டெல்லி : பிரதமர் மோடி தலைமையிலான அரசு, கடந்த ஆகஸ்ட் 5, 2019 அன்று ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டபிரிவு 370 மற்றும் 35A-வினை திரும்ப பெற்றது.
மேலும் இம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து அறிவித்தது. இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்ட ஒரு மாத இடைவெளியில் மோடி அரசு பல அதிரடியான அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறது.
குறிப்பாக ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அஸ்தஸ்தை கொடுக்கும் சட்டப்பிரிவை நீக்கியதையடுத்து, ஜம்மு காஷ்மீரும் சிறந்த வர்த்தக தலமாக மாறும் என்றும், மேலும் முதலீடுகள் அதிகரிக்கும் என்றும் கூறப்பட்டு வந்தது.
இந்த நிலையில் ஜம்மு காஷ்மீரில் முதலீடு செய்ய பல பெரிய முதலீட்டாளர்களும் ஆர்வம் தெரிவித்து வந்தனர். இந்த நிலையிலேயே ஜம்மு & காஷ்மீரை மேம்படுத்த 8,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் என்றும், இதன் முதல் கட்டமாக நடப்பு பருவத்தில் ஆப்பிள் அறுவடைக்காக 2,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஆப்பிள் உற்பத்தியாளர்கள் சந்தையில், தங்கள் விளைபொருட்களை விற்க வேண்டாம் என்றும் பயங்கரவாதிகள் அச்சுறுத்தியதை அடுத்து, இந்த பருவத்தில் இம்மாநிலத்தில் விளையும், 60 சதவிகித ஆப்பிள்களை அரசு நடத்தும் தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு கொள்முதல் செய்யும் என்றும் கூறப்படுகிறது.
இதன் படி இந்த கூட்டமைப்பானது கொள்முதல் செய்வதன் மூலம், அடுத்த 48 மணி நேரங்களுக்குள், சந்தை தலையீட்டு விலைத்திட்டம் மூலம் (MISP), விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக செலுத்தப்படும் பணம் என்றும் கூறப்பட்டுள்ளது.
அதேபோல இந்த ஆப்பிள்களின் தரங்களை பரிசோதிப்பதற்காக ஒவ்வொரு மண்டிகளிலும் ஒரு தரக்கட்டுப்பாட்டாளர் நியமிக்கப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் உத்தியோக பூர்வ தகவல்களின் படி, நாட்டில் விளையும் மொத்த பழங்களில், குறிப்பாக காஷ்மீர் 91 சதவிகிதம் அக்ரூட் பருப்புகளையும், 90 சதவிகிதம் பாதாம், செர்ரி மற்றும் குங்குமப்பூ, இது தவிர ஆப்பிள் 70 சதவிகித உற்பத்தியும், இதன் மூலம் ஆண்டுக்கு மொத்த 7,000 கோடி ரூபாய் பரிவர்த்தனையும் செய்து வருகிறது என்றும் கூறப்படுகிறது. மத்திய அரசு இந்த திட்டத்தின் மூலம் இந்த பரிவர்த்தனையானது இன்னும் மேம்படுவதோடு, வர்த்தகமும் அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை.