கெளவுஹாத்தி, அஸ்ஸாம் : இந்திய மண்ணில் ஒரு மனிதன் சொந்த வீடு, கார், நல்ல சம்பளத்துக்கு வேலை எல்லாம் கூட இல்லாமல் வாழ்ந்து விடலாம். ஆனால் தங்கம் என்கிற உலோகத்தை தொடாமல், தங்கத்தை வாங்காமல் தங்கள் வாழ்க்கையை ஓட்ட முடியாது.
இறை வழிபாடு தொடங்கி, குடும்ப விசேஷங்கள் வரை தங்கம், நம் மக்கள் வாழ்வின் ஒரு அங்கம்.
அப்படிப்பட்ட தங்கத்தின் விலை இந்த 2019-ல் கொஞ்சம் அதிக ஏற்றத்துடனேயே விற்பனை ஆகி வருகிறது. ஆனால் ஒரு சிலருக்கு 10 கிராம் தங்கத்தை அரசாங்கமே இலவசமாக கொடுக்க இருக்கிறது. யாருக்கு..?
என்ன சலுகை
வரும் ஜனவரி 2020 முதல், அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த பெண்கள், திருமணம் செய்து கொள்ளும் போது, 10 கிராம் தங்கத்துக்கு இணையான பணத்தை கொடுக்க அஸ்ஸாம் அரசு முன் வந்து இருக்கிறது. இதை அஸ்ஸாம் மாநிலத்தின் நிதி அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா நேற்று சொல்லி இருக்கிறார்.
யார் எல்லாம் தகுதி
அஸ்ஸாம் மாநில பெண்கள்
1. குறைந்தபட்சம் 10-ஆம் வகுப்பு (Matriculate) வரையாது படித்து இருக்க வேண்டும். (தேயிலை மலைவாழ் மக்கள் (TEa Tribes)மற்றும் ஆதிவாசிகளுக்கு இது பொருந்தாது.)
2. திருமணத்தின் போது, பெண்ணுக்கு வயது 18-க்கு மேல் இருக்க வேண்டும்.
3. திருமணத்தின் போது, ஆணுக்கு வயது 21-க்கு மேல் இருக்க வேண்டும்.
வேறு என்ன
திருமணம் செய்து கொள்ளும் பெண் வீட்டாரின் ஆண்டு வருமானம் 5 லட்சம் ரூபாய்க்குக் கீழ் இருக்க வேண்டும். அதோடு மிக முக்கியமாக, இந்த சலுகை பெறும் பெண், தன் திருமணத்தை சிறப்பு திருமணச் சட்டம் 1954-ன் கீழ் பதிவு செய்ய வேண்டும்.
செலவு
இந்த திட்டத்தால், அதாவது அஸ்ஸாம் மாநில பெண்கள் திருமணம் செய்து கொள்ளும் போது, 10 கிராம் தங்கத்துக்கு இணையான பணத்தைக் கொடுக்கும் அருந்ததி திட்டத்தால், அரசுக்கு சுமார் 800 கோடி ரூபாய் செலவாகும் எனச் சொல்லி இருக்கிறார் நிதி அமைச்சர்.
தங்கம்
தங்கத்தை வாங்கிக் கொடுப்பதில் சில நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதால், தங்கத்துக்கு பதிலாக, 10 கிராம் தங்கத்துக்கு இணையாக 30,000 ரூபாய் வழங்க இருக்கிறார்களாம். கடந்த நிதி ஆண்டின் சராசரி தங்க விலையைத் தான் தற்போது 10 கிராம் தங்கத்துக்கு விலையாக நிர்ணயித்து கொடுக்க இருக்கிறார்களாம். எதிர்காலத்தில் சராசரி விலை உயர்ந்தால், 10 கிராம் தங்கத்துக்கான பணமும் உயரும்.
என்ன பயன்
இந்த அருந்ததி திட்டத்துக்கு சமீபத்தில் தான் மத்திய கேபினெட் அமைச்சரவை அனுமதி கொடுத்தது. இந்த திட்டத்தை அஸ்ஸாம் அரசு தன் 2019 - 20 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டிலும் குறிப்பிட்டது. இந்த திட்டத்தால், திருமணங்கள் பதிவு செய்யப்படும் வழக்கம் அதிகரிக்கும் என நம்புகிறது மாநில அரசு.
திருமண சிக்கல்
பொதுவாக அஸ்ஸாமில் திருமணங்களைப் பதிவு செய்து கொள்வது மிகவும் குறைவு. திருமணத்துக்குப் பின் ஏற்படும் பல சிக்கல்களில் பெண்கள் தான் மாட்டிக் கொள்கிறார்கள். இந்த திட்டத்தின் வழியாக 10 கிராம் தங்கத்துக்கான பணத்தைப் பெற, நிறைய பேர் தங்கள் திருமணத்தை பதிவு செய்வார்கள் என்கிறார் நிதி அமைச்சர்.