பொதுவாகவே உலக பொருளாதார சூழல் நன்றாக இல்லாத போது தங்கத்தின் விலை இயல்பாகவே அதிகரிக்கும். இது ஒரு பொது பொருளாதார விதி.
இப்போது கடந்த சில மாதங்களாக தொடர்ந்து ஆபரணத் தங்கத்தின் விலை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
ஆக உலக பொருளாதாரத்தில் என்னமோ பெரிய பிரச்சனை இருப்பதைத் தான் இந்த தங்க விலை ஏற்றம் காட்டுகிறது. கடந்த 2019-ம் ஆண்டில் இருந்து தங்கத்தின் விலை எப்படி அதிகரித்து இருக்கிறது என விரிவாகப் பார்ப்போம்.
விலை ஏற்றம்
கடந்த ஜனவரி 01, 2019-ல் 31,650 ரூபாய்க்கு விற்கத் தொடங்கிய 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை, பிப்ரவரி 20, 2019 அன்று 35,130 என்கிற புதிய உச்சத்தைத் தொட்டது. பிப்ரவரி முதல் ஜூன் 20, 2019 வரை 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை இந்த 35,130 என்கிற உச்சத்தைக் கடக்கவே இல்லை. ஆக தங்கத்தின் விலை ஏற்றத்தில் இது தான் 2019-ம் வருடத்தின் முதல் பெரிய ஏற்றம்.
இரண்டாவது ஏற்றம்
பின், ஜூன் 21, 2019 அன்று தான் மீண்டும் தங்கத்தின் விலை ஏற்றம் காணத் தொடங்குகிறது. ஜூன் 21, 2019 அன்று 24 கேரட் 10 கிராம் தங்கத்தின் விலை 35,380 என்கிற உச்சம் தொட்டது. அதன் பின் தங்கத்தின் விலை (Gold Price) நிதானமாக ஏற்றம் கண்டு வந்து, செப்டம்பர் 04, 2019 வரை 41,070 என்கிற உச்ச விலையில் விற்கப்பட்டது.
மூன்றாவது விலை ஏற்றம்
கடந்த செப்டம்பர் 04, 2019-க்குப் பின், ஜனவரி 02, 2020 வரை 24 கேரட் 10 கிராம் தங்கத்தின் விலை பெரிய மாற்றங்களைக் காணவில்லை. 41,070 ரூபாய்க்குள் தான் விற்பனை ஆனது. ஆனால் கடந்த ஜனவரி 08, 2020 அன்று 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 42,860 ரூபாய்க்கு விற்பனை ஆனது.
நான்காவது ஏற்றம்
இன்று மார்ச் 05, 2020, வியாழக் கிழமை, 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 45,320-க்கும், 22 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கம் விலை 41,540 ரூபாய்க்கும் விற்பனை ஆகி வருகிறது. இது கடந்த காலங்களில் இல்லாத அளவுக்கு தங்கத்தின் மிகப் பெரிய விலை ஏற்றம் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்றைய காரணிகள்
கடந்த 2019-ம் ஆண்டு முழுக்க, அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய இரண்டு பெரிய நாடுகளுக்கு இடையிலான வர்த்தகப் போராலும், அமெரிக்கா ஈரான் மீது நடத்திய தாக்குதல் மற்றும் ஈரான் அமெரிக்கா மீது நடத்திய பதில் தாக்குதல் போன்ற காரணங்களால் தங்கம் விலை அதிகரித்தது.
கொரோனா
இன்று கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. உலகில் சுமாராக 70 நாடுகளில் கொரோனா பரவி இருப்பதாகச் செய்திகள் வருகின்றன. சுமார் 95,000 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். சுமார் 3,250 பேர் இறந்து இருக்கிறார்கள்.
விலை ஏற்றக் காரணிகள்
இந்த கொரோனாவால், உலக வர்த்தகம் கொஞ்சம் தேக்கம் காணத் தொடங்கி இருக்கிறது. அவ்வளவு ஏன் ஒலிம்பிக்ஸ் போட்டிகளைக் கூட குறித்த நேரத்தில் நடத்த முடியுமா என யோசித்துக் கொண்டு இருக்கிறார்கள். அந்த அளவுக்கு கொரோனா, வர்த்தகங்கள் மற்றும் வியாபாரங்களை உலக அளவில் பாதித்து இருக்கிறது. எனவே இந்த கொரோனா வைரஸ் பிரச்சனை தீரும் வரை மேற்கொண்டு தங்கம் விலையும் அதிகரிக்கலாம்.