இந்திய ஐடித் துறை பல பிரச்சனைகளுக்கு மத்தியில் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்து வருகிறது, ஒருபக்கம் ஊழியர்கள் தொடர்ந்து வெளியேறி வருவதால் பங்குச்சந்தையில் ஐடி நிறுவனப் பங்குகள் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதற்கிடையில் வல்லரசு நாடுகளில் ரெசிஷன் அச்சம் மிகவும் அதிகமாக உள்ளது, இது ஐடி மற்றும் டெக் சேவைக்கான முதலீட்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
இதேவேளையில் ஊழியர்கள் WFH-ஐ விட்டு அலுவலகத்திற்கு வர தொடர்ந்து தயக்கம் காட்டி வருவது ஐடி நிறுவனங்களுக்குப் பெறும் பிரச்சனையாக உள்ளது.
பிரச்சனையும் தீர்வும்
பிரச்சனை -ன்னு ஒன்னு வந்தால் தான் தீர்வுன்னு ஒன்னு கிடைக்கும் என்பது போல ஐடி ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைக்க வேண்டிய இலக்கு இருக்கும் இதேவேளையில் செலவுகளைக் குறைக்கும் முக்கியமான முடிவுகளைப் பெரிய ஐடி சேவை நிறுவனங்களைக் காட்டிலும் சிறிய ஐடி நிறுவனங்கள் எடுத்து வருகிறது.
கோயம்புத்தூர்
இந்தியாவில் இருக்கும் முன்னணி ஐடி சேவை மற்றும் டெக் நிறுவனங்கள் பெரு நிறுவனங்களில் செலவுகளைக் குறைக்க வேண்டும் என்பதற்காக 2ஆம் தர நகரங்களுக்கு அலுவலகத்தைத் திறந்து வருகிறது. இதன் படி சென்னையைத் தொடர்ந்து கோயம்புத்தூரில் டிசிஎஸ், டெக் மஹிந்திரா, விப்ரோ, சிடிஎஸ், அமேசான் போன்ற பல நிறுவனங்களை அமைத்துள்ளது.
மதுரை, திருநெல்வேலி
இந்நிலையில் ஐடி துறையில் இருக்கும் சிறிய மற்றும் நடுத்தர ஐடி சேவை நிறுவனங்கள் கோயம்புத்தூர்-ஐ விடுத்து மதுரை, திருநெல்வேலி மாவட்டத்தில் புதிய அலுவலகங்களைத் திறந்துள்ளது. இதன் மூலம் ஐடி துறையில் மதுரை, திருநெல்வேலி மாவட்ட பட்டதாரிகளுக்கு அதிகப்படியான வேலைவாய்ப்புகள் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. அப்படி எந்தெந்த நிறுவனங்கள் வந்துள்ளது.
3 நிறுவனங்கள்
தற்போது கிடைத்துள்ள தகவல் படி மதுரையில் ராம்கோ சிஸ்டம்ஸ் அலுவலகத்தை அமைக்கிறது; அக்சஸ் ஹெல்த்கேர் மதுரை அலுவலகத்தை அமைக்கத் தீவிரமாகத் திட்டமிடுகிறது, மேலும் 3i இன்ஃபோடெக் திருநெல்வேலி-யில் Centre of Excellence அமைக்கிறது.
ராம்கோ சிஸ்டம்ஸ்
ராம்கோவின் தலைமை இயக்க அதிகாரி சந்தேஷ் பிலாகி கூறுகையில், WFH-ல் சென்ற ஊழியர்கள் சென்னை அலுவலகத்திற்குத் திரும்பத் தயங்கி வருகின்றனர், கட்டாயப்படுத்தினால் பணியை விட்டு வெளியேறத் தயாராக உள்ளனர். இதனால் கோயில் நகரமான மதுரை-யில் புதிய அலுவலகத்தைத் தொடங்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மதுரையில் பல பொறியியல் கல்லூரிகளால் சூழப்பட்டு இருக்கும் நிலையில் சுமார் 250 ஊழியர்களைப் பணியமர்த்தத் திட்டமிட்டுள்ளது.
3i இன்ஃபோடெக்
3i இன்ஃபோடெக் நிர்வாக இயக்குநர் மற்றும் குளோபல் CEO தாம்சன் ஞானம் கூறுகையில் WFH-ல் சென்ற ஊழியர்கள் பெரு நகரங்களில் இருக்கும் அலுவலகத்திற்குத் திரும்ப வர தயங்கி வரும் நிலையில், திருநெல்வேலி போன்ற 2ஆம் தர நகரங்களில் அலுவலகத்தை அமைக்க முடிவு செய்துள்ளோம்.
திருநெல்வேலி
திருநெல்வேலியில் பல பொறியியல் கல்வி நிறுவனங்கள் உள்ளன மற்றும் தென்னிந்தியாவில் உயர் தொழில்நுட்பக் கல்விக்கான சென்டர் ஆக இம்மாநிலம் தன்னை நிலைநிறுத்திக் கொண்டு உள்ளது. இதனால் Centre of Excellence அமைப்பதற்கு உகந்த இடமாக உள்ளது என்றார்.