டெல்லி: இன்றளவிலும் நடுத்தர மக்கள் தங்கம் வாங்கி வைப்பதே, அவசர தேவைக்கு உடனடியாக வைத்து கடன் வாங்கிக் கொள்ளலாம் என்பதற்காகத் தான்.
இது பாரம்பரியத்தின் ஒரு அம்சமாக கருத்தப்பட்டாலும், இன்றைய நாளிலும் பல நடுதர குடும்பங்களில் அவசர தேவைக்கு ஆபத்பாந்தவனாக உதவுவது தங்கம் தான்.
ஏனெனில் நினைத்த நேரத்தில்? எந்த கேள்வியும் கேட்காமல்? குறைந்த நேரத்தில் பணம் கிடைக்கும் என்றால் அது நகைக்கடன் தான். உதாரணத்திற்கு நீங்கள் வீட்டுக்கடன் வாங்குகீறிர்கள் என்றால், அதற்கு பத்திரம், தாய் பத்திரம், இசி, உங்களது மாத வருமானத்திற்கான சான்று, கடனுக்கு பொறுப்பான ஆவணம், கட்டிட அனுமதி இப்படி பல சான்றுகள் தேவை.
நகைக்கடன் தான் பாதுகாப்பு
ஆனால் தங்க நகைக்கடனுக்கோ அப்படி எதுவும் பெரியதாக தேவையில்லை. சொல்லப்போனால் உங்களது முகவரி சான்று மற்றும் அடையாள சான்று என இருந்தால் போதுமானது? இந்தியாவினை பொறுத்த வரையில் நகைக்கடன் என்பது மிகவும் ஒரு பாதுகாப்பான விஷயமாகவே பார்க்கப்படுகிறது. ஏனெனில் நினைத்த நேரத்தில் உங்களது நகைகளை அடகு வைத்து, சந்தை மதிப்புக்கு ஏற்ப பணம் வாங்கிக் கொள்ளலாம்.
மதிப்பீடு செய்யப்பட்டு கடன் தரப்படும்
உங்களின் நகையின் தரத்தினை மதிப்பீடு செய்யப்பட்ட பின்னரே, நீங்கள் உங்கள் தங்க நகை மீதான கடனை பெற்றுக் கொள்ள முடியும். தங்க நகைகள் மட்டும் வைத்து வங்கிகளில் கடன் பெற முடியும். எனினும் தங்க கட்டிகள் மற்றும் தங்க காசுகளையும் அடகாக வைத்து வங்கிகளில் கடன் பெற முடியாது.
நகையின் மதிப்பில் 90% கடனாக பெற்றுக் கொள்ளலாம்
இதற்கிடையில் இதுவரையில் நகையின் மதிப்பில் 75% கடனாக பெற்று வந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு ரிசர்வ் வங்கி நகையின் மதிப்பில் 90% வரையில் கடன் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது. இது மக்கள் கொரோனா நெருக்கடியினால் சிக்கித் தவித்து வரும் நிலையில். அவர்களுக்கு சற்று நிவராணம் அளிக்கும் என்றும் கூறியது.
எப்போது வரை நடைமுறை
ரிசர்வ் வங்கியின் இந்த அதிரடி அறிவிப்பானது மார்ச் 31, 2021 வரை நடைமுறையில் இருக்கும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்த நகைக்கடனை முன்னணி வங்கிகளாக எஸ்பிஐ, ஹெச்டிஎஃப்சி, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் என பலரும் வழங்கி வருகின்றனர்.
எவ்வளவு கடன் பெற முடியும்?
நகைக்கடன் மூலம் ஒரு தனி நபர் லட்சக்கணக்கில் கடன் வாங்கிக் கொள்ள முடியும். ஏனெனில் இந்த விகிதமானது ஒவ்வொரு வங்கியிலும் ஒவ்வொரு விதமாக உள்ளது.
உதாரணத்திற்கு ஐசிஐசிஐ 10,000 ரூபாய் முதல் 1 கோடி ரூபாய் வரையில் வாங்கிக் கொள்ளலாம் இதே எஸ்பிஐ 20,000 ரூபாய் முதல் 20 லட்சம் வரையில் வாங்கிக் கொள்ளலாம் என்றும் கூறியுள்ளது.
இதே வங்கி அல்லாத நிதி நிறுவனமான முத்தூர்ட் குறைந்தபட்சம் 1,500 ரூபாயிலிருந்து, அதிகபட்சம் எவ்வளவு வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம் என்றும் கூறியுள்ளது.
என்னென்ன ஆவணங்கள் தேவை?
