முறைப்படுத்தப்பட்ட முதலீட்டுத் திட்டத்தின் (SIP) மூலமாக நீங்கள் மியூச்சுவல் ஃபன்ட்டில் முதலீடு செய்திருந்தால், "ரூபாய் மதிப்பு சராசரி" அல்லது "விலை மதிப்புச் சராசரி" (Rupee Cost Average - RCA) என்னும் கருத்துக் குறித்துக் கட்டாயம் அறிந்திருப்பீர்கள். உதாரணமாக, நீங்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட் தொகையை மியூச்சுவல் ஃபன்டில் முதலீடு செய்வதாக வைத்துக் கொள்வோம். அப்படியானால், ஒரு வருடத்தில் பன்னிரண்டு முறை முதலீடு செய்கிறீர்கள்.
உங்களுடைய பணம் மியூச்சுவல் ஃபன்ட் நிறுவனத்தின் மூலமாக ஒவ்வொரு மாதமும் பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படுகிறது. பங்குகளின் விலை குறைவாக இருக்கும் காலத்தில், உங்களுடைய பணத்தில் அதிகமான பங்குகள் வாங்கப்படும். விலை அதிகமாக இருந்தால் உங்களுடைய பணத்தின் மூலம் குறைவான பங்குகளில் மட்டுமே முதலீடு செய்ய முடியும். இதனைத்தான் விலை மதிப்புச் சராசரி என்கிறோம். நம்முடைய முதலீடுகள் அனைத்தையும் ஒரே நேரத்தில் முதலீடு செய்வதைக் காட்டிலும் சம பங்காகப் பிரித்துக் குறிப்பிட்ட கால இடைவெளியில் முதலீடு செய்யும் பொழுது இந்த விலை மதிப்புச் சராசரியின் பலனை அனுபவிக்க இயலும்.
வழி ஒன்று… பயன் நான்கு…
விலை மதிப்புச் சராசரி நடைமுறை மியூச்சுவல் ஃபன்ட் முதலீட்டாளர்களுக்கு நான்கு வழிகளில் பயன் தரக்கூடியது
மொத்தமான முதலீட்டால் வரும் பாதிப்பிலிருந்து தப்பித்தல்
விலைமதிப்புச் சராசரி நடைமுறை, ஏற்றம் இறக்கம் என நிலையில்லாமல் மாறிக்கொண்டே இருக்கும் சந்தையில், முதலீட்டாளர்களுக்கு, ஒட்டுமொத்தமான முதலீட்டினால் வரக்கூடிய பாதிப்பைக் குறைக்கிறது.
பங்குச் சந்தையில் ஆதாயமான சூழல் நிலவும்பொழுது ஒரு பெரிய தொகையை முதலீடு செய்து அதனை நீண்ட காலத்திற்குத் தக்க வைத்துக் கொள்வதுதானே சிறந்தது எனச் சிலர் கருதலாம். இப்படியாக முடிவெடுத்தால் இரரண்டு சிக்கல்கள் எழுகின்றன. முதலாவது, பங்குச் சந்தையின் ஆழ அகலத்தை முழுமையாக அறிந்து கொள்ள முடியாத போது, பங்குகளை வாங்குவதற்கு உரிய சரியான நேரம் இதுவென எப்படிக் கண்டு கொள்ள முடியும்?. இரண்டாவது, பத்து ஆண்டுக் காலத்தில் பங்குச் சந்தையின் ஏற்றம் என்பது இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு மட்டுமே நீடித்திருக்கும். இந்தக் குறைந்த காலத்திற்காக நம்முடைய பணத்தைப் பத்து ஆண்டுகள் வரை முதலீடு செய்வது சரியானதுதானா என யோசிக்க வேண்டியுள்ளது. பின்வரும் உதாரணம், விலை மதிப்புச் சராசரி உங்களுக்கு எவ்வகையில் பலனளிக்கும் என்பதை விளக்கும்.
