எப்போதும் இல்லாத வகையில் இந்த வருடம் தங்கம் மீதான முதலீடு உலகமும் முழுவதும் அதிகரித்துத் தவிர்க்க முடியாத முதலீடாக மாறியுள்ளது. எப்போதும் ரீடைல் முதலீட்டாளர்கள் தங்களது முதலீட்டின் மூலம் அதிகளவிலான லாபம் பெற வேண்டும் என்பதற்காகப் பங்குச்சந்தையிலும், நாணய சந்தையிலும் அதிகளவிலான முதலீடுகளைச் செய்வது வழக்கம்.
ஆனால் இந்தக் கொரோனா பாதிப்பு உலகம் முழுவதும் அதிகரித்துள்ள காரணத்தால் சர்வதேச பங்குச்சந்தைகள் மொத்தமும் வீழ்ச்சி அடைந்து தவித்து வருகிறது. குறிப்பாக வல்லரசு நாடுகள், பொருளாதாரத்தில் வலிமையாக இருக்கும் பல நாடுகளின் பங்குச்சந்தையும் பெரிய அளவிலான சரிவை எதிர்கொண்டது.
இக்காலகட்டத்தில் தனிநபர்கள் மட்டும் அல்லாமல் முதலீடு நிறுவனங்கள் வரையில் தங்களது முதலீட்டை பாதுகாக்க அதிகளவிலான முதலீட்டுப் பகுதியைத் தங்கம் மீது முதலீடு செய்யத் துவங்கினர்.
இதன் விளைவு வரலாறு காணாத உச்சத்தில் தங்கம் விலை. 2020ஆம் ஆண்டில் வெறும் 6 மாத காலத்தில் தங்கம் மீதான முதலீடு சுமார் 40 சதவீத லாபத்தைக் கொடுத்துள்ளது.
அமெரிக்கா - சீனா
அமெரிக்கா சீனா உடனான வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைப்பதற்காகப் பல ஏற்றுமதி, இறக்குமதி கட்டுப்பாடுகள் மற்றும் அதிகளவிலான வரியை விதித்து வந்தது. இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்காவை எதிர்த்து சீனாவும் அதிகளவிலான வரி மற்றும் வர்த்தகக் கட்டுப்பாடுகளை விதித்து உலகின் இரு பெரிய பொருளாதார நாடுகள் மத்தியில் வர்த்தகப் போருக்கு வித்திட்டது.
தங்கம் விலை உயர்வு
உலகின் டாப் 2 பொருளாதார நாடாக விளங்கும் அமெரிக்கா - சீனா இடையில் வெடிக்க வர்த்தகப் போரின் காரணமாகச் சர்வதேச முதலீட்டாளர்கள் பங்குச்சந்தை மற்றும் நாணய சந்தையில் இருக்கும் முதலீட்டைத் தங்கச் சந்தை பக்கம் டிசம்பர் மாதம் இறுதியில் திருப்பத் துவங்கியது.
அப்போதிலிருந்து தங்கம் விலை அதிகளவிலான வளர்ச்சியைப் பதிவு செய்து வருகிறது.
கொரோனா தொற்று
இதன்பின்பு கொரோனா பாதிப்பு சீனா, இத்தாலி, அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளில் அதிகரிக்கத் துவங்கிய நிலையில் பங்குச்சந்தைகள் வீழ்ச்சி அடையத் துவங்கியது. அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் மொத்த முதலீட்டுச் சந்தையும் தங்கம் மற்றும் கச்சா எண்ணெய் சந்தை பக்கம் திரும்பியது.
லாக்டவுன் அறிவிப்புகள்
பிப்ரவரி, மார்ச் மாதத்தில் பல உலக நாடுகள் 100% லாக்டவுன் அறிவிக்கப்பட்டு மொத்த முதலீட்டு சந்தையை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனால் 90 சதவீத முதலீடுகள் தங்கம் மற்றும் கச்சா எண்ணெய் சந்தை பக்கம் திரும்பியது.
ஆனால் கச்சா எண்ணெய் விலை அதிகளவிலான முதலீட்டுக்குச் செவி சாய்க்கவில்லை.
கச்சா எண்ணெய் பயன்பாடு
பெட்ரோல், டீசலை அதிகளவில் பயன்படுத்தும் பல முன்னணி நாடுகள் லாக்டவுன் அறிவிக்கப்படவே கச்சா எண்ணெய் தேவை படிப்படியாகக் குறையத் துவங்கியது. இதன் மூலம் ஜனவரி மாதம் முதல் கச்சா எண்ணெய் சந்தையில் அதிகளவிலான முதலீடு குவிந்தாலும், பல மடங்கு முதலீடுகள் வெளியேறத் துவங்கியது.
