ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் தன் கடந்த ஒரு வருட உச்ச விலையை நோக்கி விலை உயர்ந்து கொண்டிருக்கிறது. அதோடு பங்குச் சந்தைகளிலும், ஃப்யூச்சர் சந்தைகளிலும் நல்ல விலை ஏற்றத்தைக் கண்டு வருகிறது தங்கம்.
தங்க ஃப்யூச்சர் விலை 38,200 ரூபாயில் வர்த்தகமாகி வருகிறது. எம் சி எக்ஸில் அக்டோபர் மாத தங்க ஃப்யூச்சர் கொஞ்சம் விலை குறைந்து 38,666 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருகிறது.
கடந்த வாரத்தில் தான் தங்க ஃப்யூச்சர்கள் தன் புதிய வாழ்நாள் உச்சமான 38,666 ரூபாய்க்கு வர்த்தகமானது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் தங்க ஸ்பாட் சந்தைகளில் 39,000 ரூபாயை நெருங்கி வர்த்தகமானது. தங்க விலை ஏற்றத்துக்கு என்ன காரணம்..?
முதல் காரணம்
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சுமாராக 72 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருகிறது. இந்தியாவில் நமக்கு தேவையான தங்கம் அனைத்தும் இறக்குமதி செய்யப்படுவதால் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்புச் சரிவு ஆபரணத் தங்கத்தின் விலையில் பலமாக எதிரொலிக்கிறது. இந்தியாவில் மட்டும் 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை இந்த 2019-ல் மட்டும் சுமாராக 24 சதவிகிதம் விலை அதிகரித்து இருக்கிறது.
தங்கம் பர்சேஸ்
உலக பொருளாதாரத்தில் ரெசசன் பிரச்னை தலை எடுத்துக் கொண்டிருக்கும் இந்த சிக்கலான நேரத்தில் தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரித்து கொண்டே இருக்கின்றன. தங்க இ டி எஃப்-கள் வாங்கிக் குவிக்கும் தங்கத்தின் அளவு பெரிய அளவில் அதிகரித்திருக்கிறதாம். ப்ளூம்பெர்க் அறிக்கைப் படி தங்க இ டி எஃப் நிறுவனங்கள் மட்டும் சுமார் 2,424 டன் தங்கத்தை வாங்கி வைத்திருக்கிறார்களாம். 2016-ம் ஆண்டு தங்க இ டி எஃப் நிறுவனங்கள் வைத்திருந்தது வெறும் 1,424 டன் தானாம். ஆக இந்த மூன்று ஆண்டு காலத்தில் 1000 டன் தங்கத்தை, கோல்ட் இ டி எஃப் நிறுவனங்கள் கூடுதலாக வாங்கிக் குவித்து இருக்கிறார்கள்.
ஃபெட் ரேட்
அமெரிக்காவின் மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் வங்கி, தன் வட்டி விகிதத்தைக் குறைத்தால் தங்கத்தின் மீது இன்னும் அதிகமாக முதலீடு செய்வார்கள். இதனால் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகச் சொல்லி நம்மை எச்சரித்து இருக்கிறார்கள் அனலிஸ்டுகள். அதோடு அமெரிக்க சீன வர்த்தகப் போருக்கும் ஒரு நல்ல முடிவு வரும் வரை தங்கம் சிறப்பாக வர்த்தகம் ஆகும் என்றும் நம்மை எச்சரிக்கிறார்கள் அனலிஸ்டுகள்.
கடன் பத்திரம்
அமெரிக்காவின் கருவூலம் வெளியிடும் 10 ஆண்டு கடன் பத்திரங்களுக்கான வட்டி விகிதம் கடந்த 2008 கால கட்டங்களில் ரெசசன் வருவதற்கு முன், இருந்தது போல குறைந்து கொண்டே வருகிறது. எனவே ரெசசன் பயம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. இதுவும் தங்கத்தில் முதலீடுகள் அதிகரித்து விலை ஏற்றத்துக்கும் காரணமாக இருக்கிறது என்கிறார்கள் அனலிஸ்டுகள். சொல்லப் போனால் சர்வதேச அளவில் ஒர் அவுன்ஸ் தங்கத்தின் விலை தன் வரலாற்று உச்சமான 1,917 லெவல்களைக் கூட மீண்டும் தொட வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறார்கள் அனலிஸ்டுகள்.