மேலே உள்ள பட்டியல், மொத்தமாக முதலீடு செய்தவர் வருட முடிவில் இழப்பை சந்தித்திருப்பதையும், முறையான முதலீட்டுத் திட்டத்தின்படி (SIP) முதலீடு செய்தவர் வருடத்தின் முடிவில் அதிகமான எண்ணிக்கையில் பங்குகளின் ஒதுக்கீடு பெற்றுப் பயனடைந்திருப்பதையும் காட்டும். இதற்குக் காரணம் விலை மதிப்புச் சராசரி கருத்தாக்க நடைமுறைதான் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
முறையான முதலீட்டுத் திட்டம் முதலீட்டை ஒழுங்குபடுத்துகிறது
தொலை நோக்குப் பார்வையோடு யோசித்துப் பார்த்தால், வெற்றி என்பது இலாபம் தரும் நிறுவனத்தைத் தேர்ந்தெடுத்து முதலீடு செய்வதில் இல்லை, மாறாக, முதலீட்டுத் திட்டங்களை முறைப்படுத்தித் தகுந்த நெறிமுறைகளோடு இயங்குவதில்தான் உள்ளது என்பது புரியும். ஒரு நிலையான தொகையைக் குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ச்சியாக முதலீடு செய்தால், நீண்ட கால முடிவில் பெரும் இலாபத்தைச் சம்பாதிக்க இயலும். கீழே உள்ள பட்டியல், முறையாகவும் தொடர்ச்சியாகவும் நீண்ட காலத்திற்கு முதலீடு செய்து வந்தால் நம்முடைய வருமானம் மேல்நோக்கி உயர்ந்து கொண்டே வருவதை விளக்கும்.
முறையான முதலீட்டின் விளைவாகத்தான் விலை மதிப்புச் சராசரியின் பயனை அறுவடை செய்ய முடியும். முறையான முதலீட்டின் கால அளவு நீள்வதற்கு ஏற்ப அதனுடைய இலாபத்தின் அளவும் விரிவடையும்.
சந்தையை மதிப்பீடு செய்யும் கடினமான பணியிலிருந்து பாதுகாக்கிறது
"பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கத்தை மிகத் துல்லியமாக என்னால் கணிக்க முடியும்" என யாராவது சொன்னால் ஒன்று அவர் கடவுளாக இருக்க வேண்டும் அல்லது மிகப்பெரிய மோசடிக்கரானாக இருக்க வேண்டும். பங்குச் சந்தை எப்பொழுது ஆதாயம் தரும் நிலையில் உள்ளது? எப்பொழுது அபாயகரமான நிலையில் உள்ளது? பங்குகளை வாங்கச் சரியான நேரம் எது? விற்பதற்கு உகந்த நேரம் எது? என்பன போன்று தலையையும் தலையணையையும் பிய்த்து எறியக்கூடிய கேள்விகளில் இருந்து உங்களைக் காப்பாற்றுவது விலை மதிப்புச் சராசரி நடைமுறைதான் (RCA).
முதலீட்டை ஒருங்கிணைத்து ஒருமுகப்படுத்துகிறது
இந்த நடைமுறை உங்களுடைய முதலீட்டை ஒருங்கிணைத்து சந்தையின் ஏற்ற இறக்கத்தினால் வரக்கூடிய பாதிப்புகளில் இருந்து பாதுகாக்கிறது. எனவே நீங்கள் உங்களுடைய முறையான முதலீட்டுத் திட்டத்திலிருந்து (SIP) பாதியிலேயே வெளியேற வேண்டிய அவசியம் எழுவதில்லை. விலை மதிப்புச் சராசரி முறை வெற்றிகராமான கருத்தாக்கமாக முதலீட்டாளர்களாலும் நிதி ஆலோசகர்களாலும் கருதப்படுவதற்கு இதுதான் முக்கியக்காரணம்.