டெல்லி: இந்தியாவில் தங்க இறக்குமதியைக் குறைக்க, முதலீட்டாளர்களுக்குச் சாதகமான முதலீட்டுத் திட்டங்களை மத்திய அரசு வடிவமைத்து உள்ளது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று.
இத்திட்டங்களைத் தீபாவளி அன்று அறிமுகப்படுத்த உள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி இன்று அறிவித்தார். இத்திட்டங்கள் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி சாதகமான சூழ்நிலைகள் உருவாகும் எனத் தான் நம்புவதாக மோடி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
திட்டங்கள்
தங்க முதலீட்டு மற்றும் பத்திர திட்டங்கள் மட்டும் அல்லாமல் இந்நாளில் அசோக சக்கிரம் அச்சடிக்கப்பட்ட தங்க நாணயங்களையும் அரசு விற்பனைக்குக் கொண்டு வர உள்ளது.
பத்திர முதலீடு
தங்க பணமாக்கும் திட்டம் மற்றும் தங்க சவரன் திட்டம் ஆகிய பெயரில் மத்திய அரசு இரு முதலீட்டுப் பத்திரங்களை வெளியிடத் திட்டமிட்டுள்ளது.
முதிர்வு காலம் மற்றும் முதலீட்டு அளவு
இப்பத்திர முதலீட்டின் முதிர்வு காலம் 1- 15 வருடமாகவும், 5 கிராம், 10 கிராம், 100 கிராம் வரையில் முதலீடு செய்யும் விதமாகப் பத்திரங்களை மத்திய அரசு வடிவமைத்துள்ளது.
அதிகபட்சமாகத் தனிநபர் 500 கிராம் வரையில் முதலீடு செய்யலாம். இவை அனைத்தும் இந்திய குடிமக்களுக்கு மட்டுமே, இதில் என்ஆர்ஐ முதலீடு செய்ய முடியாது.
நிதி திரட்டுதல்
இத்திட்டத்தில் சுமார் 15,000 கோடி ரூபாய் வரை முதலீடு செய்யப்படும் என மத்திய அரசு கணக்கிட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் ஒப்புதல்
உள்நாட்டில் நிலவும் பற்றாக்குறையைத் தீர்க்கத் தங்க நாணயங்களை வெளியிடும் திட்டத்தை அருண் ஜேட்லி 2015ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் அறிவித்தார்.
இதன் பின் நாட்டில் தங்க இறக்குமதியைக் கட்டுப்படுத்த மோடியின் திட்ட வடிவமைப்பின் படி தங்க முதலீட்டுப் பத்திர வெளியீடுகளுக்கு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.