விலை ஏற்றம்
24 கேரட் சொக்கத் தங்கம் 10 கிராமின் விலை கடந்த ஜனவரி 01, 2019 அன்று 31,650 ரூபாயாக இருந்தது. இன்று அதே 24 கேரட் 10 கிராம் தங்கத்தின் விலை 39,300 ரூபாய்க்கு மேல் விற்கப்பட்டு வருகின்றன. ஆக சொக்கத் தங்கத்தின் விலை சுமார் 24 சதவிகிதம் இந்த ஜனவரி 2019 தொடங்கி இன்று வரை விலை ஏற்றம் கண்டிருக்கின்றன. வெறும் ஏழு மாத காலத்தில் 24 சதவிகித விலை ஏற்றம் என்பதை இன்னும் நம்மால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை.
முதல்
கடந்த ஜனவரி 01, 2019-ல் 31,650 ரூபாய்க்கு விற்கத் தொடங்கிய 24 கேரட் 10 கிராம் தங்கத்தின் விலை பிப்ரவரி 20, 2019 அன்று 35,130 என்கிற புதிய உச்சத்தைத் தொட்டது. பிப்ரவரி முதல் ஜூன் 20, 2019 வரை 24 கேரட் 10 கிராம் தங்கத்தின் விலை இந்த 35,130 என்கிற உச்சத்தைக் கடக்கவில்லை. ஆக தங்கத்தின் விலை ஏற்றத்தில் இது தான் இந்த 2019-ம் வருடத்தின் முதல் பெரிய ஏற்றம்.
இரண்டாம் கட்டம்
ஜூன் 21, 2019 அன்று தான் மீண்டும் தங்கத்தின் விலை ஏற்றம் காணத் தொடங்குகிறது. ஜூன் 21, 2019 அன்று 24 கேரட் 10 கிராம் தங்கத்தின் விலை 35,380 என்கிற உச்சம் தொடுகிறது. அதன் பின் தங்கத்தின் விலை (Gold Price) இன்று வரை நிதானமாக ஏற்றம் கண்டு இன்று ஆகஸ்ட் 23, 2019 வரை 39,300 என உச்ச விலைக்கு நெருக்கமாக விற்கப்பட்டு வருகின்றன.
பெரியவர் வாக்கு
அனலிஸ்டுகள், நிறுவனங்கள் கணிப்புகளை எல்லாம் விடுங்கள்... உலகின் முன்னணி முதலீட்டாளர் மார்க் மொபியஸ் (Mark Mobius) என்பவரே, "நீண்ட நாட்கள் அடிப்படையில் தங்கம் விலை ஏறுவதற்கான சாத்தியக் கூறுகள் மீண்டும் மீண்டும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது" என பொது வெளியில் போட்டு உடைத்து இருக்கிறார். அதற்கு காரணமாக உலக நாடுகளில் மத்திய வங்கிகள் வட்டி விகிதங்களைத் தொடர்ந்து குறைத்துக் கொண்டே வருவதைக் காரணமாகக் காட்டி இருக்கிறார்.
மற்றவர்கள்
மார்க் மொபியஸைத் தொடர்ந்து, ரே டாலியோ (Ray Dalio)என்கிற பெரிய முதலீட்டாளரும் தங்கத்தை வாங்கிப் போட்டு நல்ல வருமானம் பார்க்கச் சொல்லி இருக்கிறார். இப்படி தனி நபர்கள் ஆரூடம் சொல்வது மட்டும் இல்லாமல், பெரிய பெரிய நிதி நிறுவனங்களும் தங்கத்துக்கு சிவப்புக் கம்பளம் விரித்து வைத்திருக்கிறார்கள். கோல்ட் மேன் சாக்ஸ், யூபிஎஸ் குழுமம் என பலரும் தங்கத்தின் விலை வருங்காலத்தில் ஏறும் என ஆரூடம் சொல்லி இருக்கிறார்கள்.