பங்கு சந்தை என்றாலே ஏதோ சூதாட்டம். நஷ்டத்தினை மட்டுமே தரும் என்ற தவறான கருத்து தான் ஒரு காலத்தில் இருந்து வந்தது. ஆனால் இன்று பலரும் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர். லாபமும் ஈட்டி வருகின்றனர்.
குறிப்பாக நீண்டகால நோக்கில் லாபம் ஈட்டி வருபவர்கள் பலர். அந்த வகையில் சிறந்த உதாராணம் பங்கு சந்தை முதலீட்டாளரான, இந்தியாவின் வாரன் பஃபெட் என்று அழைக்கப்படும் ராகேஷ் ஜுன் ஜுன்வாலா தான்.
ஏனெனில் இவரின் போர்ட்போலியோவில் உள்ள பங்குகள் நீண்டகால நோக்கில் லாபகரமான பங்குகளாக உள்ளன. அப்படி லாபம் கொடுத்த ஒரு பங்கினை பற்றித் தான் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்.
தூள் கிளப்பிய செயில்
இன்று நாம் பார்க்கவிருக்கும் பங்கு ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா லிமிடெட் (SAIL) நிறுவனம். இது ராகேஷ் ஜூன் ஜுன்வாலாவின் பட்டியலில் உள்ள ஒரு பங்காகும். இந்த பங்கானது கடந்த 12 மாதங்களில் இருமடங்கு ஏற்றம் கண்டுள்ளது. முதலீட்டாளர்களின் முதலீடு கடந்த 12 மாதங்களில் இருமடங்காக அதிகரித்துள்ளது.
100% அதிகமாக ஏற்றம்
லார்ஜ் கேப் பங்கான இது கடந்த 12 மாதங்களில் 100% அதிகமாக லாபம் கொடுத்துள்ளது. இந்த காலகட்டத்தில் இந்த பங்கின் விலையானது 54.7 ரூபாயில் இருந்து 11.45 ரூபாயாக அதிகரித்துள்ளது. கிட்டதட்ட 105% ஏற்றம் கண்டுள்ளது. இந்த காலகட்டத்தில் முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபம் கொடுத்துள்ளது.
இன்றைய நிலவரம்
இதற்கிடையில் இன்று இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது என்.எஸ்.இ-ல் 1.45% அதிகரித்து, 111.80 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இன்றைய உச்ச விலை 112.50 ரூபாயாகும். இன்றைய குறைந்த பட்ச விலை 108.65 ரூபாயாகும்.
இதே பிஎஸ்இ-ல் 1.54% அதிகரித்து, 111.85 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இன்றைய உச்ச விலை 112.45 ரூபாயாகும். இன்றைய குறைந்த பட்ச விலை 108.70 ரூபாயாகும். இதன் 52 வார உச்ச விலை 151.10 ரூபாயாகும். இதே இதன் 52 வார குறைந்தபட்ச விலை 53 ரூபாயாகும்.
டெக்னிக்கல் & ஃபண்டமெண்டல் காரணிகள்
46,000 கோடி ரூபாய் சந்தை மூலதனத்தினை கொண்ட இந்த நிறுவனம், 5 நாள், 20 நாள் மூவிங் ஆவரேஜ்ஜுக்கு மேலாக இருந்தாலும், 50 நாள், 100 நாள், 200 நாட்கள் மூவிங் ஆவரேஜ்ஜுக்கும் கீழாகவே இருந்து வருகின்றது.
எனினும், இந்த நிறுவன கடந்த காலாண்டுகளில் நல்ல வளர்ச்சியினையே பதிவு செய்துள்ளது. ஆக ஃபண்டமெண்டல் காரணிகளும் இந்த பங்கிற்கு சாதகமாகவே உள்ளன. எனினும் கடந்த 12 மாதங்களில் 100% மேலான ஏற்றத்தில் உள்ளதும் நினைவு கூறத்தக்கது.
கவனிக்க வேண்டிய விஷயம்
சில காலமாக மெட்டல்ஸ் துறையானது சரிவில் இருந்தாலும், தற்போது தேவையானது அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதன் காரணமாக இந்த நிறுவனத்தின் வருவாய் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக விரைவில் இந்த பங்கு விலையும் மீண்டும் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எப்படியிருப்பினும் மெட்டல் பங்குகள் சர்வதேச அளவிலான, சப்ளை மற்றும் தேவையை பொறுத்தும் இருக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
செப்டம்பர் காலாண்டு முடிவு
கடந்த ஜூலை - செப்டம்பர் காலாண்டு முடிவில் அதன் நிகர லாபம் 10 மடங்கிற்கும் மேலாக அதிகரித்து, 4,338.75 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது ஒரு வருடத்திற்கு முன்னதாக 436.52 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிறுவனத்தின் மொத்த வருமானம் 58% அதிகரித்து, 27,007 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
செலவு அதிகரிப்பு
கடந்த செப்டம்பர் காலாண்டில் செலவு விகிதமானது 21,304.64 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 16,733.29 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் இந்த நிறுவனத்தின் இயக்குனர் குழு இடைக்கால டிவிடெண்டாக பங்குக்கு 4 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது.
ராகேஷ் ஜுன் ஜுன்வாலா வசம்
பங்கு சந்தை முதலீட்டாளரான ராகேஷ் ஜுன் ஜுன்வாலா வசம் 7,25,00,000 பங்குகள் அல்லது 1.76% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது ஏப்ரல் - ஜூன் காலாண்டில் 1.39% இருந்தது குறிப்பிடத்தக்கது. ஜூன் காலாண்டுடன் ஒப்பிடும்போது, செப்டம்பர் காலாண்டில் பங்கு விகிதமானது அதிகரித்துள்ளது.
ஜேபி மார்கன் கணிப்பு
ஜேபி மார்கன் நிறுவனம் மூன்றாவது காலாண்டுக்கு பிறகு இந்த பங்கு விலையானது அதிகரிக்கலாம் என நம்பிக்கை தெரிவித்துள்ளது. இதற்கிடையில் இந்த பங்கின் இலக்கினை 150 ரூபாயில் இருந்து, 165 ரூபாயாக அதிகரித்துள்ளது. இது இரண்டாம் பாதியில் செலவினங்கள் குறையும் என்பதால், இது இந்த நிறுவனத்தின் வருவாய் வளார்ச்சிக்கு சாதகமாக அமையலாம் என தெரிவித்துள்ளது.