மதுரை: அட்சய திருதியை என்றாலே அன்றைக்கு தங்கம் வாங்கியே ஆகவேண்டும் என்ற எண்ணம் அனைவரின் மனதிலும் ஆழப்பதிந்துவிட்டதாலும், அன்றைக்கு ஒரு குண்டுமணி அளவாவது தங்கம் வாங்கினால் ஆண்டு தோறும் தொடர்ந்து வாங்கிக் குவிக்க முடியும் என்று நம்பிக்கையினாலும் இந்த நன்னாளில் அனைவருமே தங்கம் வாங்க ஆர்வமாக உள்ளனர்.
மேலும் அட்சய திரிதியை நாளில் தங்கம் வாங்கினால் குடும்பத்தில் செல்வம் பெருகும் என்று நீண்டகாலமாகவே மக்கள் நம்பிக்கொண்டிருப்பதாலும் அன்றைய நாளில் தங்கம் வாங்க பெரும்பாலான மக்கள் தங்கம் வாங்க அலைமோதுகின்றனர்.
தங்கத்தின் மதிப்பு என்றைக்குமே குறைவதில்லை. அதன் காரணமாகவே சாமானிய மக்கள் முதல் பணக்காரர்கள் வரையிலும் தங்களின் பணத்தை சேமிக்கும் வழிகளில் முதல் விருப்பமாக தங்கத்தை தேர்ந்தெடுக்கின்றனர்.
அது மட்டுமல்லாமல் பொருளாதார நெருக்கடி மற்றும் பணவீக்க நெருக்கடி போன்ற காலங்களில் கூட அதையும் தாண்டி நிலைத்து நிற்பதால் தான் அனைவருமே அட்சய திரிதியை நன்னாளில் தங்கம் வாங்குவதற்கு ஆர்வமாக உள்ளனர்.
அவசர காலத்தில் நம்மைக் காக்கும் கவசமாகவும் தங்கம் இருப்பதால் தான் மற்ற அனைத்து முதலீடுகளையும் தவிர்த்துவிட்டு தங்கத்தில் முதலீடு செய்ய அனைவருமே முன்வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகால வரலாற்றில் பணவீக்க விகிதத்தையும் தாண்டி தங்கம் அதிக லாபத்தை தந்துவருவரு குறிப்பிடத்தக்கது.
தங்கத்தின் வருமானம் என்பது அள்ள அள்ள குறையாமல் வரும் அட்சய பாத்திரம் போன்றது என்ற காரணத்தினாலும், அட்சய திரிதியை நன்னாளில் தங்கத்தை வாங்கியே ஆகவேண்டும் என்று அனைத்து தரப்பினரும் நினைக்கின்றனர். அதாவது இந்த மஞ்சள் உலோகமே தனி மனிதனுக்கு நிலையான வருமான விகிதத்தை அளிக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.
ஒருவர் தன்னுடைய சொத்து மற்றும் முதலீட்டுப் பட்டியலில் (Portfolio) முதலிடம் கொடுப்பது தங்கத்திற்குத்தான். மற்ற முதலீடுகளில் ஏற்படும் ஏற்ற இறக்கம் மற்றும் இழப்பு என்ற காரணிகள் எதுவும் தங்கத்தை பாதிப்பதில்லை. பங்குச் சந்தையில் இறக்கம் ஏற்படும் காலங்களிலும் பெரும்பாலானவர்கள் தங்களின் முதலீட்டை தங்கத்திற்கு மாற்றுகின்றனர். இதன் மூலம் முதலீட்டுப் பட்டியல் அதிக இழப்பு ஏற்படுவது தடுக்கப்படுகிறது.
தங்கம் எளிதாக பரிமாற்றம் செய்யக்கூடிய உலோகம் என்பதால், உலகளாவிய அளவில் மற்ற எந்த உலோகத்தையும் விட தங்கத்தை மாற்றிக்கொள்வதும் விற்பனை செய்வதும் மிக எளிதானது. தரமான தங்கத்திற்கு என்றைக்குமே மதிப்பு அதிகமாகும்.
ஆன்-லைன் மூலமாகவும் தங்கத்தை எளிதில் வாங்கவோ அல்லது விற்கவோ முடியும் என்பது இதன் சிறப்பம்சமாகும். பங்குச்சந்தையில் பங்குகளை வாங்கி விற்பது, ரியல் எஸ்டேட் துறையில் வீடுகளை வாங்கி விற்பது என இரண்டை விட தங்கத்தை வாங்கி விற்பது மிக எளிதானதாகும்.
தங்கத்தை விற்பதற்கு பதிலாக அவற்றை அடமானம் வைப்பது மிக எளிதாகும். இவற்றை வங்கிகள், நிதி நிறுவனங்களில் அடகு வைத்து அவசர காலத்திற்கு நகைக் கடனாகவும் வாங்கமுடியும். மேலும் மற்ற கடன்களுக்கு விதிக்கப்படும் வட்டி விகிதத்தைக் காட்டிலும் நகைக் கடனுக்கான வட்டி விகிதம் குறைவாகும்.
அட்சய திரிதியை நாளில் தங்கம் விற்பனை அதிக அளவில் நடக்கும் என்பதால், தமிழகம் முழுவதும் இன்று காலை 6 மணிக்கே அனைத்து நகைக் கடைகளும் திறப்பதற்கு தங்க நகை வியாபாரிகள் முடிவு செய்துள்ளனர். மேலும் வழக்கமான நாட்களைக் காட்டிலும் இன்று விற்பனையை 4 மடங்கு அதிகரிக்க இலக்கு நிர்ணயித்துள்ளனர்.