இதனால் ஜனவரி மாதத்தில் இருந்து கச்சா எண்ணெய் விலை சரியத் துவங்கி ஏப்ரல் மாதத்தில் தடாலடி வளர்ச்சியைப் பதிவு செய்து தங்க முதலீடு இன்றியமைக்காத ஒன்றாக மாறியது.
லாக்டவுன் தளர்வு
மே மாதத்தில் கொரோனா பாதிப்புகள் தளர்ந்து லாக்டவுன் கட்டுப்பாடுகள் பொருளாதாரம் மற்றும் வர்த்தகச் சந்தைகள் வளர்ச்சி அடையத் துவங்கிய போது அமெரிக்கத் தேர்தல் எதிரொலிகள் பங்குச்சந்தை முதலீட்டை எச்சரிக்கையிலேயே வைத்திருந்தது.
இதனால் தங்கம் மீதான முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்தது வருகிறது.
மத்திய வங்கிகள்
கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்புகளைக் குறைக்க வேண்டும் என்பதற்காக உலக நாடுகளின் மத்திய வங்கிகள் வட்டியைக் குறைக்கத் துவங்கியது. இன்னும் சில நாடுகள் நாட்டில் பணப்புழக்கத்தை அதிகரிக்க வேண்டும் என முடிவு செய்து அதிகளவிலான நிதியை உட்செலுத்தியது.
இதனால் முதலீட்டாளர்கள் தங்கம் மீதான முதலீட்டைக் குறைக்காமல் தொடர்ந்து தங்களது கைகளில் பிடித்து வந்தனர்.
இந்தியாவின் நிலை
தங்கத்தை அதிகளவில் பயன்படுத்தும் இந்தியாவில் 2020ஆம் ஆண்டின் முதல் 3 காலாண்டில் தங்கத்தின் தேவை சுமார் 49 சதவீதம் வரையில் வீழ்ச்சி அடைந்தது. ஆனால் இதே காலகட்டத்தில் தங்கக் காசுகள் மற்றும் தங்க பார்களின் தேவை 51 சதவீதம் அதிகரித்துள்ளது.
இது இந்திய சந்தையின் நிலவரம் மட்டுமே.
உலகச் சந்தைகள்
WGC வெளியிட்டுள்ள அறிக்கையின் படி 2020ஆம் ஆண்டில் சுமார் 1,003 டன் தங்கம் சர்வதேச சந்தைக்குள்ள புதிதாக வந்துள்ளது. இதேபோல் கோல்டு ETF அளவீடு வரலாறு காணாத உச்ச அளவான 3,880 டன்-ஐ தாண்டியுள்ளது.
இந்திய மக்கள்
இந்தியப் பொருளாதாரத்தில் கொரோனாவால் ஏற்பட்ட வர்த்தகப் பாதிப்புகளின் காரணமாக இந்தியக் குடும்பங்களில் அதிகளவிலான நிதி நெருக்கடி ஏற்பட்டது அனைவருக்கும் தெரியும். இதன் எதிரொலியால் தங்கம் விலை அதிகமாக இருந்த காரணத்தினால் இந்திய மக்கள் வேறு வழி இல்லாமல் நிதி தேவைக்காகப் பழைய தங்கத்தை அதிகளவில் விற்பனை செய்துள்ளனர்.
பழைய தங்கம்
ஜூலை - செப்டம்பர் காலாண்டில் இந்தியாவில் சுமார் 41.5 டன் பழைய தங்கத்தை மக்கள் பயன்படுத்தியுள்ளனர். கடந்த வருடத்தின் இதே காலகட்டத்தில் இதன் அளவு 36.5 டன்னாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் இந்தியாவில் பழைய தங்கத்தைப் பயன்படுத்திய அளவு சுமார் 13.6 சதவீதம் அதிகரித்துள்ளது.
மோசமான நிலை
பொதுவாகச் சாமானியர்கள் தங்கம் விலை அதிகமாக இருக்கும்போது பழைய தங்க நகைகளை விற்று லாபம் பார்க்கும் எண்ணம் இருக்காது. காரணம் பழைய தங்க நகைகளை விற்பனை செய்யும் போது செய்கூலி மற்றும் நகைகளில் இருக்கும் அழுக்கு ஆகியவற்றின் காரணமாக அதிகளவிலான தொகையை இழக்க நேரிடும்.
எனவே செப்டம்பர் காலாண்டில் விற்கப்பட்ட பழைய நகைகள் லாபத்திற்காக அல்ல வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக என்பதை உணர்த்துகிறது.
மக்கள் கருத்து
2020ஆம் ஆண்டு நீங்கள் தங்க நகை வாங்கியிருந்தாலோ, விற்றாலோ அல்லது தங்கத்தில் முதலீடு செய்து அதிகளவிலான லாபத்தைப் பார்த்து இருந்தாலோ, உங்களது அனுபவத்தைக் கமெண்ட் பகுதியில் கருத்துக்களாகப் பதிவிடுங்கள்.