சான் பிரான்சிஸ்கோ: உலகின் மிகப் பெரிய தனியார் நிறுவனங்களில் ஒன்று ஆப்பிள். உலகின் மிகப் பெரிய பிராண்ட் ஆப்பிள். உலகிலேயே அதிக பங்கு மதிப்பு (மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன்) கொண்ட நிறுவனம் ஆப்பிள். ஆப்பிள் தான் உலகிலேயே ஒரு லட்சம் கோடி டாலர் சந்தை மதிப்பைத் தொட்ட நிறுவனம்.
இப்படி பல கேள்விகளுக்கு நம்பர் 1 பதில் ஆப்பிள். அப்படிப்பட்ட ஆப்பிள் நிறுவனத்திடமே சுமார் 600 மில்லியன் டாலர் பணம் வாங்கி விட்டு நிறுவனத்தை இழுத்து மூடி ஏமாற்றி இருக்கிறது ஒரு கண்ணாடி நிறுவனம்.
தற்போது இந்த வழக்கை அமெரிக்க பங்குச் சந்தை ஆணையம் (ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் கமிஷன்) விசாரித்து வருகிறதாம். அவர்களின் விசாரணையில் தான் ஆப்பிள் நிறுவனத்திடம் பணம் வாங்கிய விஷயமே தெரிய வந்திருக்கிறது.
கொஞ்சம் பின்னோக்கு
கடந்த 2013-ம் ஆண்டு ஆப்பிள் நிறுவனம் 578 மில்லியன் டாலர்களை ஒரு கண்ணாடிக்காக முதலீடு செய்தது. அந்த கண்ணாடியின் பெயர் சஃபயர் க்ளாஸ் (Sapphire Glass). தற்போது சந்தையில் இருக்கும் கொரில்லா க்ளாஸை விட தரமான உறுதியான இந்த ரக கண்ணாடிகளை, தன் ஐபோன்களில் பயன்படுத்த திட்டமிட்டது. ஏற்கனவே ஆப்பிள் நிறுவனம், தன் ஐபோன்களில் ஹோம் பட்டன்களில் இந்த ரக சஃபயர் கண்ணாடிகளைப் பயன்படுத்தியும் வந்தது. சஃபர் ரக கண்ணாடிகளை பெரிய அளவில் உற்பத்தி செய்ய, இந்த 578 மில்லியன் டாலரும் ஜிடி அட்வான்ஸ்டு டெக்னாலஜீஸ் நிறுவனத்தில் முதலீடு செய்தது ஆப்பிள்.
திவால்
ஆனால் அடுத்த ஆண்டே ஜிடி அட்வான்ஸ்டு டெக்னாலஜீஸ் நிறுவனம் கடையை பூட்டியது. தன்னிடம் இருந்த ஃபர்னஸ்கள் உட்பட பல சொத்துக்களை விற்று அடைக்க வேண்டிய கடன்களை எல்லாம் அடைத்துவிட்டு, கண்ணாடி உற்பத்தியில் இருந்தே வெளியேறியது. சந்தேகத்தின் பெயரில் சின்னதாகத் தொடங்கிய விசாரணையை, இப்போது அமெரிக்க பங்குச் சந்தை நெறிமுறையாளர்கள் பெரிய அளவில் முன்னெடுத்து வருகிறார்கள். ஜிடி நிறுவனத்தின் முன்னாள் முதன்மைச் செயல் அதிகாரி மீது சில வழக்குகளைப் பதிவு செய்து விசாரிக்கும் அளவுக்கு விசாரணை தீவிரமடைந்து வருகிறதாம்.
பொய் சொல்லியது
2014-ம் ஆண்டில் இருந்து ஜிடி நிறுவனத்தால் சஃபயர் ரக கண்ணாடிகளைத் தயாரிக்க முடியும். எனவே தங்கள் வருமானமும் 2014-ம் ஆண்டிலேயே அதிகரிக்கும் என சில இடங்களில் நம்பிக்கை கொடுத்திருக்கிறது ஜிடி நிறுவனத்தின் இயக்குநர் குழு. மேலும் ஜிடி நிறுவனத்தின், முதன்மைச் செயல் அதிகாரி உட்பட சில உயர் அதிகாரிகள் சொன்னதை நம்பித் தான், பல முதலீட்டாளர்கள் மில்லியன் கணக்கில், இந்த திவாலாகப் போகும், ஜிடி நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்திருக்கிறார்கள். இது தான் முதல் குற்றம். பொய் சொல்லி மக்களை முதலீடு செய்ய வைத்தது.
முதலீடு பெற்றது
2013-ம் ஆண்டிலேயே ஜிடி டெக்னாலஜீஸ் நிறுவனம் மோசமாக செயல்படுவதை உயர் அதிகாரிகள் கண்டு கொண்டார்கள். ஆனால் அதையும் தாண்டி, ஆப்பிள் நிறுவனத்திடம் இருந்து அந்த 578 மில்லியன் டாலர் முதலீட்டைப் பெற, ஜிடி நிறுவனத்தில் எல்லாமே சூப்பர் என்பது போல, பொய்யான தகவல்கள் மற்றும் தரவுகளைக் கொடுத்து முதலீட்டைப் பெற்றிருக்கிறார்கள். இந்த முதலீடு வந்ததால் தான் ஜிடி நிறுவனம் தன் கடன்களையாவது ஓரளவுக்கு ஒழுங்காக அடைக்க முடிந்தது என அமெரிக்க பங்குச் சந்தை ஒழுங்குமுறை ஆணையமும் சொல்கிறது. இது இரண்டாம் தவறு. பொய் சொல்லி ஆப்பிளிடம் இருந்து பணத்தைப் பறித்தது.
தவறாக கணக்கு காட்டியது
ஜிடி நிறுவனம் தன் நிதி நிலை அறிக்கைகளில் ஆப்பிள் நிறுவனத்துக்கு 300 மில்லியன் டாலர் கொடுக்க வேண்டி இருப்பதாக, பொய் கணக்கு வேறு காட்டி இருக்கிறார்களாம். இந்த பொய்க் கணக்கு ஒட்டு மொத்த ஜிடி டெக்னாலஜீஸ் நிறுவனத்தையும் ஒரு அழுத்தத்தில் தள்ளியது போலவே, திவாலாவது போலவே பார்ப்பவர்களை நம்ப வைத்திருக்கிறது.
தற்போது அமெரிக்க பங்குச் சந்தைகளில் வர்த்தகம் மேற்கொள்ளும் வர்த்தகர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் அனைவருமே "ஆளானப்பட்ட ஆப்பிள் நிறுவனத்திடமே கதை விட்டு காசை கரெக்ட் செய்திருக்கிறார்களே, இந்த புத்தியை கண்ணாடி தயாரிப்பில் காட்டி இருந்தால் நல்ல பெயராவது மிஞ்சி இருக்குமே" என ஜிடி டெக்னாலஜீஸ் நிறுவனத்தை அன்னாந்து பார்க்கிறார்களாம்.