பெங்களூரு: ஜெர்மனி நாட்டின் ஆட்டோமொபைல் உற்பத்தி மற்றும் தொழில்நுட்ப நிறுவனமான போஷ் (BOSCH) இந்தியாவில் தனது வர்த்தகம், உற்பத்தி மற்றும் பணியாளர்களை அதிகரிக்க அடுத்த ஒரு வருடத்தில் சுமார் 650 கோடி ரூபாய் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜெர்மனி நாட்டின் அதிபர் ஏஞ்சலா மெர்கல் ஆகியோர் பெங்களூரில் உள்ள போஷ் நிறுவன தொழிற்சாலையைப் பார்வையிட்ட போது முதலீடு குறித்த அறிவிப்பை போஷ் இந்தியா நிர்வாகம் அறிவித்தது.
இந்தியாவில் போஷ் நிறுவனம்..
உலகச் சந்தையில், போஷ் நிறுவன வர்த்தகத்தில் இந்திய பொறியாளர்களின் பங்குகளிப்பு மிகவும் அதிகம், அதிலும் முக்கியமாக டேட்டா மைனிங் மற்றும் ஸ்மார்ட் உற்பத்தியில் இவர்களின் பங்கு எண்ணில் அடங்காதவை எனப் போஷ் இந்தியா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
புதுமை கண்டுபிடிப்புகள்
போஷ் நிறுவனத்தின் புதுமை கண்டுபிடிப்புகளுக்கு இந்தியா மையப்புள்ளி எனப் பீட்டர் டைரோலர் தெரிவித்தார். இவர் போஷ் நிறுவனத்தின் ஆசிய பசிபிக் பிராந்தியத்தின் நிர்வாக இயக்குனர்களில் ஒருவர்.
ஸ்மார்ட் உற்பத்தி
இந்தியாவில் உள்ள 14 உற்பத்தி தளங்களிலும் இனி ஸ்மார்ட் உற்பத்தியும் பங்கு வகிக்கும், இதற்கான பணிகள் வருகிற 2018ஆம் ஆண்டுக்குள் நிறைவடையும் எனப் போஷ் இந்தியா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
3 புதிய தொழிற்சாலை..
இந்திய சந்தையில் உற்பத்தியை அதிகரிக்கப் பிடாடி (கர்நாடகா), தமிழ்நாட்டில் சென்னை மற்றும் கங்கைகொண்டான் ஆகிய 3 பகுதிகளில் புதிய தொழிற்சாலையை அமைக்கப்பட உள்ளது.
இதற்காக அடுத்த ஒரு வருடத்தில் சுமார் 650 கோடி ரூபாய் வரை முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் போஷ் இந்தியா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
2014ஆம் ஆண்டில்
இந்நிறுவனம் 2014ஆம் ஆண்டில் மட்டும் இந்திய சந்தையில் சுமார் 500 கோடி ரூபாய் வரை முதலீடு செய்துள்ளதாகவும் தெரிவித்தது.
பெங்களூரு மற்றும் கோயம்புத்தூர்
ஜெர்மனி நாட்டிற்கு அடுத்தபடியாக இந்தியாவில் பெங்களூரு மற்றும் கோயம்புத்தூர் அலுவலகங்களில் சுமார் 12,000 ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப அதிகாரிகள் போஷ் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர்.