நம் நாட்டின் நிதி சந்தை மாற்றம் அடைந்து கொண்டே தான் இருக்கிறது. பெருகி வரும் வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் இணையதள சேவைகளால், பணத்தை முதலீடு செய்ய ஒருவருக்கு பல வழிகள் உள்ளது.
இந்திய தபால் துறையும் ஒரு முதலீட்டு நிறுவனமாக பல ஆண்டுகள் செயல்பட்டு வருகிறது. இங்கு அளிக்கப்படும் சேமிப்புத் திட்டங்களும், முதலீட்டு திட்டங்களும் முதலீட்டார்களை ஈர்க்கும் விதமாகவும், பாதுகாப்பானதாகவும் உள்ளது. தபால் துறையை சார்ந்த தந்தி மற்றும் அஞ்சல் தலைகள் போன்றவைகள் எல்லாம் உபயோகத்தில் குறைந்து போனாலும், ஏன் தந்தி சேவை சில வாரங்களுக்கு முன்பு முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. இருந்தாலும் மக்களிடம் இந்திய தபால் துறையின் முதலீட்டு திட்டங்களின் மேல் உள்ள ஆர்வம் குறைந்தபாடில்லை. இந்தியா முழுவதும் 1.55 லட்ச கிளைகளை கொண்ட தபால் துறை மட்டும் வங்கிக்கான உரிமத்தை வைத்திருந்தால், அதை மிஞ்சும் நிதி நிறுவனம் எதுவும் இருக்க முடியாது.
தொடர் வைப்புத்தொகை (ரெக்கரிங் டெபாசிட்):
வைப்புக்காலம்: 5 வருடங்கள்
வட்டி விகிதம்: 8.3 விழுக்காடு
ஒரு புதிய தொடர் வைப்புத்தொகை கணக்கை பணம் அல்லது காசோலை மூலம் துவங்கலாம். வைப்பு நிதிமுடிவடையும் நேரத்தில் அதை மேலும் ஐந்து வருடங்களுக்கு நீடித்து கொள்ளலாம். மேலும் கணக்கின் உரிமையாளர், புது கணக்கை துவங்கும் போது தன் சார்பாக ஒரு நாமினையை குறிப்பிட வேண்டும். ஒரு கணக்கை ஒரு அஞ்சல் அலுவலக கிளையில் இருந்து மற்றொன்றுக்கு சுலபமாக மாற்றிக் கொள்ளலாம். அதே போல் ஒருவர் தன் பெயரில் அதே அஞ்சல் அலுவலகத்தில் பல கணக்குகளை திறந்து கொள்ளலாம். கணக்கின் உரிமையாளர் 6 மாத தவணையை முன் கூட்டியே செலுத்தி விட்டால் அவருக்கு தள்ளுபடிகளும் கிடைக்கும். வைப்பு தொகையை செலுத்த 15 நாள் அவகாசமும் கொடுக்கப்படுகிறது.
மூத்த குடி உரிமையாளர்களின் சேமிப்பு திட்டம்:
வைப்புக்காலம்: 5 வருடங்கள்
வட்டி விகிதம்: 9.2 விழுக்காடு
இந்த கணக்கை 60 அல்லது அதற்கு மேற்பட்ட வயது உடையவர்கள் திறக்கலாம். வயது முதிர்வு ஓய்வு அல்லது வி.ஆர்.எஸ் (VRS) வாங்கியவர்களும் கூட, இந்த கணக்கை திறக்கலாம். அனால் ஓய்வு பயன்களுக்கான ரசீதுகளை பெற்ற ஒரு மாத காலத்திற்குள் இந்த கணக்கை திறக்க வேண்டும்.
