாங்கிவிட வேண்டும் என்பதை, பெரும்பாலான மக்கள் வழக்கமாக கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications