கிரிப்டோகரன்சி சமீபத்திய காலமாக குக்கிராமம் முதல் கொண்டு மெட்ரோ நகரங்கள் வரையில் அதிக அளவில் பேசப்படும் ஒரு பேசுப்பொருளாக இருந்து வருகின்றது.
பெரும்பாலான மக்கள் மத்தியில் இன்று வரையில் இதில் முதலீடு செய்யலாமா வேண்டாமா? இது பாதுகாப்பானதா? எதிர்காலத்தின் இதன் நிலை என்ன? ஏற்கனவே முதலீடு செய்திருந்தால் அதனை என்ன செய்யலாம்? இனி முதலீடு செய்யலாமா? வேண்டாமா? இப்படி குழப்பமான மன நிலையே இருந்து வருகின்றது.
இதற்கிடையில் தான் இது குறித்து பிரகலா வெல்த் மேனேஜ்மெண்ட் நிறுவனத்தின் இயக்குனர் சொக்கலிங்கம் பழனியப்பனிடம் பேசினோம்.
ஒதுங்கியிருப்பது நல்லது
இந்தியாவில் கிரிப்டோகரன்சி குறித்தான முறைகேடுகள், புகார்கள் அதிகரிக்க ஆரம்பித்துள்ள நிலையில், அதனை ஒழுங்குபடுத்தும் வரையில் நடுத்தர மக்கள், அடித்தட்டு மக்கள் அதனை விட்டு சற்று ஓதுக்கியிருப்பது நல்லது என்கிறார் பழனியப்பன்.
சாத்தியமில்லாத முதலீடு
இந்தியாவினை பொறுத்தவரையில் அங்கீகரிக்கப்பட்ட முதலீடுகளான பங்கு சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், கமாடிட்டி என பல முதலீட்டு அம்சங்கள் உள்ளன. ஆனால் அவற்றிலேயே மக்கள் முதலீடு செய்ய பயப்படுவர். அப்படி இருக்கும் பட்சத்தில் கிரிப்டோகரன்சிகள் தற்போது முதலீடு செய்ய சாத்தியமில்லாத முதலீட்டு அம்சமாகத் தான் உள்ளது. ஏனெனில் பங்கு சந்தை மியூச்சுவல் ஃபண்டுகளுக்கு என கட்டுப்பாட்டு வாரியம் உள்ளது. ஒரு வேளை ஏதேனும் பிரச்சனை, மோசடி என்றாலும் கூட நாம் கட்டுபாட்டு வாரியத்திடம் முறையிடலாம். புகார் அளிக்கலாம். சட்டபடி நடவடிக்கை எடுக்கலாம்.
திருட்டுப் பயம்
ஆனால் கிரிப்டோவுக்கு என இது போன்ற அங்கீகரிக்கப்பட்ட எக்ஸ்சேன்ஞ்கள் இல்லை. தனி நபர் யாரு வேண்டுமானாலும் ஒரு கிரிப்டோகரன்சியை அறிமுகம் செய்யலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது. இதில் பிளாக்செயின் தொழில் நுட்பம் பயன்படுத்தப்படுகின்றது. ஆனால் சமீபத்தில் நடந்த ஒரு சம்பவத்தில், இடைத்தரகராக செயல்பட்ட ஒரு நபரே, மற்றொருவரின் கணக்கில் இருந்து கிரிப்டோகரன்சியை திருடும் சம்பவம் அரங்கேறியது நினைவுகூறத்தக்கது. ஆக இங்கு பாதுகாப்பு என்பது சொல்லும் அளவுக்கு இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
தவறான விஷயம்
மேலும் நடுத்தர மக்கள் மத்தியில் உங்கள் பணம் விரைவில் மும்மடங்காக அதிகரிக்கும், இருமடங்காக அதிகரிக்கும் என்ற ஆசை வார்த்தைகளை கூறி இடைத்தரர்களை முதலீடு செய்ய வைக்கின்றனர். குறிப்பாக 15,000 - 20,000 ரூபாய் சம்பளம் வாங்கும் சம்பளதாரர்கள் கூட, லட்சக்கணக்கில் கடன் வாங்கி முதலீடு செய்கின்றனர், அது தவறான விஷயம்.
கிரிப்டோ மசோதா குறித்து?
மேலும் அப்படியே திருடப்பட்டாலும், நீங்கள் யார் திருடினார்கள் என எப்படி புகார் செய்வது? ஆக கிரிப்டோகரன்சி குறித்தான தெளிவான புரிதல்கள், கட்டுப்பாட்டு வாரியம் இல்லாதவரை அது ரிஸ்கான முதலீடு தான்.
குறிப்பாக இந்தியாவினை பொறுத்தவரையில் கிரிப்டோகரன்சி மசோதாவில் இரண்டு விஷயங்கள் எதிர்பார்க்கப்படுகிறது. ஒன்று கிரிப்டோகரன்சிகள் தடை செய்யலாம். இரண்டாவது கிரிப்டோகரன்சிகளை ஒழுங்குமுறைப்படுத்த வரைமுறைகள் கொண்டு வரப்படலாம். இதன் மூலம் ஜிஎஸ்டி, வருமான வரிக்குள் கொண்டு வரலாம்.
முதலீடு செய்யலாமா? வேண்டாமா?