முதலீட்டு பணம் 1 லட்சத்திற்கு குறைவாக இருந்தால் முதலீட்டு தொகையை பணமாக கொடுக்கலாம். ஆனால் முதலீட்டு பணம் 1 லட்சத்திற்கு மேலாக இருந்தால் அதனை கண்டிப்பாக காசோலைகள் மூலமாக தான் கொடுக்க வேண்டும். ஒருவர் ஒரு கணக்கிற்கு மேல் உபயோகப்படுத்தலாம். கணக்கை கூட்டுக் கணக்காகவும் (மனைவியுடன் சேர்ந்து) துவங்கலாம். வட்டி பணம் தானாக அதே அஞ்சல் அலுவலகத்தில் உள்ள சேமிப்பு கணக்கில் பிடிசிஎஸ் (PDCS) அல்லது மணி ஆர்டர் மூலம் வரவாகும் படி செய்யலாம்,
இந்த திட்டத்தின் கீழ் ஒருவர் 15 லட்ச ரூபாய் வரை முதலீடு செய்ய அனுமத்திக்கப்படுகிறார்கள். மேலும் இந்த முதலீடு பிரிவு 80C-யின் கீழ் வரி தள்ளுபடிக்கு உட்படும்.
பப்ளிக் பிராவிடன்ட் ஃபண்ட் (பொது வருங்கால நிதி)
வைப்புக்காலம்: 15 வருடங்கள்
வட்டி விகிதம்: 8.7 விழுக்காடு
இந்த கணக்கை தனிப்பட்ட நபர் ஒருவர் தொடங்க வருடத்திற்கு குறைந்தபட்ச வரம்பாக 500 ரூபாயும் அதிகபட்ச வரம்பாக 1 லட்ச ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இதனை பணம் அல்லது காசோலை மூலம் தொடங்கலாம். இவ்வகை முதலீடும் வருமான வரி சட்டத்தின் பிரிவு 80C-யின் கீழ் வருமான வரி தள்ளுபடிக்கு உட்பட்டது. இந்த வைப்புத் தொகையினால் கிடைக்கும் வட்டி பணத்திற்கு வட்டி கிடையாது. கணக்கு ஆரம்பித்த மூன்றாம் வருடத்தில் கடன் வசதிகளும் அளிக்கப்படுகிறது. ஆனால் அந்த கடன் கணக்கை 15 வருடதிற்கு முன்னாள் முன் கூட்டியே மூட முடியாது.
பணமாற்றல்:
வெளிநாட்டில் இருந்து இந்தியாவில் உள்ளவர்களுக்கு சொந்த பணமாற்றங்கள் செய்வதற்கு அஞ்சல் துறையின் பணமாற்றம் சேவை துரிதமாகவும் சுலபமாகவும் உதவுகிறது. குடும்ப பராமரிப்பு செலவுகள் மற்றும் வெளிநாட்டினர் இந்தியாவை சுற்றி பார்க்க தேவைப்படும் பணத்தை மட்டுமே இந்த சேவை மூலமாக மாற்ற முடியும். அதே போல் இந்தியாவில் இருந்து பிற நாடுகளுக்கு எம்டிஎஸ்எஸ் (MTSS) திட்டம் மூலம் பணமாற்றம் செய்யவும் அனுமதியில்லை.
195 நாடுகளில் இருந்து 22 வெளிநாட்டு நாணயத்தில் பணமாற்றங்கள் துரிதமாக நடக்க இந்திய அரசாங்கத்தின் அஞ்சல் துறை வெஸ்டர்ன் யூனியன் பினான்ஷியல் செர்விஸ் மற்றும் மணிகிராம் இண்டெர்நாஷனல் ஆகியவையுடன் கூட்டு வைத்துள்ளது.
வணிக வங்கியியல்:
முழுமையான வங்கி சேவைகளில் ஈடுபட இந்திய அஞ்சல்துறை ரிசர்வ் வங்கியிடம் உரிமம் கோரியது. இந்த அஞ்சல் துறை இந்தியாவில் 1,54,822 அஞ்சல் அலுவலக கிளைகளை கொண்டுள்ளது. இதில் 1,39,086 கிளைகள் கிராம புறங்களில் உள்ளது. மீதமுள்ள 15,736 கிளைகள் நகரம் சார்ந்த இடங்களில் உள்ளது. நாடு முழுவதும் 90,000 வங்கி கிளைகள் உள்ளது. அஞ்சல் பிணையம் மூலம் நடக்கும் வங்கி சேவைகள் தற்போதுள்ள வங்கி சேவைகளை விட மும்மடங்கு பெருகும் என்று கணக்கிடப்படுகிறது.
