தங்கத்தை வாங்கி சேமிக்க வேண்டும் என்று ஒவ்வொரு நிதி ஆலோசகரும் பொதுமக்களுக்கு அறிவுரை கூறினாலும் அரசு தங்கத்தை வாங்குவதை ஊக்குவிப்பது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தங்க பத்திரம் வேண்டுமானால் வாங்கி கொள்ள அரசு ஊக்குவிக்குமே தவிர தங்கத்தை நேரடியாக கடையில் சென்று வாங்குவதை அரசு எப்போதுமே ஊக்குவிப்பதில்லை.
அதற்கு காரணம் தங்கம் அதிகமாக மக்கள் கையில் செல்ல செல்ல இந்திய பொருளாதாரம் சரிவு அடையும் என்று பொருளாதார வல்லுனர்கள் கூறுகின்றனர்.
39 டன் தங்கம்
கடந்த தீபாவளி தினத்தில் இந்தியாவில் தங்கம் 39 டன் விற்பனையாகி உள்ளதாகவும் அதன் மதிப்பு ரூபாய் 19,500 கோடி என்றும் கூறப்படுகிறது. இரண்டே நாட்களில் 39 டன்கள் தங்கம் விற்பனை என்பது இந்திய பொருளாதாரத்திற்கு சாதனையா? சோதனையா? என்பது குறித்து பொருளாதார வல்லுநர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை பார்ப்போம்.
தங்கமும் இந்திய ரூபாயும்
இந்திய ரூபாயின் மதிப்பை நம்பாமல் தான் மக்கள் தங்கத்தில் முதலீடு செய்கிறார்கள் என்றும் இந்திய ரூபாய் மதிப்பு வலுவாக இருந்தால் மக்கள் யாரும் தங்கத்தில் முதலீடு செய்ய மாட்டார்கள் என்றும் தங்கம் அதிகமாக விற்பனையாவதால் இந்திய ரூபாய் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர் என்பதையே காட்டுகிறது என்று ஒரு சில பொருளாதார அறிஞர்கள் கூறி வருகின்றனர்.
வெளிநாட்டுக்கு செல்லும் பணம்
இந்தியாவில் தங்கம் உற்பத்தி செய்யப்படுவது இல்லை. கோலார் தங்க வயலில் முழுக்க முழுக்க தங்கம் எடுக்கப்பட்டு அது விற்பனை செய்யப்பட்டால் இந்தியாவின் பொருளாதாரம் உயரும் என்பதை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் தங்கம் என்பது முழுக்க முழுக்க வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதால் டாலர்களில் இந்தியாவில் இருந்து பணம் வெளியேறிக் கொண்டிருக்கிறது. எனவே இந்திய பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய சரிவைத்தான் தங்கம் விற்பனை காட்டுகிறது சில வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இரண்டுக்கும் சம்பந்தம் இல்லை
ஆனால் ஒரு சிலர் தங்கத்தின் விற்பனைக்கும் பொருளாதாரத்துக்கும் சம்பந்தமில்லை என்றும் இந்திய ரூபாயின் மீது நம்பிக்கை இல்லாமல்தான் மக்கள் தங்கம் வாங்குகிறார்கள் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் ஏனெனில் இந்திய ரூபாயின் மதிப்பு வலுவாக இருந்தபோது கூட தங்கத்தின் விற்பனை அதிகமாகத்தான் இருந்தது என்றும் தெரிவித்து வருகின்றனர்.
தங்கத்தில் முதலீடு
தங்கத்தின் மீது முதலீடு செய்ய வேண்டும் என்பது கடந்த பல ஆண்டுகளாக இந்தியர்களுக்கு ஆசை உண்டு என்றும் அது ஆண்டுக்காண்டு பெருகி வருகிறதே தவிர இந்திய ரூபாய் மதிப்பு மீது நம்பிக்கை இழந்து தங்கத்தில் முதலீடு செய்வதாக கருதுவது சரியானது அல்ல என்றும் தெரிவித்து வருகின்றனர்.
பாதுகாப்பு
தங்கத்தின் மீது அதிகமாக முதலீடு செய்வது பொதுமக்களுக்கு பாதுகாப்பு என்றும் இந்திய ரூபாயின் மதிப்பு எவ்வளவு சரிந்தாலும் கையில் குறைந்தது 400 கிராம் தங்கம் வைத்திருப்பவர்கள் எந்த வித கவலையும்பட வேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவித்து வருகின்றனர்.
இலங்கை உதாரணம்
உதாரணமாக அண்டை நாடான இலங்கை திடீரென திவாலான போது மற்ற அனைத்து வகைகளில் முதலீடு செய்தவர்கள் மிகப்பெரிய நஷ்டத்தை அடைந்தார்கள். ஆனால் தங்கத்தில் முதலீடு செய்தவர்கள் மட்டும் தப்பித்துக் கொண்டார்கள். அவர்கள் அகதிகளாக அண்டை நாட்டுக்கு சென்றால் கூட அவர்கள் சேமித்து வைத்திருந்த தங்கம் அவர்களை பணக்காரர்கள் ஆக்கி உள்ளது என்றும் நிதி ஆலோசர்கள் தெரிவித்து வருகின்றனர்.
புத்திசாலித்தனம்
எனவே தங்கத்தின் மீது முதலீடு செய்வது என்பது நம்முடைய பாதுகாப்பு மட்டுமின்றி தங்கத்தில் முதலீடு செய்வதே புத்திசாலித்தனம் என்பது இதன் மூலம் தெரிய வருகிறது.