நடுத்தர மக்கள், கீழ்த்தட்டு மக்களை பொறுத்தவரையில் இப்போதைக்கு கிரிப்டோகரன்சி முதலீடு வேண்டாம். இதே பெரிய பணக்காரர்கள் எனில் அவர்களின் மொத்த சொத்தில் அரை சதவீதம், 1% என முதலீடு செய்து பார்க்கலாம். ஏனெனில் மொத்தத்தில் 1% என்பது பெரியளவில் தாக்கத்தினை ஏற்படுத்தாது. இன்னும் சிலர் யாரோ சொன்னார்கள் என கடன் வாங்கி முதலீடு செய்வார்கள். அது மிகப்பெரிய தவறு.
எப்போது செய்யலாம்?
தற்போது இந்திய அரசு சொந்தமாக ஒரு டிஜிட்டல் கரன்சியை கொண்டு வரலாம் என திட்டமிட்டு வருகின்றது. அப்படி இல்லாவிட்டாலும் ஒழுங்குபடுத்தும்போது உங்கள் முதலீடுகள் பாதுகாப்பாக இருக்கும். ஆக அரசின் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டு சீர்திருத்தம் செய்தால் அதனை பற்றி யோசிக்கலாம். உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடான சீனாவிலேயே கிரிப்டோக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது கவனிக்கதக்கது.
அமெரிக்காவில் அங்கீகாரம் ஏன்?
அமெரிக்கா போன்ற நாடுகளில் அங்கீகரிக்கப்படுகிறதே எனலாம். அதில் டெஸ்லா போன்ற மிகப்பெரிய கார்ப்பரேட்டுகள் கூட முதலீடு செய்துள்ளனவே என கேள்வி எழலாம். ஆனால் ஆரம்ப காலத்தில் டெக்னாலஜிக்கள் வளர்ச்சி காணாத காலத்திலேயே டாடா குழுமம் டிசிஎஸ் என்ற நிறுவனத்தினை நிறுவியது. இன்று டிசிஎஸ் நிறுவனம் டாடா குழுமத்தின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றாக மாறியுள்ளது. அதனை தாங்கி பிடிக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளது.
அதனைபோலத் தான் கிரிப்டோக்கள் தவிர்க்கப்பட வேண்டிய முதலீடுகள் என்று சொல்லவில்லை. மேலும் டெஸ்லா போன்ற நிறுவனங்கள் தங்களிடம் உள்ள மொத்த சொத்தில் கால், அரை சதவீதம் கூட முதலீடு செய்யவில்லை. ஆக அந்த முதலீடுகள் பிரச்சனை என்றாலும் அதனை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியும். ஆனால் இந்தியாவின் நிலை அப்படியல்ல.
கட்டுப்பாடுகள் தேவை
ஆக இன்னும் சீரமைக்க வேண்டியது நிறையவே உள்ளது. அப்படி செதுக்கி மெருகேற்றி, பல சீர்திருத்தங்கள் செய்து, பொதுவான ஒரு கட்டுப்பாட்டு மையம், செபி போல உருவாக வேண்டும். அப்போது தான் பிரச்சனைகள் களையப்படும். தற்போது கிரிப்டோகரன்சிகள் தவறான செயல்களுக்காக பயன்படுத்தப்படுவதாக அச்சம் எழுந்துள்ளது. ஆக அதனை கட்டுப்படுத்தும் போது அப்படியான பிரச்சனைகள் குறையும்.
ஆழம் தெரியாமல் காலை விடாதீர்கள்
ஆக இன்று வரையில் சந்தேகத்திற்கு உரிய முதலீடாகவே கிரிப்டோகரன்சிகள் இருந்து வருகின்றன. ஆக ஆழம் தெரியாமல் காலை விடுவதை விட, முதலீடு செய்யாமல் இருப்பது மேல், அதிலும் கிரிப்டோகரன்சிகளில் ஏற்ற இறக்கம் மிக அதிகம். அதனை சில்லறை முதலீட்டாளர்கள், சிறு முதலீட்டாளர்களால் தாங்க முடியாது. ஆக முழுமையான புரிதல் வரும் வரை சற்று பொறுத்திருந்து வணிகம் செய்வது நல்லது.
தங்கத்திற்கு இணையாகுமா?
அப்படியே செய்து தான் ஆக வேண்டும் என நினைப்பவர்கள், உங்களது உபரியில் 1% அல்லது 2% செய்து பார்க்கலாம்.
அதேபோல எதிர்காலத்தில் தங்கத்திற்கு இணையான ஒரு முதலீடாக கிரிப்டோ மாறலாம் என கூறப்படுகிறதே, இது குறித்து கேட்டபோது நிச்சயம் தங்கம் போல கிரிப்டோ வர முடியாது. ஏனெனில் தங்கம் முதலீட்டிற்கு அப்பாற்பட்டு, ஒரு மக்கள் விரும்பிய ஆபரணமாக இருந்து வருகின்றது. மேலும் இது பூமிக்கடியில் இருந்து தோண்டி எடுக்கப்படும் ஒரு பிசிகல் உலோகம். ஆனால் கிரிப்டோக்கள் அப்படியில்லை. ஆக ஒரு போதும் தங்கத்திற்கு இணையாக கிரிப்டோவால் வர முடியாது. ஒரு வேளை அரசு டிஜிட்டல் கரன்சியை அறிமுகப்படுத்தினால் அப்போது இது பற்றி யோசிக்கலாம் என கூறுகின்றார்.