ஒரு பக்கம் எல்லையில் இந்திய மற்றும் சீன ராணுவ வீரர்கள் சண்டையிட்டு நாட்டின் பாதுகாப்புக்காக உயிரை இழந்து வரும் நிலையில், மறுபக்கம் சீனாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி இந்தியாவில் கொரோனா மூலம் பாதிக்கப்பட்ட பல லட்ச மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த சுமார் 750 மில்லியன் டாலர் அளவிலான கடனை கொடுத்துள்ளது.
செவ்வாய்க்கிழமை இரவு முதல் நாடு முழுவதும் இந்திய எல்லையில் இரு நாட்டு ராணுவங்கள் மத்தியில் நடத்தச் சண்டை மற்றும் உயிரிழப்புகள் பற்றிய அதிகம் பேசப்பட்டு வருகிறது. இதேபோன்று சீன ஊடகங்கள் மற்றும் சீன பத்திரிக்கையாளர்களும் இத்தாக்குதலைப் பற்றித் தான் டிவிட்டர் போன்ற சமூக ஊடகங்களில் அதிகம் பேசி வருகின்றனர்.
இப்படியிருக்கும் சூழ்நிலையில் சீன வங்கியான AIIB இந்தியாவிற்கு 750 மில்லியன் டாலர் கடன் கொடுத்துள்ளது, அதை எவ்விதமான மறுப்புமின்றி இந்தியாவும் ஏற்றுக்கொண்டுள்ளது.
2வது முறை
AIIB என்கிற ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையின் படி Covid-19 Crisis Recovery Facility (CRF) திட்டத்தின் வாயிலாக இந்தியாவிற்கு 2வது முறையாகக் கொரோனா பாதிப்புகளை எதிர்கொள்ள 2வது முறையாக நிதியை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என AIIB தெரிவித்துள்ளது.
மொத்த கடன்
AIIB வங்கி இதற்கு முன்பு இந்தியாவிற்குக் கொரோனா பாதிப்புகள் எதிர்கொள்ள 500 மில்லியன் டாலர் கொடுத்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தியாவிற்கு AIIB வங்கி இதுவரை சுமார் 3.06 பில்லியன் டாலர் அளவிலான நிதியைக் கடனாகக் கொடுத்துள்ளது.
ஏற்கனவே இந்திய அரசு சீனா முதலீடுகளைத் தடை செய்யப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் இந்த நேரத்தில் மத்திய அரசு சீனாவில் இருந்து கடனையும் பெறுகிறது, தனியார் நிறுவனங்களில் முதலீட்டையும் பெற்று வருகிறது. இதனால் மக்கள் குழப்பத்தில் உள்ளனர்.
கிரேட் வால் மோட்டார்ஸ்
சீனாவின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனமான கிரேட் வால் மோட்டார்ஸ் கம்பெனி லிமிடெட், மகாராஷ்டிராவில் 1 பில்லியன் டாலர் அல்லது சுமார் 7,600 கோடி ரூபாய் முதலீடு செய்ய உறுதியளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மாநில அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
அலிபாபா
அலிபாபா கிளவுட் சேவையானது இந்த நிதியாண்டில் 283 மில்லியன் அமெரிக்கா டாலரை முதலீடு செய்யப் போவதாக அறிவித்துள்ளது, இதன் இந்தியா மட்டும் அல்லாமல் சர்வதேச கிளவுட் வர்த்தகச் சேவையில் மிகப்பெரிய போட்டியை உருவாக்க அலிபாபா முடிவு செய்துள்ளது, இந்த முதலீட்டில் பெரும் பகுதி இந்தியாவிற்கு வருவதாகத் தெரிகிறது.
AIIB வங்கி
உலக வங்கி மற்றும் ஐஎம்பி வங்கிகளின் ஆதிக்கத்தைக் குறைப்பதற்காகச் சுமார் 100 பில்லியன் டாலர் நிதியை முன்வைத்து ஆசிய நாடுகளின் உள்கட்டமைப்பு, சமுகப் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு நிதியுதவி செய்ய இந்த வங்கி 2016ஆம் ஆண்டுத் துவங்கப்பட்டது. சுமார் 2013ஆம் ஆண்டுச் சீன அதிபர் ஐநா முன்னிலையில் இவ்வங்கி உருவாக்குவதற்கான கோரிக்கையை முன்வைத்து 16 ஜனவரி 2016 முதல் துவங்கப்பட்டது.