இந்திய அஞ்சல் துறை (DoP) முதல் வருடத்தில் 50 வங்கி கிளைகளை திறக்க திட்டம் போட்டுள்ளது. 5 வருடங்களில் இதனை 150 கிளைகளாக உயர்த்த திட்டம் உள்ளதாக PTI அறிக்கை கூறுகிறது. அஞ்சல் வங்கிகளை அஞ்சல் துறை (DoP) தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளும்.
மியூச்சுவல் ஃபண்ட்ஸ்:
ஜனவரி-22, 2011-ல் இந்திய அஞ்சல் துறை பணத்தை மியூச்சுவல் ஃபண்ட்சில் முதலீடு செய்யும் திட்டத்தை IDBI-பிரின்சிபலுடன் கூட்டு சேர்ந்து ஆரம்பித்தது. அங்கீகரிக்கப்பட்ட மியூச்சுவல் ஃபண்ட் ஆலோசகர் ஒருவரும் அஞ்சல் அலுவலக கிளைகளில் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான விண்ணப்ப படிவம் மற்றும் திட்டங்கள் பற்றிய தகவல்களையும் குறிப்பிட்ட அஞ்சல் அலுவலக முகப்பில் அல்லது அஞ்சலதிபரிடம் பெற்றுக் கொள்ளலாம்.
விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, தேவையான இடத்தில் கையெழுத்திட்டு தேவையான பணத்தை வரைவு காசோலை அல்லது காசோலை மூலமாக முகப்பு அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும். பணமாக பெற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
என்.எஸ்.சி - தேசிய சேமிப்பு சான்றிதழ் (NSC)
வைப்புக்காலம்: 5-10 வருடங்கள்
வட்டி விகிதம்: 8.5-8.8 விழுக்காடு
இந்த திட்டம் அரசாங்க ஊழியர்கள், வரி வசூலிக்கப்படும் தொழிலதிபர்கள் மற்றும் சம்பள வர்க்கத்தினர்களுக்காக வடிவமைக்கப்பட்டதாகும். இத்திட்டத்தில் முதலீடு செய்ய எந்த ஒரு வரம்பும் கிடையாது. மேலும் முதலீடு செய்யும் பணத்திற்கு எந்த விட வட்டி கழிதலும் கிடையாது. இந்த சான்றிதழ்களை அடமானமாக வைத்து வங்கிகளில் இருந்து கடன் பெறலாம். முதலீடு செய்யப்படும் பணத்தில் 1 லட்ச ரூபாய்க்கு உட்பட்ட பணத்திற்கு வருமான வரி சட்டத்தின் பிரிவு 80C-யின் கீழ் வரி விலக்கு அளிக்கப்படும்.
ஆயுள் காப்பீடு:
அஞ்சல் ஆயுள் காப்பீடு என்பது ஒருவர் இறந்த பின்பு அவர் சுட்டி காட்டிய நபருக்கு அரசாங்கம் கொடுக்கப்பட வேண்டிய தொகையின் ஒப்பந்தமாகும். ஒரு வேளை ஒப்பந்தம் முடிவு பெரும் நேரம் காப்பீடு செய்யப்பட்டவர் உயிருடன் இருந்தால் அந்த பணத்தை அவரே பெற்றுக் கொள்ளலாம். இந்த திட்டம் அரசாங்கம் மற்றும் அரசாங்கம் சார்ந்த நிறுவனத்தின் பணியாளர்களுக்கு மட்டுமே பொருந்தும். இவர்களுக்கு குறைந்த ப்ரீமியத்தில் அதிக போனஸ் அளிக்கப்படுகிறது.
காப்பீடு எடுத்தவர்கள் ப்ரீமியம் பணத்தை ப்ரீமியம் ரசீது புத்தகம் மூலமாக வைப்புத் தொகையாக கட்டலாம். ப்ரீமியத்திற்கான வைப்பு நிதியை அஞ்சல் துறையிலேயே வைக்கலாம். மத்திய அரசாங்க அலுவலகர்களின் சம்பளத்தில் இருந்து இந்த பணத்தை தானாகவே எடுத்துக் கொள்ளும் வசதியும் உள்ளது.