மிடில் கிளாஸ் மக்களின் திடீர் பணப் பிரச்சனையைத் தீர்க்கும் ஒரு மாபெரும் சொத்து இந்தத் தங்கம். நம் அம்மா கழுத்தில் இருக்கும் தங்க நகைகள் நம்முடைய கல்லூரி கட்டணம், அப்பாவின் அவர மருத்துவச் செலவு, அக்காவின் திருமணம், தம்பியின் பைக், சொந்த வீடு எனப் பல வகையில் மாறியுள்ளது. பணக்காரர்கள் ஆடம்பரத்திற்கு வாங்கும் தங்க நகைகள் நடுத்தர மக்களுக்கு வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்குச் செல்ல உதவும் ஒரு அஸ்வாரமாகவே இருந்து வருகிறது.
இதன் காரணமாகத் தான் இந்தியாவில் எப்போது தங்கத்தின் தேவை இருந்துகொண்டே இருக்கிறது. ஆனால் இந்த ரிப்போர்ட் நடுத்தர மக்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் ஒரு விஷயமாக இருக்கிறது.
தங்கம் மீதான முதலீடு
இந்தியா பங்குச்சந்தை மட்டும் அல்லாமல் சர்வதேச பங்குச்சந்தைகளும் தொடர்ந்து சரிவு பாதையிலும், ஸ்திரமற்ற தன்மையும் கொண்டு உள்ளதாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருக்கும் முதலீட்டை எடுத்து நிலையான வருமானத்தைப் பெறும் நோக்கத்துடன் பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படும் அரசு பத்திரங்கள் மற்றும் தங்கம் மீது அதிகளவிலான தொகையை முதலீடு செய்து வருகின்றனர்.
இதனால் தங்கம் விலை தினமும் உயர்ந்து வருவதை நாம் பார்த்து வருகிறோம்.
பிரச்சனை
இந்நிலையில் பங்குச்சந்தையைப் பாதிக்கும் ரூபாய் மதிப்பு, அமெரிக்கா-சீனா வர்த்தகப் போர், இந்தியா பாகிஸ்தான் இடையில் வெடித்துள்ள புதிய பாதுக்காப்புப் பிரச்சனைகள் இப்போது தீரும் வகையில் இல்லாத காரணத்தினால் பங்குச்சந்தை மீதான முதலீடுகள் தொடர்ந்து குறைந்து தங்கம் மீது அதிகளவிலான முதலீடு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விலை உயர்வு
இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் இந்தியாவில் அதிகம் தங்கம் வாங்கப்படும் தீபாவளி பண்டிக்கை வருவதற்குள் தங்கம் விலை 40,000 ரூபாயை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது MCX சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கம் 37,995 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், அக்டோபர் மாத இறுதிக்குள்ள இதன் விலை 40,000 ரூபாயை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகப் பொருளாதாரம்
மேலும் உலகப் பொருளாதாரத்தின் வளர்ச்சியும் தற்போது சரிவு பாதையில் இருக்கும் காரணத்தால் பன்னாட்டு முதலீட்டு ஆய்வு நிறுவனங்களும், தங்கத்தின் மீது முதலீடு செய்யப் பரிந்துரை செய்து வருகிறது.
இதனால் தங்கம் மீது அடுத்த சில வாரங்களுக்கு முதலீட்டின் அளவு எதிர்பார்க்காத வகையில் அதிகரித்துக் காணப்படும்.