இன்றைய காலகட்டத்திற்கு தேவையான ஒரு செய்தி தான் இது. ஏனெனில் கொரோனாவின் காரணமாக மக்கள் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கும் நிலையில், செய்வதறியாது தவித்து வருகின்றனர்.
இன்னும் சொல்லப்போனால் கிராமப்புறங்களில் இதன் தாக்கம் மிக அதிகம். ஏனெனில் செலவு செய்து, விளைவித்த பொருட்களை சரியான நேரத்தில் விற்று பணமாக்க முடியாமல் பல விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
சிலர் பொருட்கள் அழுகி வீணாக குப்பைகளில் கொட்டுவதனையும் பார்க்க முடிகிறது. இப்படி முதலீடு செய்து இருக்கும் பொருட்களையும் விற்க முடியாமல், கையிலும் காசு இல்லாமல் அல்லாடி வரும் விவசாயிகளுக்கும் ஒரு நல்ல திட்டம் தான் இந்த விவசாய நகைக்கடன்.
நகைக்கடன் வட்டி
பொதுவாக நகைக்கடன் வழங்கி வரும் நிறுவனங்களில் வட்டி விகிதமானது வருடத்திற்கு 12 முதல் 18 சதவீதம் வரை கூட இருக்கும். அதுவும் இந்த விகிதமாக நகைக்கடனின் அளவு, நகையின் மதிப்பினை பொறுத்து இருக்கும். ஆனால் அரசு வங்கியான இந்தியன் வங்கியில் வருடத்திற்கு விவசாய நகைக் கடனிற்கு 7 சதவீதம் தான் வட்டி விகிதம்.
மாதம் ரூ.543 வட்டி
இந்த குறைந்த வட்டி விகிதமானது நிச்சயம் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். அதுவும் தற்போது நாட்டில் நிலவி வரும் கொரோனா வைரஸ் நெருக்கடிக்கு மத்தியில் மிக பயனுள்ளதாக இருக்கும். ஒரு நபர் ஒரு லட்சம் ரூபாய் தங்கக் கடன் வாங்குகிறார் என்றால், அவர் மாதத்திற்கு 543 ரூபாய் வட்டி கட்ட வேண்டியிருக்கும். ஆனால் இது மற்ற நகைக்கடன் நிறுவனங்களின் வட்டியுடன் ஒப்பிடும் போது மலிவானது.
பம்பர் அக்ரி நகைக்கடன்
சொல்லப்போனால் இந்த துறையில் இது தான் மிகக்குறைந்த வட்டியாகும். அதோடு ஒரு கிராமுக்கான கடன் விகிதமும் அதிகம். நகையின் மதிப்பில் 80% கடனாக வழங்கப்படுகிறது. 6 மாதங்களில் திரும்ப செலுத்தக்கூடிய பம்பர் அக்ரி நகைக்கடனும் 7% நிலையான வட்டியில் கிடைக்கிறது. இந்த பம்பர் அக்ரி நகைக்கடனின் கீழ் நகை மதிப்பில் 85% கடனாக வழங்கப்படுகிறது.
பயனுள்ள விஷயம்
தற்போது கிராமுக்கு 3,748 ரூபாய் வரை நிதியளிக்கப்பட்டு வருகிறது. தனி நபர் கடன்களுடன் ஒப்பிடும்போது நகைக்கடன்கள் மிக மலிவானவை. ஏனெனில் வட்டி குறைவு. விரைவில் பணம் கிடைக்கும். ஆக இது கொரோனா பாதிப்பான நேரத்தில் மிகப் பயனுள்ளதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. உண்மையில் மற்ற வங்கிகளுடன் ஒப்பிடும்போது குறைந்த வட்டி என்பது மிக நல்ல விஷயம் தான்.