மும்பை: தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை, 2021ம் ஆண்டு ஜனவரி, 15 முதல் கட்டாயமாக்கப்படும் என மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் கூறியுள்ளார்.
உலக அளவில் தங்கம் உபயோகத்தில் இரண்டாவது நாடாக இருக்கும் இந்தியாவில், ஒரு புறம் இறக்குமதியை குறைக்க பல விதமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், மறுபுறம் தங்கத்தின் தரத்தையும் நிர்ணயிக்க ஹால்மார்க் தரத்தை கட்டாயமாக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
தங்க நகைகளுக்கு ஹால்மார்க் தரச் சான்றை கட்டாயமாக்குவதை தள்ளி வைத்து, போதுமான அவகாசம் வழங்க வேண்டும் என நகை வியாபாரிகள், மத்திய அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். இந்த நிலையில், ஹால்மார்க் முத்திரை, 2021 ஜனவரி முதல் கட்டாயமாக்கப்படும் என அறிவித்துள்ளது மத்திய அரசு.
ஹால் மார்க் முத்திரையுடன் நகை
நகை வியாபாரிகளும், ஆபரணத் துறையைச் சேர்ந்தவர்களும் இத்திட்டத்தினை வரவேற்றுள்ளனர். தற்போது, 14 காரட், 18 காரட் மற்றும் 22 காரட் தங்க நகைகளுக்கு, ஹால்மார்க் முத்திரை வழங்கப்படுகிறது. நகை வியாபாரிகள், இந்த தரச் சான்றுடனும், சான்று இல்லாமலும், வாடிக்கையாளர் விருப்பத்திற்கேற்ப, நகைகளை விற்பனை செய்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது 40 சதவிகிதம் அளவிலான தங்க நகைகளே, ஹால்மார்க் முத்திரையுடன் நாட்டில் விற்பனையாகி வருகின்றன.
ஹால்மார்க் கட்டாயம்
இந்த மூன்று வகை நகைகளை கட்டாயம், ஹால்மார்க் முத்திரையுடன் தான் விற்க வேண்டும் என்ற விதிமுறையை, மத்திய அரசு, 2021 ஜனவரி முதல் அமல்படுத்த உள்ளது. இது குறித்து, மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் கூறுகையில், அடுத்த ஆண்டு ஜனவரி 15ல், இது குறித்த அரசு அறிவிப்பு வெளியிடப்படும் என்றும், இதற்கு ஒரு வருடம் காலம் அவகாசம் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஐந்து மடங்கு அபராதம்
வியாபாரிகள் தற்போது முத்திரை இல்லாமல் தங்களிடமிருக்கும் நகைகளை விற்றுக் கொள்ள இந்த ஒரு வருட கால அவகாசத்தை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் பஸ்வான் கூறியுள்ளார். ஹால்மார்க் முத்திரை விதிகளை மீறுவோருக்கு குறைந்தபட்சம், 1 லட்சம் ரூபாயும், அதிகபட்சமாக நகையின் மதிப்பில் ஐந்து மடங்கு அபராதம் விதிக்கவும், ஓராண்டு சிறை தண்டனை வழங்கவும் சட்டத்தில் இடமுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஹால்மார்க் தர சான்று வழங்க நடவடிக்கை
மேலும் தற்போது நாட்டில், ஹால்மார்க் தரச் சான்று வழங்க தற்போது, 234 மையங்களுக்கு உரிமை வழங்கப்பட்டுள்ளது என்றும், இதில் பெரும்பாலான மையங்கள், தமிழகம் மற்றும் கேரளாவில் உள்ளன என்றும் கூறப்படுகிறது. ஓராண்டு காலத்துக்குள் நாட்டிலிருக்கும் அனைத்து மாவட்டங்களிலும் தரச் சான்று மையங்களை திறக்க அரசு திட்டமிட்டுள்ளதாகவுன்ம் கூறப்படுகிறது.
நகை வியாபாரிகள் பதிவு செய்ய வேண்டும்
இந்திய தர நிர்ணய கழகத்தில் பதிவு செய்த நகை வியாபாரிகள் மட்டுமே, இனி ஹால்மார்க் நகைகளை விற்பனை செய்ய முடியும். எனவே, அனைத்து வியாபாரிகளும், இந்த ஓராண்டு கால அவகாசத்துக்குள் இந்திய தர நிர்ணய கழகத்தில் பதிவு செய்தாக வேண்டும் எனவும் கூறப்படுகிறது. எனினும் இந்த அறிக்கையினை நகை வியாபாரிகள் மற்றும் ஆபரணத் துறையினர் வரவேற்பை தெரிவித்துள்ளனர்.
நம்பிக்கையை அதிகரிக்கும்
மேலும் இந்த திட்டமானது தங்கம் சார்ந்த துறையினர் மீதான நம்பிக்கையை அதிகப்படுத்தும். வியாபாரிகள், இந்த தரச்சான்றிதல் விற்பனையாளர் நுகர்வோர் என இரு தரப்புக்கும் நன்மை பயப்பதாக இருக்கும். அது மட்டுமின்றி இந்திய தங்கத் துறையினர் மீதான அபிப் பிராயத்தையும் மாற்றுவதற்கு உதவும் என்றும் இத்துறை சார்ந்த வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
சில பிரச்சனையை தவிர்க்க முடியும்
தங்க நகைகளின் சுத்த தன்மையை பற்றி சான்றளிப்பது தான் ஹால்மார்க் முத்திரை. இது தேசிய தர மதிப்பு நிறுவனத்தால் வழங்கப்படுகிறது. இந்த
ஹால்மார்க் முத்திரை 4 முத்திரைகளை கொண்டது. அவை பி.ஐ.எஸ். முத்திரை, தங்கத்தின் சுத்த தன்மையை குறிக்கும் முத்திரை, ஹால்மார்க் மையத்தின் முத்திரை, நகைக்கடையின் முத்திரை ஆகியவை ஆகும். இதன் மூலம் போலி தங்கம், கலப்படம் அதிகரிப்பு உள்ளிட்ட சில பிரச்சனைகளை தவிர்க்க முடியும். குறிப்பாக தங்கம் வாங்குபவர்களின் நம்பிக்கை அதிகரிக்கும். ஆக மக்களே இனி நீங்க தங்கம் வாங்க போகும்போது ஹால்மார்க் முத்திரையுடன் பெறுங்கள்.