இந்தியர்களின் எமோஷனல் உலோகமான தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
கடந்த 2019-ம் ஆண்டையும் கணக்கில் எடுத்துக் கொண்டால், கடந்த ஜனவரி 08, 2020 புதன் கிழமை அன்று தங்கம் தன் உச்ச விலையைத் தொட்டது என்று சொல்லலாம்.
அதற்குப் பின் ஒரு நல்ல விலை இறக்கத்தைக் காட்டியது தங்கம். ஆனால் இப்போதே மீண்டும் தன் பழைய உச்ச விலையை நோக்கி பறந்து கொண்டு இருக்கிறது.
விலை உச்சம்
கடந்த ஜனவரி 08, 2020 புதன் கிழமை அன்று 24 கேரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை 4,286 என ஒரு பவுன் தங்கத்தின் விலை 34,288 ரூபாய்க்கு விற்பனை ஆனது. 22 கேரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை 3,927 என ஒரு பவுன் தங்கத்தின் விலை 31,416 ரூபாய்க்கு விற்றார்கள்.
விலை இறக்கம்
கடந்த ஜனவரி 08 விலை உச்சத்துக்குப் பின், கடந்த ஜனவரி 16, 2020 வியாழன் அன்று 24 கேரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை 4,100 என ஒரு பவுன் தங்கத்தின் விலை 32,800 ரூபாய்க்கு விற்பனை ஆனது. 22 கேரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை 3,802 என ஒரு பவுன் தங்கத்தின் விலை 30,416 ரூபாய்க்கு விற்றார்கள். இது தான் ஜனவரி 08-க்குப் பிறகு விற்பனையான குறைந்தபட்ச விலை.
மீண்டும் ஏற்றம்
ஜனவரி 16, 2020-க்குப் பிறகு மீண்டும் தங்கத்தின் விலை பயங்கரமாக அதிகரிக்கத் தொடங்கி தற்போது பிப்ரவரி 03, 2020 மீண்டும் கிட்டத் தட்ட உச்ச விலையைத் தொட்டு இருக்கிறது. போகிற போக்கைப் பார்த்தால் தங்கத்தை எல்லாம் கண்காட்சிக்கு வைத்து விட்டுப் பார்க்க வேண்டி இருக்கும் போலிருக்கிறது.
இன்றைய விலை
இன்று பிப்ரவரி 03, 2020, 24 கேரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை 4,277 என ஒரு பவுன் தங்கத்தின் விலை 34,216 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. 22 கேரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை 3,924 என ஒரு பவுன் தங்கத்தின் விலை 31,392 ரூபாய்க்கு விற்று வருகிறார்கள்.
இந்திய காரணிகள்
இந்த பட்ஜெட் 2020-ல் பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு எதுவும் பெரிதாக இல்லை என்பதைப் பார்த்தாலே தெரிகிறது. ஆகையால் தான் சென்செக்ஸ் பட்ஜெட் நாளில் 1000 புள்ளிகள் சரிந்தது குறிப்பிடத்தக்கது. எனவே இந்திய பங்குச் சந்தை முதலீட்டாளர்கள், தங்கத்தில் முதலீடு செய்யும் வாய்ப்பு அதிகரித்தால் மேலும் தங்கத்தின் விலை அதிகரிக்கலாம்.
உலக காரணி - கொரோனா
கொரோனா வைரஸால், ஒட்டு மொத்த உலக பொருளாதாரமும் சில சிக்கல்களை எதிர் கொண்டு வருகிறது. சீன பங்குச் சந்தை ஒரே நாளில் சுமாராக 8 சதவிகிதம் சரிந்து இருப்பது உலக பொருளாதாரத்தில் ஒரு நிலையற்றதன்மை உருவாவதைத் தெளிவாக காட்டுகிறது. எனவே உலக முதலீட்டாளர்களும் பங்குச் சந்தையை விடுத்து, தங்கத்தில் தஞ்சம் புகுந்தால் மேலும் தங்கத்தின் விலை அதிகரிக்கலாம்.
சமீபத்தைய எடுத்துக்காட்டு
அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையிலான வர்த்தகப் போரின் போது, தங்கத்தின் விலை டாப் கியர் போட்டு விலை அதிகரித்ததை நாமே கண் கூடாகப் பார்த்தோமே. இப்போது மீண்டும் சீனாவில் கொரோனா வைரஸ் என்றால் மீண்டும் உலக பொருளாதாரம் அடி வாங்காதா என்ன..?
கச்சா எண்ணெய்
உலகின் மிகப் பெரிய கச்சா எண்ணெய் இறக்குமதி நாடான சீனா, கொரோனா வைரஸ் பாதிப்பால், தன் விமானங்களை ரத்து செய்வது தொடங்கி சாலை போக்குவரத்துகளைக் கூட மேற்கொள்ள வேண்டாம் என தன் மக்களுக்கு அறிவுறுத்திக் கொண்டு இருக்கிறார்கள். இதனால் கச்சா எண்ணெய் வியாபாரம் பெரிதும் தேக்கம் கண்டு இருக்கிறது.
விலை நிலவரம்
ஒரு பேரல் பிரண்ட் கச்சா எண்ணெய் விலை ஜனவரி 06-ம் தேதி 68 டாலராக இருந்தது. ஆனால் இப்போது 56 டாலருக்கு சரிந்து இருக்கிறது என்றால் நிலைமையைப் புரிந்து கொள்ளலாம். எனவே மீண்டும் தங்கம் டாப் கியர் போட்டு விலை ஏற்றம் காண அதிக வாய்ப்பு இருக்கிறது. எதையும் தாங்க தயாராக இருங்கள் மக்களே..!