முகவரி சான்றாக ஆதார் கார்டு, பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட பலவற்றையும் ஏற்றுக் கொள்கிறது.
இதே அடையாள சான்றுக்காக பான் கார்டு உள்ளிட்ட ஆவணங்களையும் கேட்கிறது. எனினும் சில வங்கிகள் கூடுதலாக சில ஆவணங்களையும் பெறலாம்.
எந்த வங்கி? எவ்வளவு வட்டி?
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் தங்க நகைக்கடனுக்கான வட்டி விகிதம் 7.00% முதல் 7.50% வரை இருக்கும். இதன் செயல்பாட்டுக் கட்டணம் 0.50%, இதனுடன் ஜிஎஸ்டியும் சேர்க்கப்படும்.
இதே பஞ்சாப் நேஷனல் வங்கியில் வட்டி விகிதமானது 8.60% முதல் 9.15% ஆகும். இது செயல்பாட்டு கட்டணமாக கடன் அளவில் 0.75% விதிக்கிறது.
ஹெச்டிஎஃப்சி & ஐசிஐசிஐ வங்கியில் வட்டி எவ்வளவு?
ஹெச்டிஎஃப்சி வங்கியில் இந்த நகைக்கடன் வட்டி விகிதமானது 9.90% முதல் 17.90% ஆக உள்ளது. இதற்கு செயல்பாட்டு கட்டணம் 1.50% ஆகும். இதனுடன் ஜிஎஸ்டியும் சேரும்.
ஐசிஐசிஐ வங்கியில் 10% முதல் 19.76% வட்டி விகிதமாகும். இதற்கு செயல்பாட்டு கட்டணமாக உங்கள் கடன் அளவில் 1% ஆகும்.
ஆக்ஸிஸ் வங்கி & பாங்க் ஆப் பரோடா வங்கியில் வட்டி எவ்வளவு?
ஆக்ஸிஸ் வங்கியில் நகைக்கடன் வட்டி விகிதமானது 9.75% முதல் 17.50% ஆகும். இதே செயல்பாட்டு கட்டணமாக உங்கள் கடன் அளவில் 1% மும், இதனுடன் ஜிஎஸ்டி விகிதமும் வசூலிக்கப்படுகிறது.
இதே பாங்க் ஆப் பரோடா வங்கியில் BRLLR + SP+ 1.75% ஆகும். இதே செயல்பாட்டு கட்டணமாக 0.50%மும், இதனுடன் ஜிஎஸ்டி விகிதமும் வசூலிக்கப்படுகிறது.
கனரா வங்கியில் எவ்வளவு வட்டி?
கனரா வங்கியில் 1 வருட எம்சிஎல்ஆர் விகிதம் (7.65%) வசூலிக்கப்படுகிறது. எனினும் செயல்பாட்டு கட்டணம் எதுவும் குறிப்பிடப்படவில்லை.
இந்தியன் வங்கியில் 8.50% முதல் 8.75% வரையிலும் வட்டி வசூலிக்கப்படுகிறது.
வங்கி அல்லாத நிதி நிறுவனங்களில் வட்டி
முத்தூர்ட் பைனான்ஸில் 12% முதல், அதிகபட்சமாக 27% வரை வட்டி விகிதம் வசூலிக்கப்படுகிறது.
இதே மணப்புரம் பைனான்ஸில் அதிகபட்சமாக 29% வரை வட்டி வசூலிக்கப்படுகிறது. எனினும் இந்த நிதி நிறுவனங்களில் செயல்பாட்டுக் கட்டணம் என்று எதுவும் தனியாக இல்லை.
அவசர காலத்திற்கு சிறந்த ஆப்சன்
தற்போது நாட்டில் நிலவி வரும் நெருக்கடியான சூழலில் அதனை தடுக்க விரைவாக கடன் பெறுவதற்கான ஆதாரங்களை நீங்கள் தேடினால், அதன் முதல் ஆப்சன் தங்க நகைக்கடனாகத் தான் இருக்கும். தங்கத்தின் சந்தை மதிப்பும் அதிகரித்து வருவதால், கூடுதலான தொகையை நீங்கள் பெற முடியும். இதனை இன்னும் ஊக்கப்படுத்தும் விதமாக மத்திய வங்கியும் நகையின் மதிப்பில் 90% கடன் பெற முடியும் என தெரிவித்துள்ளது.
எனினும் நீங்கள் கடன் வாங்கும் முன் எந்த வங்கியில் எவ்வளவு வட்டி? எவ்வளவு செயல்பாட்டுக் கட்டணம் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.